Friday, November 24, 2006

கருணாநிதிக்கு சால்வை போட்ட சரத்-ராதாரவி

Image and video hosting by TinyPicநவம்பர் 24, 2006

சென்னை: சென்னையில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் கருணாநிதிக்கு, சமீபத்தில் அதிமுகவிலிருந்து விலகிய நடிகர் சரத்குமார் சால்வை அணிவித்து வணங்கினார்.

தனது மனைவி ராதிகா சகிதமாக திமுகவை விட்டு அதிமுகவில் இணைந்த சரத்குமார் சமீபத்தில் அங்கிருந்து விலகினார். அவரை தனிக் கட்சி ஆரம்பிக்கக் கோரி நாடார் இன பிரமுகர்கள் நெருக்கி வருகின்றனர்.

நாடார் சமூகப் பிரமுகர்கள் பலருடன் அவர் ரகசிய ஆலோசனைகள் நடத்தி வருகிறார்.

இந் நிலையில் திரைப்படத் தயாரிப்பாளர் கே.ராஜனின் மகன் கே.ஆர். சுரேஷ் திருமணம் சென்னை வடபழனி முருகன் கோவிலில் நடந்தது. தி.நகரில் உள்ள நடிகர் சங்க சுவாமி சங்கரதாஸ் கலையரங்கில் வரவேற்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் முதல்வர் கருணாநதி கலந்து கொண்டு மணமக்களை ஆசிர்வதித்தார். அப்போது அங்கு வந்த நடிகர் சரத்குமாரும், நடிகர் சங்க பொதுச் செயலாளர் ராதாரவியும் (இவர் அதிமுகவில் ஓரம் கட்டப்பட்ட நிலையில் இருக்கிறார்) கருணாநிதிக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.

அதி¬கவிலிருந்து விலகிய சரத்குமாரும், ஜெயலலிதாவின் ஹிட் லிஸ்ட்டில் இருப்பவருமான ராதாரவியும் கருணாநிதிக்குப் பொன்னாடை போர்த்தி வரவேற்றது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

விரைவில் ராதாரவிக்கு அதிமுக ஆப்பு வைக்கும் எனத் தெரிகிறது. ஏற்கனவே அதை எதிர்பார்த்துக் காத்திருக்கும் ராதாரவியும் திமுகவில் சேர நோட்டம் விட்டுக் கொண்டிருக்கிறார்.

இந் நிலையில் சரத்துடன் போய் கருணாநிதிக்கு அவரும் பொன்னாடை போர்த்தியிருக்கிறார்.

திமுகவிலிருந்து விலகிய பின்னர் கருணாநிதியை சரத்குமார் சந்திக்கவில்லை. சமீபத்தில் திரையுலகம் சார்பில் நடந்த கருணாநதிக்குப் பாராட்டு விழாவிலும் ராதிகா தான் கலந்து கொண்டாரே (இதனால் தான் அவரை கட்சியை விட்டு நீக்கினார் ஜெயலலிதா) தவிர சரத்குமார் கலந்து கொள்ளவில்லை.

இந் நிலையில் முதல் முறையாக அவர் கருணாநிதியை சந்தித்து பொன்னாடை போர்த்தியுள்ளார்.

செய்தி: தட்ஸ்தமிழ்

முல்லைப் பெரியாறு!

தமிழக அதிகாரிகள் அனுமதி மறுத்ததால் பெரியாறு அணையை ஆய்வு செய்யாமல் பாதியிலேயே திரும்பிய கடற்படை

பெரியாறு அணையை வியாழக்கிழமை ஆய்வு செய்ய வந்த கொச்சி கடற்படை நிபுணர் குழுவினர்.

தேனி, நவ. 24: முல்லைப் பெரியாறு அணையை வியாழக்கிழமை ஆய்வு மேற்கொள்ளச் சென்ற கொச்சி (கேரளம்) கடற்படை நிபுணர் குழுவுக்கு, தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகள் அனுமதியளிக்க மறுத்தனர். இதையடுத்து, முழுமையாக ஆய்வு செய்யாமல் அந்தக் குழுவினர் பாதியிலேயே திரும்பினர்.

பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை அமல்படுத்த மறுத்து, கேரள அரசு மறு பரிசீலனை செய்யக் கோரி மனுத் தாக்கல் செய்தது. அம்மனுவையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

மேலும் இது தொடர்பாக உச்ச நீதிமன்ற அறிவுரையின்படி, தில்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சைபுதீன் சோஸ் முன்னிலையில் தமிழக, கேரள முதல்வர்கள் நவ. 29-ம் தேதி பேச்சு நடத்த உள்ளனர்.

இந்நிலையில் கேரள அரசு திடீரென கொச்சி கடற்படை நிபுணர்கள் குழுவை அனுப்பி அணையை ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டது.

இதையடுத்து, கடற்படை கமாண்டர் கே.என். ரெட்டி தலைமையில் உதவி கமாண்டர் தினேஷ் சிங்கர் உள்பட நீர்மூழ்கி வீரர்களுடன், கடற்படை அலுவலர்கள் வியாழக்கிழமை பெரியாறு அணைப் பகுதிக்குச் சென்றனர்.

அப்போது, தமிழக பொதுப்பணித் துறையைச் சேர்ந்த அணை செயற் பொறியாளர் பாஸ்கரன், கண்காணிப்பாளர் சுந்தர்ராஜன் ஆகியோரின் கேமராவை கேரள போலீஸôர் பறித்துள்ளனர்.

அணைப் பகுதியில் நீர்க்கசிவு ஏற்படும் அளவைக் குறிக்கும், காலரி பகுதியை பார்வையிடச் சென்றபோது, தமிழகப் பொறியாளர்கள் முன் அனுமதியின்றி ஆய்வு செய்யக் கூடாது எனக் கூறி காலரியை திறந்துவிட மறுத்துள்ளனர்.

இதனால் கேரள, தமிழக அலுவலர்களிடையே தகராறு ஏற்பட்டதையடுத்து, ஆய்வு செய்வதை கடற்படையினர் பாதியிலேயே நிறுத்திவிட்டு திரும்பி விட்டனர்.

கடற்படையினருடன் இடுக்கி மாவட்ட ஆட்சியர் ராஜன், காவல்துறை கண்காணிப்பாளர் செல்லப்பன் மற்றும் உயர் அலுவலர்கள் சென்றிருந்தனர்.

oOo

பெரியாறு - கேரள அரசின் அத்துமீறல் தொடர்ந்தால் தில்லி பேச்சு புறக்கணிப்பு: கருணாநிதி எச்சரிக்கை

சென்னை, நவ. 24: கேரள அரசின் அத்துமீறல் தொடர்ந்தால் தில்லியில் வரும் 29-ம் தேதி நடைபெறும் பேச்சில் பங்கேற்க முடியாத நிலை ஏற்படும் என்று முதல்வர் கருணாநிதி எச்சரித்துள்ளார்.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசு எல்லை மீறி நடந்துகொள்கிறது. இதை பிரதமர் தலையிட்டு உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக இரு மாநில முதல்வர்களும் தில்லியில் இம்மாதம் 29-ம் தேதி மத்திய நீர்வளத்துறை அமைச்சர் முன்னிலையில் பேச்சு நடத்த ஒப்புக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணையின் நிலையை ஆராய மத்திய கப்பல் படை அலுவலர்கள் குழுவை கேரள அரசு அனுப்பியுள்ளதாக வியாழக்கிழமை செய்தி வெளியானது. இது மிகவும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது என்று முதலமைச்சர் கருணாநிதி பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பேச்சுக்கு ஒப்புக் கொண்டு விட்டு அறிக்கை விடுவது மற்றும் கப்பல்படை அலுவலர்கள் குழுவை ஆய்வு நடத்த அனுப்புவது போன்ற எல்லை மீறிய செயல்களில் கேரள அரசு ஈடுபடுவதாக முதலமைச்சர் கருணாநிதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பாக வியாழக்கிழமை பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோருக்கு இரண்டு பக்க கடிதத்தை ஃபேக்ஸ் மூலம் முதல்வர் கருணாநிதி அனுப்பியுள்ளார். அதன் விவரம்:

கேரள அரசின் வேண்டுகோளின்படி மத்திய கடற்படை அலுவலர்கள் 17 பேர் கொண்ட குழு கேரள மாநில காவல்துறைத் தலைவர் மேற்பார்வையில் முல்லைப் பெரியாறு அணையை சோதனையிட வியாழக்கிழமை சென்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணை தமிழக அரசுக்குச் சொந்தமானதும், தமிழக அரசின் பராமரிப்பில் இருப்பதுமாகும். தமிழக அரசின் எந்தவித அனுமதியும் இன்றி தன்னிச்சையாக கேரள அரசு இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சிக்குரியதாகும்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி 142 அடி தண்ணீரை முல்லைப் பெரியாறு அணையில், தேக்கி வைத்துக் கொள்ள அனுமதியளித்து கடந்த பிப்.27-ம் தேதி உத்தரவிட்ட பிறகும், இத்தகைய செயல்களில் கேரள அரசு ஈடுபட்டிருப்பது முறையானதல்ல.

இரு மாநில முதலமைச்சர்களுடன் மத்திய அரசு பேச்சு நடத்த அழைப்பு விடுத்து, நாளும் குறிக்கப்பட்ட நிலையில், கேரள அரசின் இத்தகைய அத்துமீறிய செயல் தேவையற்றதும், இரு மாநிலங்களின் சுமுக உறவுக்குப் பங்கம் விளைவிக்கக் கூடியதுமாகும்.

தொடர்ந்து இத்தகைய தவறான வகையில் மற்றும் தமிழக மக்களிடையே மனக் கொந்தளிப்பை அதிகமாக்கிடும் வகையில் கேரள அரசின் நடவடிக்கைகள் இருக்குமானால், இம்மாதம் 29-ம் தேதி தில்லியில் நடைபெறவிருக்கும் பேச்சில் தமிழக அரசு கலந்துகொள்ள இயலாமல் போகக் கூடும் என்பதுடன் நடைபெற்ற சம்பவங்களை நேரடியாக உச்ச நீதிமன்றத்தில் எடுத்துக் கூறி நிவாரணம் தேட வேண்டி வரும். எனவே மத்திய அரசு உடனடியாக இதில் தலையிட்டு கேரள அரசினுடைய சட்டத்திற்குப் புறம்பான இத்தகைய நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார் கருணாநிதி.

oOo

கருணாநிதியின் கருத்து ஆத்திரமூட்டுவதாகும்: கேரள முதல்வர் பதில்

திருவனந்தபுரம், நவ. 24:முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக 29 ம் தேதி நடைபெறவுள்ள பேச்சு வார்த்தையிலிருந்து விலக நேரும் என தமிழக முதல்வர் கருணாநிதி பேசியிருப்பது ஆத்திரமூட்டுவதாகும் என கேரள முதல்வர் அச்சுதானந்தன் கூறியுள்ளார்.

பெரியாறு அணையை கடற்படை அதிகாரிகள் ஆய்வு செய்வதுகுறித்து தேனிமாவட்ட ஆட்சியருக்கு தெரியும். கேரளத்துக்கு சொந்தமான நிலத்தில் அணை கட்டப்பட்டுள்ளது. அப்படியிருக்கும்போது அணையின் பாதுகாப்பை மதிப்பிட தமிழகத்தின் அனுமதியைப் பெறவேண்டிய அவசியம் இல்லை. கேரளத்தின் 5 மாவட்டங்களைச் சேர்ந்த 35 லட்சம் மக்களின் வாழ்க்கை மற்றும் சொத்துகளின் பாதுகாப்பு குறித்து நாங்கள் கவலைப்படுகிறோம் எனவும் அவர் தெரிவித்தார்.

