Wednesday, February 21, 2007

வெடிகுண்டுகளுடன் பிடிபட்ட படகு தகர்க்கப்பட்டது

பிடிபட்ட புலிகள் படகு நடுக்கடலில்...தூள்!:
8 நாள் புதிருக்கு விடையாக அழிப்பு

சென்னை:எட்டு நாட்களுக்கு முன் பாக் ஜலசந்தி அருகே பிடிபட்ட விடுதலைப் புலிகளின் படகு நடுக்கடலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு தூள் தூளாக தகர்க்கப்பட்டது.

அப்படகின் பக்கவாட்டுச் சுவர்களில், வெளியில் தெரியாத வகையில் 500 கிலோ அதிபயங்கர வெடி பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாலும், அதை வெளியில் எடுக்க முடியாது என்ற காரணத்தினாலும், அப்படகு நேற்று பகல் 11 மணிக்கு நடுக்கடலுக்கு இழுத்துச் செல்லப்பட்டு வெடி வைத்து தகர்க்கப்பட்டது..

இந்தியா, இலங்கைக்கு இடையே நடுக்கடலில், பாக் ஜலசந்தி அருகே கடலோர காவல் படையின் "ரமாதேவி' என்ற கப்பல் பத்து நாட்களுக்கு முன் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. அப்போது, நடுக்கடலில் பைபர் படகு ஒன்று நின்று கொண்டிருந்தது. அப்படகில் ஐந்து பேர் இருந்தனர். அவர்களை கேட்ட போது, "இன்ஜின் பழுதாகி விட்டது; சரி செய்து கொண்டிருக்கிறோம்' என்று கூறினர். இதையடுத்து, கடலோர காவல் படையினர் சென்று விட்டனர். மறுநாளும் அதே இடத்தில் அப்படகு இருந்தது கடலோர காவல் படைக்கு சந்தேகத்தை எழுப்பியது. உடனே, அப்படகை கடலோர காவல் படையினர் சோதனையிட முடிவு செய்து, படகிற்கு சென்ற போது அதிர்ந்தனர். படகில் ஏ.கே., 56 ரக துப்பாக்கி, அத்துப்பாக்கிக்கு தேவையான 124 குண்டுகள், ஐந்து கையெறி குண்டுகள், சாட்டிலைட் போன், டெட்டனேட்டர், மனித வெடிகுண்டுக்காக பயன்படுத்தப்படும் தற்கொலை ஜாக்கெட், எட்டு பேரல்களில் திரவ ரசாயனம் ஆகியவை இருந்தன.பிடிபட்ட படகை, கடலோர காவல் படையினர் சென்னைக்கு எடுத்து வந்தனர். அப்படகில் இருந்தவர்களும் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். கடலோர காவல் படை நடத்திய விசாரணையில், இப்படகில் இருந்தவற்றை கடலூரில் ஒப்படைக்க வந்ததாக தெரிவித்தனர். கடலோர காவல் படையினரிடம் இருந்து பிடிபட்ட ஐந்து பேரையும் "கியூ' பிரிவு போலீசார், மத்திய உளவுப் பிரிவினர் மற்றும் சென்னை நகர போலீசார் தீவிர விசாரணைக்கு உட்படுத்தினர். இதில் பிடிபட்ட ஐந்து பேரில் நான்கு பேர் இலங்கை தமிழர்கள் என்பதும், அதில் இரண்டு பேர் விடுதலைப்புலிகள் அமைப்பின் கடற்புலிகள் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரிந்தது. கடற்புலிகள் பிரிவில் செயல்படும் அருமைநாயகம் புருஷோத்தமன், சிவபத்மநாபன் ஆகியோர் தான் முக்கியமானவர்கள் என்பதால், இவர்களிடம் கடந்த ஒரு வாரமாக தீவிர விசாரணை நடந்து வந்தது.