செய்ய்திகள் : தினமணி

Thursday, November 16, 2006

இலங்கை தமிழர்களுக்கு உதவி

இலங்கை தமிழர்களுக்கு 7000 டன் அரிசி- சர்க்கரை; பால் பவுடர்:
பிரதமர் மன்மோகன்சிங் அறிவிப்பு


சென்னை, நவ. 16-

இலங்கையில் சிங்கள ராணுவம் அப்பாவி தமிழர்கள் மீது குண்டு வீசி தாக்கி வருகிறது. இதில் ஏராளமானோர் பலியானார்கள்.

குண்டுவீச்சுக்கு பயந்து தமிழர்கள் ஊரை காலி செய்துவிட்டு காடுகளில் தஞ்சம் அடைந்து உள்ளனர். தமிழர்கள் பகுதிக்கு செல்லும் சாலைகளையும் சிங்கள ராணுவம் துண்டித்து விட்டது. இதனால் அவர்கள் உணவு கிடைக்காமல் பசி-பட்டினியால் தவிக்கின்றனர்.

இதையடுத்து முதல்-அமைச்சர் கருணாநிதி பிரதமர் மன் மோகன்சிங்குக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் இலங்கையில் தமிழர்கள் தாக்கப்படுவதை தடுக்க வேண்டும். பள்ளிகளில் தங்கும் தமிழர்களுக்கு உணவு பொருடங்கள் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதற்கு பதில் அளித்து பிரதமர் மன்மோகன்சிங் கருணாநிதிக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

அன்புள்ள டாக்டர் கருணாநிதி அவர்களுக்கு, இலங்கை இராணுவத் தினரால் இலங்கையில் உள்ள நூற்றுக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்படுவது பற்றியும், படுகாயப்படுத்தப்படுவது பற்றியும் 10.11.2006 அன்று தாங்கள் வெளியிட்ட அறிக்கையின் நகல் ஒன்றை - நாடாளுமன்ற தி.மு.க. குழுத் தலைவரும், என்னுடைய சகாவுமான டி.ஆர்.பாலு என்னை நேரில் சந்தித்துக் கொடுத்தார். பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட ஏராளமான அப்பாவித் தமிழர்களின் உயிரிழப்பு இத்தகைய கொடிய நிகழ்ச்சிகளால் ஏற்பட்டுள்ளது. அப்பாவிப் பெண் களையும், குழந்தைகளையும் கொல்வதற்கு எந்தவிதமான நியாயமும் கிடையாது.

இலங்கையில் சமீப காலமாக ஏற்பட்டு வரும் வன்முறையின் காரணமாக தமிழ் மக்கள் உயிரிழப்பது பற்றி எங்களுடைய ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்திக் கொண்டுள்ளோம்.

கடந்த காலங்களில் செய்ததைப் போலவே இலங்கை அரசுக்கு இந்த முறையும் எங்களுடைய உணர்வுகளை திரும்பவும் எடுத்துரைப் போம்.

இலங்கைப் பிரச்சினைக்கு இராணுவ ரீதியாக தீர்வு காண முடியாது என்பதையும் பேச்சுவார்த்தை மூலம் தான் அரசியல் தீர்வு காண முடியும் என்பதையும் அதன் மூலமாகத் தான் தமிழர்களுடைய உண்மையான உரிமைகளைக் காப்பாற்றுவதற்குத் தேவையான அதிகாரப் பங்கீடு செய்து கொள்ள முடியுமென்பதையும் நாங்கள் தெளிவுபடுத்தியிருக்கிறோம்.

இலங்கை வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் ஏற்பட்டு வரும் சூழல்களைக் கருத்தில் கொண்டு இந்திய அரசு 5200 மெட்ரிக் டன் அரிசியையும், 1500 மெட்ரிக் டன் சர்க்கரையையும், 300 மெட்ரிக் டன் பால் பவுடரையும் அனுப்பி வைக்கவுள்ளது.

ஒருங்கிணைந்த கூட்டாட்சி அடிப்படையிலான இலங்கையில் தமிழர் களுடைய உரிமைகளைப் பாதுகாப்பதற்குரிய வகையில் இலங்கை இனப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டுமென்ற எங்களுடைய எண்ணம் ஆழ மானதும், தொடர்ந்து இருந்து வருவதுமாகும்.

எனினும் இப்பொழுது அப்பாவி மக்கள் கொல்லப் படுவது நிறுத்தப்பட்டு, மனிதாபிமான அடிப்படை நிலை நிறுத்தப்பட வேண்டு மென்பதுதான் முதன்மையானதாகும்.

இந்திய அரசின் வெளியுறவுத்துறை செயலாளர் கொழும்பு செல்லவிருக்கிறார். அப்பொழுது இலங்கை அரசுக்கு நமது ஆழ்ந்த கவலைகளை தெரிவிப்பார்.

இலங்கையில் மற்ற குடிமக்களுக்கு அளிக்கப் பட்டுள்ள உரிமைகளையும், சலுகை களையும் இலங்கையில் வாழும் தமிழர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதன் அவசியத்தை அவர் வலியுறுத்துவார். அடுத்து, இலங்கைக் குடியரசு தலைவர் ராஜபக்சேயை நான் சந்திக்கும்போது, உரிய முறையில் இவற்றை அவருக்குத் தெரிவிப்பேன்.

இவ்வாறு பிரதமர் கூறி உள்ளார்.

செய்தி: மாலைமலர்

கட்டணமில்லா தொலைபேசி

தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளை தொடர்பு கொள்ள கட்டணமில்லா தொலைபேசி எண்

சென்னை, நவ. 16: தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளை இலவசமாக போனில் தொடர்பு கொள்ளலாம். இதற்கான கட்டணமில்லா தொலைபேசியை எண் 1056-ஐ தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து முதல்வர் கருணாநிதி புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

தமிழகத்தில் உள்ள அரசு பொது மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாவட்ட சுகாதார அலுவலகங்கள் ஆகியவை தகவல் தொடர்புகளால் இணைந்த "மருத்துவக் கட்டுப்பாட்டு அவசர சேவை மையங்கள்' தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட உள்ளன.

இந்த மையங்கள் மூலமாகக் கர்ப்பிணிப் பெண்கள், விபத்தில் சிக்கியோர், பிற அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் ஆகியோருக்கான முதலுதவி மருந்துகளையும், பிற மருத்துவ சாதனங்களையும் கொண்ட ஆம்புலன்ஸ் வாகன வசதி, ரத்தம் வழங்கும் தகவல், தேவைப்படும் சிகிச்சைக்கு ஏற்ப உடனடியாகச் செல்ல வேண்டிய மருத்துவமனை பற்றிய தகவல்கள் ஆகியவை மக்களுக்கு உடனுக்குடன் அளிக்கப்பட உள்ளன.

மருத்துவக் கட்டுப்பாட்டு அவசர சேவை மையங்களைப் மக்கள் உடனடியாகத் தொடர்பு கொள்ள காவல் மற்றும் தீயணைப்புத் துறைகளுக்கு வழங்கப்பட்டுள்ளதைப் போல் மூன்று அல்லது நான்கு இலக்க இலவசத் தொலைபேசி எண்ணை ஒதுக்க கடந்த 27-ம் தேதி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியது.

இந்தக் கோரிக்கையை மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் ஏற்று, தமிழகத்தில் நிறுவப்பட உள்ள மருத்துவக் கட்டுப்பாட்டு அவசரச் சேவை மையங்களைத் தொடர்பு கொள்ள இலவச தொலைபேசி தொடர்பு எண்ணை ஒதுக்கீடு செய்துள்ளது.

செய்தி: தினமணி

தலைப்புகள்-11/16

தினமலர்

* சீல்!* கர்நாடக, ஆந்திர எல்லை பகுதிகளில் போலீஸ் குவிப்பு* தமிழகத்துக்குள் நக்சலைட்டுகள் ஊடுருவலை தடுக்க அதிரடி
# சென்னை : எப்போதும் இல்லாத வகையில் தமிழகத்தில் நக்சல்கள் ஊடுருவக் கூடும் என்று உளவுத் துறை எச்சரித்துள்ளதால், தமிழகத்தை ஒட்டியுள்ள கர்நாடக, ஆந்திர எல்லைப் பகுதிகளில் அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

* ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை வாபஸ் ; அபாயம் நீங்கியது
# டோக்கியோ : ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளதால் அங்குள்ள மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

* பயங்கரவாத தடுப்பு அமைப்பை உருவாக்க இந்தியா பாக்.,சம்மதம்! *இரண்டு நாள் பேச்சுவார்த்தைக்கு பின் கூட்டறிக்கை வெளியீடு
# புதுடில்லி:இந்தியா பாகிஸ்தான் வெளியுறவு செயலர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தையில் பயங்கரவாத தடுப்பு அமைப் பை உருவாக்குவது என தீர்மானிக்கப்பட்டது. இந்த அமைப்பில் இரு தரப்பிலும் தலா மூன்று அதிகாரிகள் இடம் பெறுவர். இரு நாடுகளுக்கும் உட்பட்ட பகுதிகளில் அணு ஆயுத அபாயத்தை தவிர்ப்பது என்றும், அடுத்த கட்ட பேச்சுவார்த் தையை அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடத்துவது என்றும் முடிவு செய்யப் பட்டது. இரு நாடுகளின் சார்பில் கூட்டறிக்கையும் வெளியிடப்பட்டன.

* மேட்டூர் மலையில் நக்சல் பயிற்சி முகாம்? * மலை உச்சியில் இரண்டு "டென்ட்' * மர்ம மனிதர்கள் நடமாட்டத்தால் பீதி
# மேட்டூர்: மேட்டூர் அருகே பாலமலை உச்சியில் இரு டென்ட்டுகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. அங்கு, இரவு நேரத்தில் மர்ம மனிதர்கள் நடமாட்டம் இருப்பது பாலமலை அடிவார கிராம மக்களை பீதியடைய வைத்துள்ளது.

* உள்நாட்டு விமான கட்டணம் ஏறுது
# புதுடில்லி:போட்டா போட்டியை சமாளிக்க என்னதான் விலை குறைத்தாலும், செலவு கணக்குகள் "கையை' கடிப்பதால், உள்நாட்டு விமான கட்டணங்களை ஏற்ற வேண்டிய நிலைக்கு பல தனியார் நிறுவனங்கள் வந்துள்ளன என்று தெரிகிறது.

* இந்திய அணுசக்தி உடன்பாடு மசோதா :அமெரிக்க செனட் சபையில் இன்று விவாதம்
# வாஷிங்டன்:அமெரிக்க செனட் சபையில் நேற்று இந்திய அணுசக்தி உடன்பாடு குறித்தான மசோதா விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுவதாக இருந்தது கடைசி நேரத்தில் ஒத்தி வைக்கப்பட்டது. இன்று நடக்கும் கூட்டத்தில் இந்த மசோதா மீது விவாதம் நடத்தப்பட்டு நிறைவேற்றப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

* வெற்றியுடன் துவக்குமா இந்தியா?* இன்று தெ.ஆ., "ஏ' அணியுடன் மோதல்
# பெனோனி : தென் ஆப்ரிக்க பயணத்தை இந்திய அணி வெற்றியுடன் துவக்க காத்திருக்கிறது. இன்று தனது முதல் பயிற்சி போட்டியில் தென் ஆப்ரிக்க "ஏ' அணியை சந்திக்கிறது.

மாலைமலர்

* இலங்கை தமிழர்களுக்கு 7000 டன் அரிசி- சர்க்கரை; பால் பவுடர்: பிரதமர் மன்மோகன்சிங் அறிவிப்பு
* தமிழ்நாட்டில் மேலும் 2 நாட்கள் மழை நீடிக்கும்
* முல்லைபெரியாறு அணையில் 142 அடி தண்ணீரை தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜெயலலிதா கோரிக்கை
* தடையை மீறி நாளை இலங்கை தூதரகம் முன் ம.தி.மு.க. ஆர்ப்பாட்டம்: வைகோ தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம்
* நிலச்சரிவால் துண்டிக்கப்பட்ட பாலங்கள் சீரமைப்பு: மழை பெய்வதால் மீட்பு பணி தாமதம்
* ஜனநாயக படுகொலை என்று விமர்சித்து உள்ளாட்சி தேர்தலை குறை சொல்வதா? காங்.தலைவர் கிருஷ்ணசாமி கண்டனம்
* வக்கீல் தொழிலுக்கு எந்த வயதிலும் பதிவு செய்யலாம்: ஐகோர்ட்டு தீர்ப்பு
* நீர்மட்டம் 138 அடியை தாண்டியது; முல்லைப்பெரியாறு அணைக்கு பாதிப்பா? தயார் நிலையில் ராணுவம்-கப்பல் படை
* முக்கிய பிரமுகர்கள் பாதுகாப்புக்கு 650 ஆயுதப்படை போலீசார்
* தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள 3700 கிராம உதவியாளர்கள் விரைவில் நியமனம்

Wednesday, November 15, 2006

நிலச்சரிவு

பலத்த மழையால் திடீர் காட்டாற்று வெள்ளம்
ஊட்டி மலைப்பாதையில் 10 இடங்களில் நிலச்சரிவு

7 பாலங்கள் அடித்து செல்லப்பட்டன
2 லாரிகளை வெள்ளம் இழுத்து சென்றது: ஒருவர் பலி-பலர் உயிருடன் மீட்பு

நீலகிரி மாவட்டத்தில் பெய்த பலத்த மழையின் காரணமாக காட்டாறுகளில் திடீரென்று வெள்ளம் பெருக்கெடுத்தது. இதனால் ஊட்டி மலைப்பாதையில் உள்ள 7 பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. 2 லாரிகளை வெள்ளம் இழுத்துச் சென்றது. இதில் ஒருவர் பலி ஆனார். 10 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதால் ஊட்டிக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

கோவை, நவ.15-

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது.

பலத்த மழை பெய்யும் போது மலைப்பகுதியில் அவ்வப்போது நிலச்சரிவு ஏற்படுவது உண்டு. ஊட்டிக்கு செல்லும் மலை ரெயில் பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டதால், கடந்த 1-ந் தேதி முதல் அந்த ரெயில் நிறுத்தப்பட்டது.

பயங்கர மழை

இதனால் மேட்டுப்பாளையத்தில் இருந்து பர்லியார் வழியாகவும், கோத்தகிரி வழியாகவும் உள்ள இரு சாலை மார்க்கங்களில் மட்டும் ஊட்டிக்கு போக்குவரத்து நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் பயங்கர மழை கொட்டியது.

பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டன

இதனால் மலைப்பகுதியில் உள்ள காட்டாறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. திடீரென பெருக்கெடுத்த காட்டாற்று வெள்ளத்தில் மேட்டுப்பாளையம்-குன்னூர் சாலையில் உள்ள கல்லாறு அருகே உள்ள வெள்ளைப்பாலம் உள்ளிட்ட 7 பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டன.

காட்டாற்று வெள்ளம் சில இடங்களில் சாலையையும் அரித்தது.

நிலச்சரிவு

மேலும் பலத்த மழையின் காரணமாக கோவை மாவட்டம் கல்லாறு-நீலகிரி மாவட்டம் பர்லியார் இடையே சாலையில் 10 இடங்களில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. மண்ணுடன் ராட்சத பாறைகள் உருண்டு விழுந்தன. ஏராளமான மரங்களும் வேறோடு சாய்ந்து சாலையில் விழுந்தன. இதனால் சாலை அப்படியே மூடி நாசமானது.

இந்த நிலச்சரிவில் 2-வது கொண்டை ஊசி வளைவு முற்றிலுமாக அழிந்தது. 10 அடி பாலம் அருகே 2 இடங்களில் ரோடு அரிக்கப்பட்டு துண்டானது.

பலத்த மழை பெய்து கொண்டு இருந்ததால் மேட்டுப்பாளையம்-குன்னூர் சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

அடித்துச் செல்லப்பட்ட லாரிகள்

திடீரென்று பெருக்கெடுத்த காட்டாற்று வெள்ளத்திலும் நிலச்சரிவிலும் சிக்கி 2 லாரிகள் பள்ளத்தில் விழுந்தன.

கல்லாறு-பர்லியார் இடையே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய ஒரு லாரி 500 அடி கிடுகிடு பள்ளத்தில் விழுந்தது. அப்போது லாரி டிரைவர் ஜாபர் தூக்கி வீசப்பட்டார். ஒரு மரக்கிளையை பிடித்தபடி உயிருக்கு போராடிய அவர் காப்பாற்றும்படி அபயக்குரல் எழுப்பினார்.

பின்னர் அவரை மீட்டு தொட்டில் கட்டி வெளியே தூக்கி வந்தனர். மேட்டுப்பாளையம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட அவர் பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

கிளீனர் சாவு

இந்த விபத்தில் கிளீனர் வினோத் குமார் லாரியின் இடிபாடுகளுக்குள் சிக்கி பரிதாபமாக செத்தார். அவரது உடல் மீட்கப்பட்டது.

மற்றொரு லாரி வெள்ளத்தில் நாசமான இரும்பு பாலத்தில் சிக்கி தொங்கிக் கொண்டு இருந்தது. அதில் இருந்த 5 பேரை நேற்று அதிகாலை தீயணைப்பு படையினரும் மீட்புகுழுவினரும் மீட்டனர்.

சோதனைச் சாவடி நாசம்

பர்லியாரில் உள்ள போலீஸ் சோதனைச் சாவடி நிலச்சரிவில் சிக்கி நாசமானது. மலையில் இருந்து மண்ணுடன் உருண்டு விழுந்த பாறைகளும் கற்களும் அந்த சோதனைச் சாவடியை அமுக்கின.

பலத்த சத்தத்துடன் நிலச்சரிவு ஏற்பட்டதை அறிந்ததும் அங்கு இருந்த கவிதா என்ற பெண் சப்-இன்ஸ்பெக்டரும் கண்ணையன் என்ற போலீஸ் ஏட்டும், சங்கர் என்ற போலீஸ்காரரும் வெளியே ஓடிவ ந்து உயிர் தப்பினார்கள்.

அப்போது ஏட்டு கண்ணையன் காட்டாற்று வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டார். மரக்கிளை ஒன்றை பிடித்தபடி தொங்கிக் கொண்டிருந்த அவரை பின்னர் தீயணைப்பு படையினர் மீட்டனர்.

அந்த சோதனைச் சாவடி காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

மாணவர்கள் மீட்பு

கேரள மாநிலம் காசர்கோட்டில் இருந்து பஸ்சில் சுற்றுலா வந்த சுமார் 19 கல்லூரி மாணவர்களும் மற்றும் வேனில் வந்த சில சுற்றுலா பயணிகளும் மலைப்பாதையில் நிலச்சரிவில் சிக்கி நடுவழியில் தவித்தனர். அவர்களை போலீசார் மீட்டு மேட்டுப்பாளையத்துக்கு பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.

ஊட்டியைச் சேர்ந்த காதர்கனி என்ற வியாபாரியின் 3 மாத குழந்தை இர்பானை சிகிச்சைக்காக அங்கிருந்து ஆம்புலன்ஸ் வேனில் கோவை ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அந்த வேன் பர்லியார் அருகே நிலச்சரிவில் சிக்கிக் கொண்டது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் குன்னூர் போக்கு வரத்து சப்-இன்ஸ்பெக்டர் முரளி அங்கு விரைந்து சென்று குழந்தையை மீட்டு வேறொரு வாகனத்தில் அனுப்பி வைத்தார்.

நாசமான சாலை

நிலச்சரிவின் காரணமாக மேட்டுப்பாளையம்-குன்னூர் மலைப்பாதையில் பல இடங்களில் ரோட்டில் பாறைகளும் சேறும் சகதியுமாக உள்ளது. அவற்றை `பொக்லைன்' இயந்திரம் மூலம் அகற்றும் முயற்சியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு உள்ளனர்.

பெரிய பெரிய பாறைகள் சாலையில் கிடப்பதால் அவற்றை அப்புறப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது. 50 டன் எடை கொண்ட ராட்சத பாறையை துளை போட்டு உடைத்து அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் மீட்புக்குழுவினர் முழு மூச்சுடன் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

சில இடங்களுக்கு மீட்புக்குழுவினரால் இன்னும் போய்ச் சேர முடியவில்லை.

பர்லியாரில் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தை தமிழக கதர் வாரிய துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், நீலகிரி மாவட்ட கலெக்டர் சந்தோஷ் கே.மிஸ்ரா ஆகியோர் பார்வையிட்டு, மீட்புப்பணியை முடுக்கி விட்டனர்.

போக்குவரத்து துண்டிப்பு

நிலச்சரிவின் காரணமாக மேட்டுப்பாளையம்- குன்னூர் இடையே போக்கு வரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு உள்ளது. சாலையில் லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் அப்படியே நிறுத்தப்பட்டு உள்ளன. இதனால் அதில் இருப்பவர்கள் எங்கும் செல்ல முடியாமல் தவிக்கிறார்கள்.

இதனால் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி செல்லும் வாகனங்கள் கோத்தகிரி வழியாக திருப்பி விடப்பட்டு உள்ளன. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது.

ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் வரும் வாகனங்கள் தொட்டப்பெட்டா பிரிவு, கட்டப்பட்டு, குஞ்சப்பனை வழியாக வருகின்றன.

செய்தி: தினத்தந்தி

தலைப்புகள்-11/15

.ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்} சுனாமி எச்சரிக்கை
.அருணாச்சலம் சர்ச்சைக்குரிய பகுதி: சீனத் தூதர் பிடிவாதம்
.குறைந்தபட்ச தேவை அளவுக்கு அணு ஆயுதங்களை
வைத்திருக்க ஜப்பான் முடிவு
.நெதர்லாந்திலிருந்து ஐஸ்வர்யாவுக்கு டாலர்: விசாரணைக்கு கஸ்டம்ஸ் அழைப்பு
.ஜோகன்னஸ்பர்கில் இந்திய கிரிக்கெட் அணி
.அருணாசல பிரதேசம் இந்தியாவுக்கே சொந்தம்: சீன தூதருக்கு பிரணப் காட்டமான பதில்
.புதுச்சேரி: பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்தக் கோரி கையெழுத்து இயக்கம்
.பெங்களூர்: முதல்வர் மீது ரூ. 150 கோடி லஞ்சப்புகார்: சி.பி.ஐ. விசாரணை கோரி வழக்கு
.இலங்கை: இலங்கை அரசு-புலிகள் அமைதிப் பேச்சு: பிரிட்டன் புது முயற்சி
.சிறப்பு பக்கம்: இந்த ஆண்டு இறுதிக்குள் சதாம் தூக்கிலிடப்படுவார்: இராக் பிரதமர்
தமிழகம்
.வரும் கூட்டத்தொடரில் 'வாட்' மசோதா: தமிழக அரசு
.இலங்கை அதிபர் இந்தியா வரும் முன்பாக யாழ்ப்பாண நெடுஞ்சாலையை திறக்க நிர்பந்திக்க வேண்டும்: ராமதாஸ்
.கூட்டுறவுத் தேர்தலும் நியாயமாக நடக்காது: ஜெ.
.மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் விரிசலை சீரமைக்க நிபுணர் குழு அமைக்கக் கோரி மனு
.கன மழையால் மண் சரிவு: பாறைகள் உருண்டன மேட்டுப்பாளையம் - குன்னூர் சாலை துண்டிப்பு
.நடந்து முடிந்த தேர்தலை ரத்து செய்துவிட்டு உள்ளாட்சிகளுக்கு நேரடியாக தேர்தல் நடத்த தயாரா?: வைகோ

Tuesday, November 14, 2006

ஆபாச படம்

ரெயில் நிலையத்தில் ஆபாச படம் எடுத்தவர் காதல் ஜோடியை ரகசிய காமிராவில் படம் பிடித்தார்

சென்னையில் சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரெயில் நிலையங்களுக்கு வரும் பெண் பயணிகளை செல்போன் மூலம் ஆபாசமாக படம் பிடித்து வக்கிர கும்பல் ஒன்று இன்டர்நெட்டில் பரப்புவதை மாலைமலர் அம்பலப்படுத்தியது.