மனித வெடிகுண்டாக மாறி வெடிக்கச் செய்யும் தற்கொலை ஜாக்கெட் படகில் இருந்தது தான் "கியூ' பிரிவு போலீசுக்கு கடும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியை படுகொலை செய்ய வைத்தது மனித வெடிகுண்டு தான். அந்த வகையில், 14 கிலோ எடையுடைய தற்கொலை ஜாக்கெட்டை எடுத்துக் கொண்டு இந்திய கடலோரப் பகுதிகளில் சுற்றித் திரிந்தது ஏன்? என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அப்போது தான் அதிபயங்கர தகவல் கிடைத்தது. புலிகள் வந்த படகு புத்தம் புதிய படகு. பைபரால் செய்யப்பட்டது. படகில் பக்கவாட்டு சுவர் பகுதிகளில் 500 கிலோ எடையுள்ள வெடி மருந்து பொருட்கள் பதுக்கி, அதை பைரறக தகடால் சீல் வைத்திருப்பதாக தெரிவித்தனர். இத்தகவல் நேற்று முன்தினம் பிற்பகலில் தெரிவித்ததும், "கியூ' பிரிவு போலீசார் மேலும் தீவிர விசாரணை நடத்தினர். அப்படகை உடனே சோதனை நடத்தும்படி உத்தரவிடப்பட்டது. கடலோர காவல் படையின் வெடிகுண்டு நிபுணர் படை ஓடி வந்தது. படகை சோதனையிட்ட போது, படகில் வெடி மருந்து இருப்பது ஊர்ஜிதப்படுத்தப்பட்டது. அந்த வெடி மருந்து பொருட்களை எடுக்கவே முடியாது; துறைமுகத்தில் வைத்து செயலிழக்கவும் செய்ய முடியாது. அப்படி செய்தால், சென்னை நகரத்துக்கே பெரும் ஆபத்து ஏற்படும் என்று வெடிகுண்டு நிபுணர்கள் தெரிவித்து விட்டனர்.

இது தொடர்பாக மத்திய, மாநில உள்துறை அதிகாரிகளும் கடலோர காவல் படையின் உயர் அதிகாரிகளும் ஆலோசனை நடத்தினர். நடுக்கடலுக்கு படகை இழுத்துச் சென்று வெடிக்கச் செய்வது என்று முடிவெடுக்கப்பட்டது. உடனே படகை வெடிக்கச் செய்வது தொடர்பான தகவலை ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் தெரிவித்து விட்டு, அதற்கான உத்தரவும் பெறப்பட்டது. நேற்று அதிகாலை 5 மணிக்கு கடலோர காவல் படையின் "அவ்வையார்' கப்பல் மூலம் புலிகளின் படகு இழுத்துச் செல்லப்பட்டது. பகல் 10.15 மணிக்கு "அவ்வையார்' கப்பல் நின்றது. புலிகளின் படகு மற்றொரு ரப்பர் படகு மூலம் இழுத்துச் செல்லப்பட்டது. சென்னையிலிருந்து 20 கடல் மைலுக்கு (37 கிலோ மீட்டர்) அப்பால் படகை எடுத்துச் சென்று நிறுத்தினர். புலிகளின் படகிற்கு ரப்பர் படகு மூலம் வெடிகுண்டு நிபுணர்கள் சென்றனர். புலிகளின் படகில் இருந்த வெடி மருந்துகளுடன் கிரானைடு இணைக்கப்பட்டது. அதை "டைம் டிவைசர்' மூலம் வெடிக்கும்படி செய்யப்பட்டது. 40 நிமிடங்கள் கழித்து புலிகளின் படகு வெடிக்கும் வகையில் வெடிகுண்டு நிபுணர்கள் செய்துவிட்டு, ரப்பர் படகு மூலம் "அவ்வையார்' கப்பலுக்கு வந்து விட்டனர். அப்படகு பகல் 11 மணிக்கு வெடித்து சிதறியது. நெருப்பு பிழம்பாக நடுக்கடலில் அக்காட்சி தெரிந்தது. புலிகளின் படகு வெடித்து சிதறியதை கடலோர காவல் படையின் அதிகாரிகள் பல மைல்களுக்கு அப்பால் இருந்தபடி பார்த்தனர். போலீஸ் காவலில் இருக்கும் விடுதலைப்புலிகளிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