இதையடுத்து ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு ஆனிவிஜயா தலைமையில் பெண் போலீசார் சென்டிரல் மற்றும் எழும்பூர் ரெயில் நிலையங்களில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அங்கு சந்தேகத்துக்கு இடமான வகையில் காமிரா செல்போனுடன் சுற்றி திரிந்த வாலிபர்களை பிடித்து செல்போனை சோதனை செய்தனர். தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

ரெயில் நிலையம் வரும் பெண் பயணிகளை செல்போன் மூலம் ஆபாச படம் எடுத்து இன்டர்நெட்டில் பரவவிடுவது குறித்து விசாரிக்க கமிஷனர் லத்திகா சரண் உத்தரவிட்டார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

முதல் கட்ட விசாரணையில் பெண்களை செல்போன் மூலம் படம் பிடித்தது இண்டர்நெட் மைய உரிமையாளர் என்பது தெரிய வந்தது.

அவர் தனது இண்டர்நெட் மையத்துக்கு வரும் சில மாணவிகளை அவர்களுக்கு தெரியாமலேயே செல்போன் மூலம் ஆபாசமாக படம் பிடித்ததும் அந்த படங்களை தான் உருவாக்கிய `இண்டியன் மசாலா மிக்ஸ்டு டாட் ரிப்போடு டாட்காம்' என்ற இணைய தள முகவரி மூலம் பரவ விட்டிருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவரது இணைய தள முகவரியை போலீசார் தீவிரமாக ஆய்வு செய்யத் தொடங்கினர். இதில் அவர் தனது இண்டர்நெட் மையத்துக்கு வரும் காதல் ஜோடிகளை ரகசிய வீடியோ காமிரா மூலம் ஆபாச படம் பிடித்தது தெரிய வந்துள்ளது.

அது பற்றிய விவரம் வருமாறு:-

பெண்களை செல்போன் காமிரா மூலம் ஆபாசமாக படமெடுத்தவரின் இண்டர் நெட் மையத்தில் பிரவுசிங் செய்ய வரும் ஜோடிகளுக்கு என்று தனி தனி கேபின்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் இந்த கேபினில் வலது ஓரத்தில் ரகசிய கேமிரா ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. இங்கு பிரவுசிங் செய்வதற்கு என்று வரும் இளம் ஜோடிகளுக்கு சம்பந்தப்பட்ட கேபின்கள் ஒதுக்கப்படும் என தெரிகிறது.

இந்த கேபின்கள் ஒவ்வொன்றும் தனி அறை போல் காட்சி அளிக்கிறது. இதில் 2 இருக்கைகளும் நவீன வசதியுடன் கூடிய கம்ப்ïட்டர்கள் உள்ளன. பிரவு சிங் செய்ய வரும் காதல் ஜோடிகள் கேபினுக்குள் வைத்து செய்யும் செக்ஸ் விளையாட்டுகள் அனைத்தும் சம்பந்தப்பட்ட காதல் ஜோடிகளுக்கு தெரியாமலேயே ரகசிய காமிராவில் படம் பிடிக்கப்படுகின்றன.

இதில் ஒரு சில காதல் ஜோடிகள் எல்லை மீறி ஒட்டுதல், உரசுதல், கட்டுதலை தொடர்ந்து `அந்த' விஷயத்தையும் கேபின் உள்ளேயே அரங்கேற்றுகின்றனர்.

இந்த காட்சிகளை அப்படியே காமிரா படம் பிடிக்கிறது. இதில் உள்ள ஆபாச காட்சிகளை தொகுத்து ஒரு முழு நீள `புளூ பிலிம்' ஆக தயாரித்து 1/2 நிமிடம் ஓடும் அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த வீடியோ காட்சிகளையும், இண்டர்நெட்டில் பரவவிட்டுள்ளனர். இண்டர்நெட்டில் பரப்பப்பட்ட வீடியோ காட்சி மூலம் மேற்படி தகவல் போலீசாருக்கு தெரிய வந்துள்ளது.

சம்பந்தப்பட்ட இணைய தள முகவரியில் இந்த புளூ பிலிம் வீடியோ காட்சிகள் 3 பிரிவாக பதிவு செய்யப்பட்டுள்ளன. முதல் வீடியோவில் பிரவுசிங் செய்யும் காதல் ஜோடிகள் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபடுவது போலவும் அடுத்தடுத்த வீடியோவில் மேற்படி சமாச்சாரங்ள் நடப்பதும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து இண்டர்நெட் மையத்தில் ரகசிய கேமிரா மூலம் படம் பிடித்து இண்டர்நெட்டில் பரவவிடுவது என்றால் அதன் உரிமையாருக்கு தெரியாமல் நடைபெற வாய்ப்பில்லை என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இதற்கிடையே ரகசிய காமிராவில் பதிவாகி உள்ளது போல் சென்னையில் எங்கெல்லாம் இண்டர்நெட் மைய கேபின் உள்ளது என போலீசார் ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளனர். சம்பந்தப்பட்ட கேபின் அடையாளம் காணப்பட்டால் அதன் உரிமையாளர் யார்? என்பது தெரிந்து விடும் என உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

செய்தி : மாலைமலர்

இளையராஜாவுக்கு கண்டனம்

'பெரியார்' படத்துக்கு இசை அமைக்க மறுப்பு: இளையராஜாவுக்கு எழுத்தாளர் சங்கம் கண்டனம்

திருநெல்வேலி, நவ. 14: "பெரியார்' திரைப்படத்திற்கு இசை அமைக்க மறுத்த இளையராஜாவுக்கு பகிரங்கமாக வருத்தம் தெரிவிப்பது என தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் முடிவு செய்துள்ளதாக, அதன் பொதுச் செயலர் ச. தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

மதுரையில் நடைபெற்ற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் செயற்குழுக் கூட்டத்தில் முக்கியமான சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

இசை அமைப்பளர் இளையராஜா, "பெரியார்' திரைப்படத்துக்கு இசை அமைக்க மறுத்து கோபமாக பேசிய வார்த்தைகள் முற்போக்கு எண்ணம் கொண்ட அத்தனை தமிழ் மக்களின் நெஞ்சங்களிலும் பெருத்த வேதனையை உண்டாக்கியுள்ளது.

அவர் ஆத்திகராக இருப்பதும், எந்த ஒரு படத்துக்கும் இசை அமைக்க மறுப்பதும் அவரது ஜனநாயக உரிமை. ஆனால், ஆத்திகராக இருப்பதால், "பெரியார்' படத்துக்கு இசை அமைக்க மாட்டேன் என கூறியிருப்பது பல கேள்விகளை எழுப்புகிறது.

மேலும், அவரது கருத்துக்கு ஆதரவாக மதவாத சக்திகள் குரல் கொடுப்பது தமிழ்ப் பண்பாட்டுச் சூழலில் மிகுந்த கவலை அளிக்கிறது.

எனவே, நல்லெண்ணத்தின் அடிப்படையில் எங்களது வருத்தத்தை பகிரங்கமாக இளையராஜாவுக்கு தெரிவிக்க முடிவு செய்துள்ளோம் என்றார் தமிழ்ச்செல்வன்.

செய்தி : தினமணி

தலைப்புகள்-11/14

தினத்தந்தி

* 4 ஊராட்சிகளுக்கும் தி.மு.க. சார்பில் ரூ.5 லட்சம்
# பாப்பாபட்டி, கீரிப்பட்டி, உ∙பட 4 ஊராட்சிகளுக்கும் தி.மு.க. சார்பில் தலாரூ.5லட்சம் வழங்கப்படும் என்று கருணாநிதி அறிவிப்பு.

* காளிமுத்துவை நான் மிரட்டவில்லை -ஜெயலலிதா
# கருணாநிதியின் திருக்குறள் உரையை காளிமுத்து வாசித்ததற்காக நான் அவரை மிரட்டியதாக சொல்வது முழு கற்பனை என்று ஜெயலலிதாகூறியுள்ளார்.

* மருத்துவம், என்ஜினீயரிங்நுழைவுத்தேர்வு ரத்து
# தமிழ்நாட்டில் தொழிற்கல்வி படிப்புகளில் மாணவர்க∙சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வை ரத்துசெய்யலாம் என்று வல்லுனர்குழு பரிந்துரை.

* முல்லைப்பெரியாறு பிரச்சினை: 23-ந் தேதி பேச்சுவார்த்தை
# முல்லைப்பெரியாறு அணை பிரச்சினை தொடர்பாக மாநிலமுதல்-மந்திரிகள் கூட்டம் வரும் 23-ந் தேதி டெல்லியில் நடக்கிறது.

* ஆண்டிப்பட்டி தேர்தல் :அ.தி.மு.க-தி.மு.க. மோதல்
# ஆண்டிப்பட்டியில் அ.தி.மு.க-தி.மு.க.வினர் இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து ïனியன் தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு.

தினமலர்

* துண்டிப்பு! * மேட்டுப்பாளையம் குன்னூர் ரோட்டில் 12 இடங்களில் நிலச்சரிவு * பலத்த மழைக்கு தாக்கு பிடிக்க முடியாமல் உருண்டன பாறாங்கற்கள்
# குன்னூர்:கடந்த 10 நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக, குன்னுõர் மேட்டுப்பாளையம் சாலையில் 12 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் பாறைகள் உருண்டு பாதையில் நின்றிருந்த லாரிகள் மீது விழுந்ததால், இரண்டு லாரிகள் மண்ணில் புதைந்தன. மூன்று பேர் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். ஒருவர் உடல் மீட்கப்பட்டது. குன்னுõர்மேட்டுப்பாளையம் இடையேயான போக்குவரத்து அடியோடு துண்டிக்கப்பட்டது.

* இந்தியா பாக்., வெளியுறவு செயலர்களின் பேச்சுவார்த்தை துவங்கியது *காஷ்மீர், பயங்கரவாதம் உட்பட பல பிரச்னைகள் குறித்து அலசல்
# புதுடில்லி:நான்கு மாத இடைவெளிக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் வெளியுறவு செயலர்களின் இரண்டு நாள் பேச்சு வார்த்தை டில்லியில் நேற்று துவங்கியது. காஷ்மீர், பயங்கரவாதம் உள்ளிட்ட பல பிரச்னைகள் குறித்தும், இருநாடுகளுக்கு இடையே நம்பிக்கையை வலுப்படுத் தும் நடவடிக்கைகள் குறித்தும் நேற்று பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

* காளிமுத்து மரணம் ஏன்? ஜெயலலிதா புது விளக்கம்
# சென்னை: ""மறைந்த காளிமுத்துவை நான் அண்ணனாக மதித்தேன். ஆனால், அவர் மீது பொய் வழக்கு போட்டு மன உளைச்சலை ஏற்படுத்தி அவரை சாகடித்தது கருணாநிதி,'' என்று அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா ஆவேசமாக கூறியுள்ளார்.

* இந்திய விமானப்படை எப்போதும்"பெஸ்ட்' * தென்பிராந்திய பயிற்சி தளபதி பெருமிதம்
# சென்னை: ""எந்த காலத்திலும் பாகிஸ்தானை விட இந்திய விமானப் படை அனைத்திலும் சிறந்தே விளங்குகிறது,'' என்று இந்திய விமானப் படையின் தென்பிராந்திய பயிற்சி பிரிவு தளபதி ஜி.எஸ்.சவுதிரி தெரிவித்தார்.

* யு.எஸ்., பறக்க ஜெட் தயாராகுது
# புதுடில்லி: கடும் போராட்டத்துக்கு பின்னர், இந்தியாவின் முதன்மையான தனியார் விமான நிறுவனமான ஜெட் ஏர்வேஸ்க்கு, அமெரிக்க வானில் பறக்க அனுமதி கிடைக்கும் சாத்தியம் அதிகரித்துள்ளதாக தெரிகிறது.

* வங்கதேச எதிர்க்கட்சி போராட்டத்தில் வன்முறை: ஒருவர் படுகொலை
# தாகா: வங்கதேசத்தில் தலைமை தேர்தல் ஆணையரை நீக்கக்கோரி எதிர்க்கட்சிகள் நடத்தி வரும் ஆர்ப்பாட்டம் வன்முறையாக மாறியது. இதில், ஒருவர் கொல்லப் பட்டார். மேலும் 60 பேர் காயமடைந்தனர்.

* உலக கோப்பைக்கு யுவராஜ் வருவாரா?* தெ.ஆப்ரிக்க தொடரிலிருந்து நீக்கம்
# புதுடில்லி: இந்திய அணியின் தென் ஆப்ரிக்க சுற்றுப்பயணத்திலிருந்து யுவராஜ் சிங் நீக்கப்பட்டுள்ளார். எனினும் உலக கோப்பை தொடரில் அவர் இடம் பெறும் வாய்ப்புகள் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Monday, November 13, 2006

நுழைவுத் தேர்வு ரத்தாகும்!

கருணாநிதியிடம் வல்லுநர் குழு அறிக்கை: நுழைவு தேர்வு ரத்து ஆகிறது

சென்னை, நவ. 13-

மருத்துவம், என்ஜினீயரிங் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளில் சேர நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

`கிராமப்புற மாணவர் களும், அரசுப்பள்ளி மாணவர்களும் நுழைவுத் தேர்வால் பாதிக்கப்படுகிறார்கள். எனவே நுழைவுத் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும்' என்று கோரிக்கை விடப்பட்டது.

இதையடுத்து, இந்த முறையை ரத்து செய்வது தொடர்பாக அண்ணா பல் கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஆனந்த கிருஷ்ணன் தலைமையில் ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டது.

செய்த: மாலைமலர்

இந்த குழு நுழைவுத் தேர்வு ரத்து தொடர்பாக சென்னை, மதுரையில் கலந்தாய்வு கூட்டம் நடத்தி பொதுமக்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆகியோரிடம் கருத்து கேட்டது. அப்போது பெரும்பாலானோர் "நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும்'' என்று கூறினார்கள்.

சி.பி.எஸ்.இ. மாணவர்கள், நகர்புற மாணவர்கள் உள்ளிட்ட ஒருசிலர் மட்டும் நுழைவுத் தேர்வு வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர். நுழைவுத் தேர்வு பற்றிய பல்வேறு பிரச்சினைகள் குறித்து நிபுணர் குழு ஆய்வு செய்தது.

இந்த நிலையில் ஆனந்த கிருஷ்ணன் தலைமையிலான நிபுணர் குழு, நுழைவுத் தேர்வு பற்றிய அறிக்கையை இன்று முதல்-அமைச்சர் கருணாநிதியிடம் வழங்கியது.

அப்போது அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு, எ.வ.வேலு மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

இந்த குழுவின் பரிந்துரைப்படி நுழைவுத் தேர்வு ரத்தா கிறது. அதற்கான சட்டமும் வரும் சட்டசபை கூட்டத்தில் நிறைவேற்றப்படுகிறது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-

2006 மே மாதம் ஆளுநர் சட்டமன்றத்தில் உரையாற்றிய போது-தொழிற்கல்வி படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு மாணவர்களுக்கு மிகுந்த மன உளைச்சலை தரக்கூடியதாகவும், அதிகப் பொருட் செலவை ஏற்படுத்துவதாகவும் உள்ளது.

கிராமப்புற மாணவர்கள் மற்றும் ஏழைக் குடும் பங்களைச் சேர்ந்த மாண வர்களுக்கு நுழைவுத் தேர்வில் சம வாய்ப்பு இல்லை என்ற நிலை இருப்பதாலும் நுழைவுத் தேர்வினை ரத்து செய்வது குறித்து ஆராய்ந்து பரிந்துரை செய்ய ஒரு வல்லுநர் குழு அமைக்கப்படும் என்று அறி விக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து 7.7.2006 அன்று அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் எம்.ஆனந்த கிருஷ்ணன் தலைமையில் இது குறித்து ஆராய்ந்து பரிந் துரைகளை வழங்க ஒரு வல்லுநர் குழு அமைக்கப் பட்டது.

வல்லுநர் குழு இன்று பரிந்துரைகளை முதல்- அமைச்சர் கருணாநிதியிடம் அளித்தது. நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்படலாம் என்ற வல்லுநர் குழுவின் பரிந் துரைகளை நடைமுறைப் படுத்துவதற்கான வழிமுறை கள் அமைச்சரவைக் கூட் டத்தில் விவாதிக்கப்படும்.

டிசம்பர் 4 அன்று தொடங்கப்படும் சட்டமன்றக் கூட்டத் தொடரில் உரிய சட்ட முன் வடிவினைக் கொண்டு வந்து அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

செய்தி: தினமலர்

தலைப்புகள்-11/13

தினமலர்

* தமிழகத்தில் நுழைவு தேர்வை ரத்து செய்ய அனந்த கிருஷ்ணன் குழு பரிந்துரை
# சென்னை : தமிழகத்தில் தொழிற் படிப்புகளுக்கான பொது நுழைவு தேர்வை ரத்து செய்ய அனந்த கிருஷ்ணன் குழு பரிந்துரை செய்துள்ளது.

* தனித்து போட்டி * காங்கிரசில் இப்போதே ஒலிக்கத் துவங்கி விட்டது கோஷம் *மத்திய அரசில் இடம் பெற்றுள்ள கூட்டணி கட்சிகள் கலக்கம்
# புதுடில்லி:மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அமைந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகி விட்டன. அடுத்த லோக்சபா தேர்தலுக்கு இன்னும் மூன்று ஆண்டுகள் இருந்தாலும், தனித்து போட்டி என்ற கோஷம் இப்போதே காங்கிரஸ் கட்சிக்குள் எழ தொடங்கி விட்டது.

* சென்னையிலிருந்து புறப்படும் விமானங்களை கடத்த சதி அமெரிக்க உளவுத்துறையின் எச்சரிக்கையால் பரபரப்பு * ஐரோப்பிய விமானங்களில் விடிய விடிய சோதனை
# சென்னை:இந்தியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் விமானங்களை பயங்கரவாதிகள் கடத்தப் போவதாக வந்த தகவலை தொடர்ந்து சென்னையில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு நேற்று முன்தினம் இரவு புறப்பட்ட மூன்று விமானங்கள் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதே போன்றதொரு எச்சரிக்கை நடவடிக்கை டில்லி, மும்பை விமான நிலையங்களிலும் மேற்கொள்ளப்பட்டது.

* மத்திய அரசு பணிகளில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு * வீரப்ப மொய்லி யோசனை
# புதுடில்லி:""மத்திய அரசு பணிகளில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும்'' என்று வீரப்ப மொய்லி கூறினார்.மத்திய அரசு பணிகளில் பிற்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளிக்க மாஜி கர்நாடக முதல்வர் வீரப்ப மொய்லி தலைமையில் உயர் மட்ட கமிட்டி மத்திய அரசு நியமித்துள்ளது.

* புதிய ஜென் மாடல் கார்கள்
# புதுடில்லி:மாருதி உத்யோக் நிறுவனம், புதிய ஜென் மாடல் கார்களை விரைவில் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.

* வங்கதேசத்தில் எதிர்க்கட்சி போராட்டம் ரயில் மற்றும் பஸ்களுக்கு தீ வைப்பு
# தாகா:வங்கதேசத்தில் எதிர்க்கட்சியினர் நடத்திய போராட்டத்தில் ரயில் மற்றும் பஸ்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பள்ளி, கல்லுõரிகள் இயங்கவில்லை. வங்கதேசத்தில் விரைவில் பார்லிமென்ட் தேர்தல் நடக்கவுள்ளது.

* முகமது யூசுப் சதத்தில் பாக்., முன்னிலை! * எடுபடவில்லை வெ.இண்டீஸ் பந்துவீச்சு
# லாகூர்:லாகூர் டெஸ்டில் துõள் கிளப்புகிறது பாகிஸ்தான்.நேற்று முகமது யூசுப் சூப்பர் சதம் அடிக்க, முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 265 ரன்கள் எடுத்தது. தற்போது 59 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இன்னும் ரசாக் போன்றோர் இருப்பதால் வலுவான ஸ்கோரை எட்ட வாய்ப்பு உள்ளது. ஆடுகளம் படுமந்தமாக இருந்ததால் வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சு எடுபடாமல் போனது.

மாலைமலர்

* கருணாநிதியிடம் வல்லுநர் குழு அறிக்கை: நுழைவு தேர்வு ரத்து ஆகிறது
* விமானங்களை கடத்த சதி: மிரட்டல் விடுத்தது யார்? உளவுத்துறை தீவிர விசாரணை
* டெல்லி கடைகள் `சீல்'வைப்பை எதிர்த்து மத்திய அரசு அப்பீல்
* ஆண்டிப்பட்டியில் பஸ் மறியலில் ஈடுபட்ட தங்கதமிழ்செல்வன் எம்.பி. உள்பட 100 அ.தி.மு.க.வினர் கைது
* காளிமுத்துவை நான் மிரட்டவில்லை: கருணாநிதிக்கு ஜெயலலிதா பதில்
* திருமண மண்டப இடிப்பு பிரச்சினை: விஜயகாந்த்-மந்திரி டி.ஆர்.பாலு மோதல்
* போலீஸ் வேட்டை தீவிரம்: சென்னையில் 5 நாளில் 2000 ரவுடிகள் கைது
* ம.தி.மு.க.வை நிர்மூலம் செய்ய கருணாநிதி திட்டம்: வைகோ குற்றச்சாட்டு
* கிராம மக்களுடன் சிறப்பு ரெயிலில் வருகை: 4 பஞ்சாயத்து தலைவர்களை மு.க.ஸ்டாலின் வரவேற்றார்
* இலங்கையில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் எம்.பி. உடல் புதன்கிழமை அடக்கம்; கொழும்பில் இன்று முழு அடைப்பு

Sunday, November 12, 2006

வேலையற்றோர் உதவித்தொகை

வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்து காத்திருப்போர் 2 லட்சம் இளைஞர்களுக்கு நிதியுதவி
தமிழகம் முழுவதும் திட்டம் தொடங்கியது

திருச்சி. நவ.12: வேலைவாய்ப்பு அலுவலங்களில் பதிவு செய்து காத்திருக்கும் இளைஞர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம் தமிழகம் முழுவதும் நேற்று தொடங்கியது. திருச்சியில் இத்திட்டத்தை முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார். மாவட்டங்களில் அமைச்சர்கள் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தனர்.

வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து 5 ஆண்டு பூர்த்தியான இளைஞர்களுக்கு மாத உதவித் தொகை அளிக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் திமுக உறுதி அளித்திருந்தது. அந்தத் திட்டம் மாநிலம் முழுவதும் நேற்று தொடங்கப்பட்டது.

இத்திட்டத்தின்படி, பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரூ.150, பிளஸ் 2 முடித்தவர்களுக்கு ரூ.200, பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு முடித்தவர்களுக்கு ரூ.300 உதவித்தொகை மாதந்தோறும் வழங்கப்படும்.

உதவி பெறுவோரின் வங்கிக் கணக்கில் 3 மாதங்களுக்கு ஒரு முறை இந்தத் தொகை சேர்க்கப்படும். மாநிலம் முழுவதும் 2 லட்சம் இளைஞர்களுக்கு உதவித் தொகை அளிக்கப்படும். இதற்காக அரசு மாதம் ரூ.4 கோடி செலவிடும்.