படகில் வந்த புலிகள் நெஞ்சுரம் படைத்தவர்கள்: கடலோர காவல் படையிடம் பிடிபட்டவர்களில் இரண்டு பேர் புலிகளின் அமைப்பில் தீவிர பயிற்சி பெற்றவர்கள். அருமைநாயகம் புருஷோத்தமன், சிவபத்மநாபன் ஆகிய இருவரும் தான் இப்படகை எடுத்துக் கொண்டு, புலிகளுக்கு தேவையான பொருட்களை சப்ளை செய்வது வழக்கம். அவர்களை இலங்கை கடற்படையினர் பிடிக்க முற்பட்டால், படகை வெடிக்கச் செய்து, இலங்கை வீரர்களை அழிக்கச் செய்து விடுவார்களாம். இந்திய கடற்படை பிடித்ததால், எந்தவித எதிர்ப்பும் காட்டாமல் பணிந்து விட்டதாக விசாரணையில் தெரிவித்துள்ளனர். தவிரவும் சிறிதும் சோர்வோ, தயக்கமோ இன்றி அவர்கள் இருவரும் விசாரணையின் போது சிரித்தபடியே எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லியது; அதிகாரிகளை ஆச்சரியத்துக்கு கொண்டு போனது. "அவர்களின் மூளையில் இலங்கைக்கும், விடுதலைப் புலிகளுக்கும் நடக்கும் போர், இதுவே இறுதியானது என்ற வகையில் நன்றாக பதிந்து விட்டது' என்று விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர். "இரண்டு பேரும் அழுத்தமானவர்கள் மட்டுமல்ல; கடும் நெஞ்சுரம் படைத்தவர்களாகவே இருக்கின்றனர்' என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

டி.என்.டி., என்றால் என்ன?:புலிகளின் படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிப்பொருளின் பெயர் டி.என்.டி., என்று அழைக்கப்படுகிறது. "ட்ரை நைட்ரோ டொலுவீன்' என்பதின் சுருக்கம் தான் டி.என்.டி. இது ஆரம்பத்தில் சாயப்பொருளாகத் தான் பயன்படுத்தப்பட்டது. முதல் உலகப் போரில் இதை வெடிபொருளாக பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். மஞ்சள் நிற திடப்பொருளான டி.என்.டி., மிகுந்த விஷத்தன்மை கொண்டது. அமெரிக்க ராணுவத்தில் அதிகமாக பயன்படுத்தப்படுவது டி.என்.டி., தான். இப்பொருள் வெடிக்கும் போது, மனிதனுக்கு பல்வேறு உபாதைகள் ஏற்படும். கல்லீரல் கடுமையாக பாதிக்கும். நுரையீரலிலும், கல்லீரலிலும் ரத்தம் வரும். மூச்சுத்திணறல் ஏற்படும். ஆண் தன்மை மங்கிப் போகும். உடலில் டி.என்.டி., பட்டால் மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறமாக தோல் மாறிவிடும். தோல் மீது பட்டதும் எரிச்சல் ஏற்படும். டி.என்.டி., தண்ணீரில் கரையாது. தண்ணீரை உறிஞ்சவும் செய்யாது. ஈரமான இடத்தில் கூட டி.என்.டி.,யை வெடிக்க வைக்க முடியும். அதற்காகத்தான் படகில் டி.என்.டி., வெடிபொருளை கொண்டு வந்து வெடிக்க வைக்க திட்டமிட்டுள்ளனர்.

4 comments:

Anonymous said...

source சிந்தாநதி ? ;)

Anonymous said...

source தினமலர் (labels- பார்க்க)

posted by சிந்தாநதி

பத்திரிகைகளில் வரும் செய்திகளின் விரிவான வடிவத்தை இங்கே தருகிறோம். அவ்வளவுதான்

editor : newsintamil

Anonymous said...

understood. a suggestion; While giving the news if you put the source on the top, it is also helpful for people like me to read or not.

For instance, when it comes from தினமலர், I may like to pass. That's why. Thanks.

Anonymous said...

உங்கள் விருப்பம் நிறைவேற்றப் பட்டுள்ளது.