திருச்சி நேரு விளையாட்டரங்கில் நடந்த திட்டத் தொடக்க விழாவில் முதல்வர் கருணாநிதி பேசியதாவது:

"இந்த விழாவைப் பார்க்கும்போது, அண்ணா சொன்ன பொன்மொழி ஒன்று நினைவுக்கு வருகிறது. 'சாலை ஓரத்தில் வேலையற்றதுகள். வேலையற்றதுகள் உள்ளத்தில் விபரீத எண்ணங்கள், அரசே, அதுதான் காலக்குறி?' என்பதுதான் அந்த பொன்மொழி.

சாலையோரத்தில் படுத்துக்கொண்டு மௌனப்புரட்சி செய்துகொண்டிருக்கும் வேலையற்றவர்கள் கொதித்து எழுந்தால் அரசு கவிழும். அந்த சுழல்காற்றில் நீங்கள் எல்லாம் சுழற்றி எறியப்படுவீர்கள் என்பதே அதன் அர்த்தம். அதை நெஞ்சில் பதிய வைத்துதான், இந்தத் திட்டத்தை அரசு செயல்படுத்துகிறது.

இவ்வாறு உதவித்தொகை வழங்குவதன் மூலம் வேலையில்லாத நிலை ஏற்படுமா? என்றால் அது முடியாது. இது ஆறுதல் உதவிதான். இதை உதவித்தொகை என்றோ, கருணைத்தொகை என்றோ அழைக்கப்படுவதை நான் விரும்பவில்லை. இது அரசின் கடமைத்தொகை.

இந்தத் தொகையைப் பயன்படுத்தி வேலைவாய்ப்பு பெற்று, அரசின் திட்டங்களைப் பெற்று வீட்டையும் நாட்டையும் காப்பாற்ற வேண்டும் என்று இளைஞர்களை கேட்டுக்கொள்கிறேன்.

தேர்தல் நேரத்தில் திமுக அளித்த வாக்குறுதிகளை தொடர்ந்து நிறைவேற்றி வருவதை இங்கே குறிப்பிட்டார்கள். இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. எந்த ஒரு ஆட்சியிலும் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றினால் அது வியப்புக்குரிய ஒன்றுதான்.

தமிழக அரசு போலவே மத்திய அரசும் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது. இப்போது நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் நமது கூட்டணி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது."

செய்தி: தினகரன்

தலைப்புகள்-11/12

தினமலர்

* மிரட்டல்!* இலங்கையில் உள்நாட்டு கலவரம் வெடிக்கும் * சிங்களர்களை தாக்க புதிய அமைப்பு எச்சரிக்கை
# கொழும்பு : இலங்கையில் கடந்த சில நாட்களாக அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. கடந்த 1983ம் ஆண்டு துவங்கி பல ஆண்டுகள் நீடித்த உள்நாட்டு கலவரத்தால் 65 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். அது போன்றதொரு உள்நாட்டு கலவரம் மீண்டும் வெடிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளதாக, சர்வதேச அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

* "தம்பிக்கு அண்ணன் கொடுக்கும் தொகை' திருச்சியில் முதல்வர் கருணாநிதி உருக்கம்
# திருச்சி : ""வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு அளிக்கும் உதவித் தொகை முதல்வர் வழங்கும் தொகை அல்ல. தம்பிக்கு அண்ணன் கொடுக்கும் தொகையாக கருத வேண்டும்,'' என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

* போலி ஆவணங்களுடன் விமான நிலையத்தில் மூவர் * பயங்கரவாதிகளாக இருக்கலாம் என்பதால் பரபரப்பு *மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை
# சென்னை : பயங்கரவாதிகள் எந்த நேரமும் தாக்குதல் நடத்தலாம் என்ற பதட்டத்துடன் அதிகாரிகள் கண்காணித்துக் கொண்டிருக்கும் வேளையில், போலி விசா மற்றும் பாஸ்போர்ட்டுகளுடன் விமானத்தில் பயணம் செய்ய வந்த வெளிநாட்டைச் சேர்ந்த மூவரால் சென்னை விமான நிலையத்தில் பதட்டம் ஏற்பட்டது.

* போரை விட அச்சுறுத்தலாக உள்ளது எல்லை தாண்டிய பயங்கரவாதம் : பிரணாப் முகர்ஜி ஆவேசம்
# புதுடில்லி : ""நாடுகளுக்கு இடையேயான போர்களை விட, எல்லை கடந்த பயங்கரவாதம் பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. இப்பிரச்னையைச் சமாளிக்க, சர்வதேச சமூகத்தினரின் குறிக் கோளுடன் கூடிய ஒத்துழைப்பு தேவை,'' என்று வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.

* தொடர் மழையால் தக்காளி விலை உயர்வு *வெளி மாநில ஏற்றுமதியும் பாதிப்பு
# வாழப்பாடி : வாழப்பாடி பகுதியில் கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து பெய்த மழையால், தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டு விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால், வெளி மாநிலங்களுக்கான ஏற்றுமதி தடைபட்டுள்ளது.

* டாக்டர்களுக்கு பேருதவி புரியும் கூகுல் வெப்சைட்
# லண்டன் : நோயாளிகள் மட்டுமல்லாது டாக்டர்களும் நோய்கள் தொடர்பாக தங்களுக்கு வேண்டிய தகவல்களைத் தேடுவதற்கு "கூகுல் வெப்சைட்டை' பயன்படுத்துகின்றனர் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

* சாதிக்க தவறும் முன்னணி வீரர்கள்!* டிராவிட் குற்றச்சாட்டு
# பெங்களூர் : ""டாப் ஆர்டர் பேட்ஸ் மேன்களின் பொறுப்பற்ற ஆட்டமே, தொடர்ச்சியான தோல்விக்கு வழிவகுத்து விட் டது. உலககோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கு முன்பாக முன்னணி வீரர்கள் இழந்த பார்மை மீட்க வேண்டும். ,'' என எச்சரிக்கிறார் இந்திய கேப்டன் ராகுல் டிராவிட்.

Saturday, November 11, 2006

தலைப்புகள்-11/11

தினத்தந்தி

* இலங்கையில் தமிழ் எம்.பி. சுட்டுக் கொலை
# இலங்கையில் தமிழ் எம்.பி.யான நடராஜா ரவிராஜ், மர்ம மனிதர்களால் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டார்.

* திருமண மண்டபம் இடிப்பு :விஜயகாந்த் புகார்
# எனது கட்சியை அழிப்பதற்கே, திருமண மண்டபத்தை இடிக்க போவதாக அறிவித்துள்ளனர்-விஜயகாந்த் புகார்.

* இலங்கை பிரச்சினை :மன்மோகன்சிங் உறுதி
# இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதலை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று மன்மோகன்சிங் உறுதி.

* இட ஒதுக்கீடு வழக்கு :ஜெயலலிதா குற்றச்சாட்டு
# இடஒதுக்கீட்டுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கை நடத்தியதாக மத்திய, தமிழக அரசு மீது ஜெயலலிதா குற்றச்சாட்டு.

* "நான் பிரதமர் ஆவது உறுதி''-லல்லு பிரசாத் அறிவிப்பு
# "நான் பிரதமர் ஆவது உறுதி'' என்று மத்திய ரெயில்வே மந்திரி லல்லு பிரசாத் கூறினார்.

தினமலர்

* அகதிகளை தாக்கிய ராணுவத்திற்கு புலிகள் பதிலடி * கொழும்பு நகரில் தமிழ் எம்.பி., சுட்டுக் கொலை
# கொழும்பு : இலங்கையில் விடுதலைப் புலிகளின் ஆதரவு எம்.பி., நடராஜா ரவிராஜ் நேற்று காலை சுட்டுக் கொல்லப்பட்டார். மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் சரமாரி துப்பாக்கி சூடு நடத்தியதில் எம்.பி.,யின் பாதுகாவலரும் கொல்லப்பட்டார். அதே நேரத்தில் திரிகோணமலை கடற்பகுதியில் இலங்கை கடற்படை மற்றும் விடுதலைப் புலிகள் இடையே நடந்த மோதலில் இரண்டு தரப்பையும் சேர்ந்த 50 பேர் கொல்லப்பட்டனர்.

* நுழைவுத்தேர்வு உண்டா?: அரசு முடிவு என்ன? 13ம் தேதி முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பிப்பு
# சென்னை : நுழைவுத் தேர்வை ரத்து செய்வது குறித்து ஆய்வு செய்த அனந்தகிருஷ்ணன் கமிட்டி வரும் 13ம் தேதி முதல்வரிடம் தனது அறிக்கையை சமர்ப்பிக்கிறது. அதனடிப்படையில் நுழைவுத் தேர்வு விஷயத்தில் மாணவர்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாத வகையில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.

* மனித நேயமற்று சுடுகாட்டில் வீசப்பட்ட முதியவர் சாவு
# மேலூர் : மேலூர் அருகே சுடுகாட்டில் வீசிப்பட்ட முதியவர் இறந்து போனார். இறந்த அவர், தன் தம்பியை கொலை செய்த குற்றவாளி என அடையாளம் தெரிந்தது.

* இந்திய அமெரிக்க உடன்பாட்டுக்கு ஆதரவு திரட்ட ஜனநாயக கட்சியினருடன் அதிபர் புஷ் ஆலோசனை
# வாஷிங்டன் : இந்திய அமெரிக்க அணுசக்தி உடன்பாட்டுக்கு செனட் சபையில் ஒப்புதல் பெற அதிபர் புஷ் தனிப்பட்ட ஆர்வம் காட்டி வருகிறார். இது குறித்து ஜனநாயக கட்சி தலைவர்களுடனும் அவர் பேசியுள்ளார்.

* ஸ்ரீபெரும்புதூரில் தொழிற்சாலை: "சாம்சங்' நிறுவனம் ஒப்பந்தம்
# சென்னை : சென்னையை அடுத்த ஸ்ரீபெரும் புதூரில் "சாம்சங்' நிறுவனம் 450 கோடி ரூபாய் முதலீட்டில் தொழிற் சாலை துவங்க தமிழக அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

* அமைதி ஒப்பந்தத்தின் வெற்றியை கொண்டாடிய மாவோயிஸ்ட்கள்
# காத்மாண்டு : நேபாள அரசுக்கும் மாவோயிஸ்ட்டுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள அமைதி ஒப்பந்தத்தை கொண்டாடும் பொருட்டு மாவோயிஸ்ட்டுகள் சார்பில் நேற்று வெற்றி பேரணிகள் நடத்தப்பட்டன.

* மகாத்மா, நேரு வரிசையில் நானா...!* சச்சின் ஆச்சர்யம்
# மும்பை : மகாத்மா காந்தி, நேரு ஆகியோரது வரிசையில் தனது பெயரையும் சேர்த்துள்ளது மிகப் பெரும் கவுரவம் என சச்சின் தெரிவித்துள்ளார்.

வல்லிக்கண்ணன்

பன்முகத்தன்மை கொண்ட எழுத்தாளர் வல்லிக்கண்ணன்

திருநெல்வேலி, நவ. 11: சிறுகதை, நாவல், திறனாய்வு என இலக்கியத்தின் அனைத்துத் தளங்களிலும் தடம் பதித்த பன்முகத்தன்மை கொண்டவர் மறைந்த எழுத்தாளர் வல்லிக்கண்ணன். இறுதிமூச்சு வரை இலக்கியத்துக்காகவே வாழ்ந்தவர். இலக்கியத்தின் மீது கொண்ட தீவிரப் பற்றால், மணவாழ்க்கையை மறுத்து, எளிமையாக வாழ்ந்தவர்.

சிறுகதைகளின் உச்சத்தை தொட்ட நெல்லைச் சீமையின் அழியாப் புகழ் பெற்ற இலக்கியகர்த்தா. புதுமைப்பித்தனின் சம காலத்தவர்.

திருநெல்வேலி அருகே உள்ள ராஜவல்லிபுரத்தில் பிறந்த இவர், இளமைப் பருவம் முதல் இலக்கிய தாகம் உடையவராக இருந்தார். அதன் காரணமாக, தனது பெயரைக்கூட ஊரின் பெயரை நினைவுகூரும் வகையில் வல்லிக்கண்ணன் என மாற்றிக் கொண்டார்.

தமக்கிருந்த இலக்கிய தாகத்துக்கு வடிகால் தேடவும், அதற்காக ஏதேனும் ஒரு பத்திரிகையில் பணியாற்றும் ஆர்வத்துடனும் தான் பார்த்து வந்த அரசு வேலையை உதறிவிட்டு நடந்தே சென்னை சென்றார். அங்கு "காந்தி', "கிராம ஊழியன்' உள்ளிட்ட பத்திரிகைகளில் பணி செய்தார்.

புதுமைப்பித்தனுடன் தொடர்பு வைத்திருந்த வல்லிக்கண்ணன், பல குறு நாவல்கள், சிறுகதைகள், திறனாய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளார்.

குடும்பச் சூழலில் இருந்து விலகி இருந்த இவர், அவரது சகோதரர் இறந்த பிறகு அந்தக் குடும்பச் சுமையை ஏற்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இவர் எழுதிய ""புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும்'' என்ற திறனாய்வு நூலுக்கு 1978-ல் சாகித்ய அகாதெமி விருது கிடைத்தது. இந்த விருதைப் பெற்ற ராஜவல்லிபுரத்தைச் சேர்ந்த இரண்டாவது நபர் வல்லிக்கண்ணன். இதே ஊரைச் சேர்ந்த ரா.பி. சேதுப்பிள்ளை முதல் விருதைப் பெற்றவர் ஆவார்.

தாமிரபரணி பிரியர்: சென்னையில் வசித்து வந்த வல்லிக்கண்ணன், சொந்த ஊரான திருநெல்வேலிக்கு வந்த உடன் பஸ் அல்லது ரயில் நிலையத்தில் இருந்து நேராக தாமிரபரணி ஆற்றுக்குச் சென்று குளித்துவிட்டுத்தான் அடுத்த வேலையைப் பார்ப்பாராம்.

செய்தி : தினமணி

விஜயகாந்த் மண்டப அரசியல்

எனது கட்சியை அழிப்பதற்காக திருமண மண்டபத்தை இடிக்கிறார்கள்
விஜயகாந்த் குற்றச்சாட்டு

சென்னை, நவ.11-

எனது கட்சியை அழிப்பதற்காகவே, திருமண மண்டபத்தை இடிக்கப் போவதாக அறிவித்துள்ளனர் என்று விஜயகாந்த் குற்றம் சுமத்தி உள்ளார்.

தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திருமண மண்டப விவகாரம்

சட்டசபை தேர்தலுக்கு முன்னர் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு இப்போதைக்கு எனது திருமண மண்டபத்தை இடிக்கும் திட்டம் இல்லை என்றார். பின்னர் விஜயகாந்த் மாற்று திட்டம் கொடுத்தால் பரிசீலிப்போம் என்றார். அப்போதே நான் இடித்துக் கொள்ளுங்கள் என்று தான் கூறினேன்.

இந்த நிலையில் ஜனவரி 1-ந் தேதி எனக்கு எந்த வாழ்த்தும் அனுப்பாத டி.ஆர்.பாலு புத்தாண்டு வாழ்த்து அனுப்பினார். அந்த வாழ்த்தின் பின்பக்கத்தில் கோயம்பேடு பாலம் மற்றும் நெடுஞ்சாலையின் வரைபடம் இருந்தது. அந்த வரைபடத்தை வைத்து, ஓய்வு பெற்ற சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் தலைமை திட்ட அமைப்பாளர் ஒருவரை கொண்டு மாற்று திட்டத்தை தயாரித்தேன்.

அதன்படி எனது திருமண மண்டபம் பகுதியில் மேம்பாலம் வரவில்லை. அந்த பகுதியில் தரைவழிப் பாதை தான் செல்கிறது.

தேர்தல்கள் முடிந்தபின்

அதனை நிராகரித்து விட்டதாக இப்போது பதில் அனுப்பியிருக்கிறார்கள். அதிலும் என்ன காரணம் என்று கூறவில்லை. தொழில்நுட்பம் ஒத்துவரவில்லை என்று கூறியுள்ளனர். அவர்களது மனது தான் ஒத்துவரவில்லை. இத்தனை மாதம் கழித்து, சட்டசபை தேர்தல், உள்ளாட்சி தேர்தல் அனைத்தும் முடிந்த பின்னர் இப்போது இடிப்பதாக கூற காரணம் என்ன?

மத்திய கைலாஷ் பகுதியில் கோவிலை இடிக்காமல் கோவிலுக்கு பின்னால் பாதையை கொண்டு செல்லவில்லையா? ஏன் கோவிலை இடிக்க வேண்டியது தானே? மதுரை மற்றும் பல இடங்களில் சாலை விரிவாக்கத்திற்காக கோவில்களை இடிக்கவில்லையா?

விமான நிலைய விரிவாக்கம்

உளுந்தூர்பேட்டையில் ரெயில்வே மேம்பாலம் வேண்டும், லட்சக்கணக்கான வாகனங்கள் பாதிக்கிறது என்று பல ஆண்டுகளாக கேட்கிறார்கள், அதைப்பற்றி எல்லாம் யாரும் கவலைப்படவில்லை. மண்டபத்தை இடித்துவிட்டு குடிசை மாற்று வாரிய வீடுகள் கட்டி ஏழைகளுக்கு வீடு தரப்போகிறார்களா? வாகனங்கள் செல்லும் தரைவழிப்பாதை தானே, மாற்றி அமைத்தால் என்ன குறைந்துவிடும். கிழக்கு கடற்கரை சாலை பல இடங்களில் வளைந்து செல்லவில்லையா?

மீனம்பாக்கம் விமான நிலைய விரிவாக்கத்துக்காக பொழிச்சலூரில் இடம் தேவை என்ற போது எதிர்ப்பு கிளம்பியது. அங்கு குடியிருப்பவர்கள் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் தான் என்பது தெரியவந்ததும் அந்த திட்டத்தை கைவிட்டு விட்டார்கள். மத்திய அரசு அந்த இடத்தை கேட்கிறது. ஆனால் தமிழக அரசு அதனை கையகப்படுத்தி தரும் திட்டத்தை கைவிட்டு விட்டது.

அதே போல சென்னைக்கு வெளியே துணை நகரம் அமைக்கப்போவதாக கூறினார்கள். தி.மு.க.வின் கூட்டணி கட்சி எதிர்ப்பு தெரிவித்ததும் அதனை கைவிட்டு விட்டார்கள். இவர்களுக்கு தேவை என்றால் ஒன்று, தேவையில்லை என்றால் ஒன்று.

கட்சியை அழிக்க சதி

சட்டசபை தேர்தலில் அதிக வாக்குகள் வாங்கினோம். அதைவிட உள்ளாட்சி தேர்தலில் கூடுதல் வாக்குகள் வாங்கியிருக்கிறோம். இதனால் விஜயகாந்தை வளரவிடக் கூடாது. கட்சியையே அழித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் தான் மண்டபத்தையும், கட்சி அலுவலகத்தையும் இடித்துவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

தி.மு.க.வுக்கு அடுத்த படியாக எனது அலுவலகத்துக்கு தான் கூட்டங்கள் நடத்துவதற்கு வசதியாக பெரிய மண்டபம் இருக்கிறது. எனவே நம்மைப் போலவே தே.மு.தி.க.வும் கூட்டம் நடத்துவதா என்ற எண்ணம். இந்த கட்டிட இடிப்பு விவகாரம் திட்டமிட்ட சதிச் செயல். தேர்தலுக்கு முன்பே இதை கூறியிருக்கலாமே?

தவறான தகவல்

மதிப்பீடு எவ்வளவு என்று கேட்டார்கள். எவ்வளவு எடுக்கப்போகிறீர்கள் என்று தெரிந்தால் தானே மதிப்பு எவ்வளவு என்று கூறமுடியும். நஷ்டஈடு அதிகப்படுத்தி கேட்டார்கள் என்று டி.ஆர்.பாலு தவறான தகவல்களை கூறியிருக்கிறார். முறையான வரைபடமும், எவ்வளவு பாகத்தை எடுக்கப் போகிறீர்கள் என்றும் தான் கேட்டோம். அதற்கு இதுவரை பதில் இல்லை.

மக்கள் இந்த விவகாரத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான் இவற்றை எல்லாம் கூறுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

நீதிமன்றம் செல்வீர்களா?

நிருபர் கேள்வி:- அடுத்த நடவடிக்கை என்ன, நீதிமன்றத்தை நாடுவீர்களா?

பதில்:- யாரிடமும் பேசி பயனில்லை. உள்ளாட்சி தேர்தலில் என்ன நடந்தது என்பது எல்லோருக்கும் தெரியும். நீதிமன்றத்தை நாடினோம். என்ன நடந்துவிட்டது.

வண்டிச்சக்கரம் போன்றது

கேள்வி:- சட்டசபையில் இந்த பிரச்சினையை எழுப்புவீர்களா?

பதில்:- சட்டசபையில் பேசி மட்டும் என்ன ஆகிவிடப்போகிறது. வங்கியில் கூட கடன் தர மறுத்ததால் என் உழைப்பு மற்றும் மற்றவர்களிடம் கடன் வாங்கி கட்டியது. நான் ஏன் இதனை இழக்க வேண்டும். மத்தியில், மாநிலத்தில், உள்ளாட்சியில் என அனைத்திலும் அவர்கள் இருக்கும் தைரியத்தில் பேசுகிறார்கள். காலம் வண்டிச் சக்கரம் போன்றது. சுழன்று கொண்டே இருக்கும். இப்படியே போய் விடாது.

இவ்வாறு விஜயகாந்த் கூறினார்.

அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், பொருளாளர் சுந்தர்ராஜன், இளைஞர் அணி செயலாளர் சுதீஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

செய்தி: தினத்தந்தி

Friday, November 10, 2006

தலைப்புகள்-11/10

தினத்தந்தி

* சட்டம்-ஒழுங்கு திருப்தியாக உள்ளது - கருணாநிதி
# தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு திருப்தியாக உள்ளது என்று முதல்-அமைச்சர் கருணாநிதி கூறினார்.

* ஈராக்கில்இருந்து ராணுவம் வாபஸ் ஆகாது - புஷ்
# அமெரிக்க தேர்தலில் எங்கள் கட்சிக்கு தோல்வி ஏற்பட்டதால் ராணுவத்தை வாபஸ் பெறமாட்டோம் என்று புஷ் தெரிவித்தார்.

* இலங்கையில் ராணுவ படகு மூழ்கடிப்பு
# விடுதலைப்புலிகள் நடத்திய தாக்குதலில், இலங்கை ராணுவ படகு மூழ்கடிப்பு. இன்னொரு படகு தீப்பிடித்து எரிகிறது.

* சென்னையில் தீவிரவாதிகள் ஊடுருவலா?
# விமான நிலையங்களை தகர்க்கப் போவதாக வந்த தகவலையடுத்து சென்னையில் தீவிரவாதிகளின் சதியை முறியடிக்கஆலோசனை.

* புதிய சினிமா பற்றி ரஜினிகாந்த் தகவல்
# ரஜினிகாந்த் ராவணனாக நடிக்கப்போவதாக வெளியான தகவல்கள் வெறும் வதந்தி என்று ரஜினிகாந்த் கூறினார்.

தினமணி

* இலங்கைத் தமிழர் பிரச்சினை- மத்திய அரசு அணுகுமுறையில் மாற்றம் தேவை: கருணாநிதி
* இலங்கைக்கு மைசூர் பருப்பு, பாசிப்பயறு: மத்திய அரசு முடிவு
* அல்-காய்தா மிரட்டல்: விமான நிலையங்களில் அதிகபட்ச உஷார் நிலை
* 'அமெரிக்க விசா'- இனி 1 வாரத்தில் நேர்காணல்
* ஆஸி.வீரர்களின் நாகரீகமற்ற செயலே அது!- பவார்
* நேபாள அரசு-மாவோயிஸ்டு இடையே அமைதி ஒப்பந்தம்

அமெரிக்க விசா

அமெரிக்க விசா கோரி விண்ணப்பம் அளிப்பவருக்கு இனி 1 வாரத்தில் நேர்காணல்

புதுதில்லி, நவ. 10: அமெரிக்கா செல்ல விரும்புவோர் அமெரிக்க தூதரகம் மற்றும் துணைத் தூதரகங்களில் விசா கோரி விண்ணப்பம் அளித்தால் இனி ஒரு வாரத்தில் அவருக்கு நேர்காணல் நடத்தப்படும்.

மேலும் விசா கட்டணம் 30 சதவீதம் குறையும் என்று இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் டேவிட் சி முல்போர்ட் தெரிவித்தார்.

தில்லியில் நிருபர்களிடம் அவர் வியாழக்கிழமை கூறியதாவது:

அமெரிக்க விசா கோரி விண்ணப்பம் அளிப்பவர்கள் இதுவரை 6 மாதம் வரை காத்திருக்கும் நிலை இருந்தது. தற்போது கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதால் இனி ஒருவார காலத்துக்குள் அவர் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார். இந்த காத்திருப்பு காலம் தொடர்ந்து கண்காணிக்கப்படும். சீரமைப்பின் இன்னொரு பகுதியாக விசா கட்டணம் வியாழன் முதல் 50 டாலர் குறைக்கப்படுகிறது. இதன்மூலம் விசா கட்டணம் பழைய கட்டணத்தில் இருந்து 30 சதவீத அளவுக்கு குறையும் என்றார் அவர்.

செய்தி: தினமணி

Thursday, November 09, 2006

தலைப்புகள்-11/9

* பள்ளி மீது இலங்கை ராணுவம் குண்டு வீசியதில் 40 பேர் பலி! * மட்டக்களப்பில் தமிழ் அகதிகள் மீது கொடூர தாக்குதல்
# கொழும்பு : இலங்கையில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மட்டக்களப்பு பகுதியில் பள்ளி ஒன்றின் மீது இலங்கை ராணுவத்தினர் நேற்று பீரங்கி தாக்குதல் நடத்தினர். இந்த கொடூர தாக்குதலில் அந்த பள்ளியில் அகதிகளாக தங்கியிருந்த 40 பேர் கொல்லப்பட்டனர். நுõற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

* மீண்டும் ஆரம்பம் * டில்லியில் சட்ட விரோத கடைகளுக்கு "சீல்' வைப்பது * பலத்த பாதுகாப்புடன் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
# புதுடில்லி : டில்லியில் குடியிருப்பு பகுதிகளில் சட்ட விரோதமாகச் செயல்பட்டு வரும் கடை களுக்கு "சீல்' வைக்கும் பணி, நேற்று மீண்டும் துவங்கியது.டில்லியில் குடியிருப்பு பகுதிகளில் சட்ட விரோதமாகச் செயல்பட்டு வரும் 40 ஆயிரம் மேற்பட்ட கடைகளுக்கு "சீல்' வைக்கும் பிரச்னை, பெரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

* ஜெ., வீட்டில் அத்துமீறி நுழைந்தவர் நான்கு மணி நேரத்தில் கைது
# சென்னை : முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டின் முன்புறமுள்ள இரும்பு கதவை இருசக்கர வாகனத்தில் சென்று முட்டித் தள்ளியவர், "மகளின் மருத்துவ செலவுக்கு பணம் தரவில்லை' என்று கூறி அசிங்கமாக திட்டினார். அங்கிருந்த கமாண்டோ போலீசாரிடமிருந்து தப்பியவரை நான்கு மணி நேரத்தில் சென்னை மாநகர போலீசார் கைது செய்தனர்.

* அமெரிக்க பார்லி., தேர்தலில் அதிபர் புஷ் கட்சிக்கு அடி * பெருவாரியான இடங்களை அள்ளியது ஜனநாயக கட்சி
# வாஷிங்டன் : அமெரிக்க பார்லிமென்ட் மற்றும் மாகாண கவர்னர் தேர்தல்களில் அதிபர் புஷ் கட்சியான குடியரசு கட்சிக்கு பெருத்த அடி விழுந்துள்ளது. எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி 12 ஆண்டுகளுக்கு பிறகு பார்லிமென்ட் காங்கிரஸ் சபையை கைப்பற்றியுள்ளது. மாகாண கவர்னர் பதவிகளிலும் பெரும்பான்மையானவை இக்கட்சி வசமே வந்து விட்டன. செனட் சபையில் இரு கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

* இந்தியாவின் நான்கு பெருநகர ரயில் நிலையங்கள் உலகத் தரம் வாய்ந்த நிலையங்களாக மாற்றப்படும் : லாலு அறிவிப்பு
# "உலகத்தரம் வாய்ந்த ரயில்வே நிலையமாக சென்னை, மும்பை உட்பட நான்கு பெருநகர ரயில்வே நிலையங்களும் மாற்றப்படும் 'என்று ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் தெரிவித்தார்.

* நேபாள அரசு மாவோ.,க்கள் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்து * இடைக்கால அரசு அமைக்கவும், தேர்தல் நடத்தவும் இருதரப்பும் முடிவு
# காத்மாண்டு : நேபாள அரசுக்கும், மாவோயிஸ்ட்டுகளுக்கும் இடையே நீண்ட இழுபறிக்கு பின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இதையடுத்து கடந்த பத்தாண்டுகளாக வன்முறையால் பாதிக்கப்பட்டிருந்த நேபாள மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். வரும் டிச., 1ம் தேதிக்குள் இடைக்கால அரசு அமைக்கப்படும் என ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* பவாரிடம் "ஸாரி' கேட்க தயார்! * பாண்டிங் பகிரங்க அறிவிப்பு
# சிட்னி : சரத் பவார் விவகாரத்தில் புதிய திருப்பமாக ஆஸ்திரேலிய கேப்டன் பாண்டிங்பகிரங்க மன்னிப்பு கேட்க முன் வந்துள்ளார். தனது செயல் மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தால், சரத் பவார் உள்ளிட்ட இந்திய நிர்வாகிகளிடம் வருத்தம் தெரிவிக்க தயாராக இருப்பதாக பாண்டிங் தெரிவித்துள்ளார்.

Wednesday, November 08, 2006

காளிமுத்து காலமானார்

அதிமுக அவைத் தலைவர் காளிமுத்து மரணம்

நவம்பர் 08, 2006

சென்னை: முன்னாள் சபாநாயகரும், அதிமுக அவைத் தலைவருமான கா.காளிமுத்து இன்று அதிகாலை மரணமடைந்தார். அவருக்கு வயது 65.

கமுதி அருகே உள்ள ராமுத்தேவன் பட்டியில் பிறந்த காளிமுத்துவுக்கு நிர்மலா, மனோகரி என இரு மனைவியர். இவர்களில் நிர்மலா சில ஆண்டுகளுக்கு முன் மரணமடைந்தார். அவர் இறந்ததிலிருந்தே காளிமுத்து மனம் உடைந்து காணப்பட்டார். அதுவே அவரது உடல் நலிவுக்கும் முக்கியக் காரணமானது.

சில மாதங்களுக்கு முன் அவருக்கு இருதய அறுவைச் சிகிச்சை நடந்தது. இதையடுத்து அவர் உடல் நிலம் பாதிக்கப்பட்டு ஓய்வில் இருந்தார். இதைத் தொடர்ந்து சட்டசபைக்கு தேர்தல் வந்தபோது மதுரை மத்திய தொகுதி வேட்பாளராக அவரை ஜெயலலிதா அறிவித்தார். ஆனால் உடல் நலக்குறைவு காரணமாக காளி¬த்துவால் தேர்தலில் போட்டியிட முடியாமல் போனது.

இதைத் தொடர்ந்து அவர் தொடர் ஓய்வில் இருந்து வந்தார். இந் நிலையில் சமீபத்தில் காளிமுத்துவுக்கு உடல் நலம் மீண்டும் பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மதுரையில் சிகிச்சை மேற்கொண்ட அவர் மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு அழைத்து வரப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

கவலைக்கிடமான நிலையில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந் நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி காளிமுத்து மருத்துவமனையிலேயே மரணமடைந்தார்.

காளிமுத்து மறைந்த செய்தியை அறிந்ததும் அதிமுக தொண்டர்கள் அப்பல்லோ மருத்துவமனையில் குவிந்தனர். காளிமுத்துவின் உடல் முதலில் செனடாப் ரோட்டில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அதிமுகவினர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து அண்ணா நகரில் உள்ள இன்னொரு வீட்டுக்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

காளிமுத்துவின் உடல் அவரது சொந்த ஊரான ராமுத்தேவன் பட்டிக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு இறுதிச் சடங்குகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கருணாநிதி, ஜெ இரங்கல்:

காளிமுத்துவின் மறைவுக்கு முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மாணவப் பருவத்திலிருந்தே திராவிட இயக்கப் பற்றாளராக விளங்கியவர் காளிமுத்து. பின்னர் மொழிப் போரில் ஈடுபட்டு தியாகியாக மாறினார். எழுத்து பேச்சு ஆகியவற்றில் திறம் பெற்று விளங்கியவர்.

அமைச்சர், எம்.பி, சபாநாயகர் ஆகிய பதவிகளை ஏற்று செயல்பட்டவர். நட்புக்கும், நல்ல தோழமைக்கும் ஏற்றவராக அவர் விளங்கினார். அவரது மறைவுக்கு ஆழ்ந்த துயரத்தையும், இரங்கல்களையும் அவரது குடும்பத்திற்கு தெரிவிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

காளிமுத்துவின் மறைவுக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

வாழ்க்கை

மறைந்த முன்னாள் சபாநாயகர் காளிமுத்து 1942ம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டம் (இப்போது விருதுநகர் மாவட்டத்தில் உள்ள) ராமுத்தேவன் பட்டியில் பிறந்தவர். இவரது தந்தை பெயரும் காளிமுத்துதான்.

எம்.ஏ., பி.எச்.டி படித்துள்ள காளிமுத்து மாணவப் பருவத்திலேயே சிறந்த பேச்சாளராக விளங்கினார்.

பேச்சுத் திறமை காரணமாக பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரால் மேடை மணி என்று பாராட்டப்பட்டவர்.

ஆரம்பத்தில் இருந்தே திராவிட இயக்கத்தில் தீவிரமாக செயல்பட்டு வந்த காளிமுத்து, இந்தி எதிர்ப்புப் போரிலும் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டார்.

ஆரம்ப காலத்தில் திமுகவில் இருந்த காளிமுத்து முதல் முறையாக 1971ம் ஆண்டு சிவகாசி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். பின்னர் எம்.ஜி.ஆர். அதிமுகவை ஆரம்பித்தபோது அதில் இணைந்தார்.

1977, 1980 ஆகிய தேர்தல்களில் திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்றார். 1984ம் ஆண்டு மதுரை கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஆனார்.

எம்.ஜி.ஆரின் மிக நம்பிக்கைக்கு உரியவராக திகழ்ந்த காளிமுத்துவை அமைச்சராக்கி அழகு பார்த்தார் எம்.ஜி.ஆர். அவரது அமைச்சரவையில் நிரந்தர அமைச்சராகவும் இருந்தார். எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் உள்ளாட்சித் தறை, வேளாண்மைத் துறை, குடிநீர் வழங்கல் துறை அமைச்சராக பணியாற்றினார். அதிமுக துணைப் பொதுச் செயலாளராகவும் பதவி வகித்துள்ளார்.

எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்னர் ஜானகி அணியில் இருந்த காளிமுத்து பின்னர் திமுகவுக்குத் திரும்பினார். அப்போது நடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் கடலாடி தொகுதியில் போட்டியிட்டு தோற்றார்.

அந்தத் தேர்தலில் சென்னை துறைமுகம் தொகுதியில் திமுக தலைவர் கருணாநிதி போட்டியிட்டார். கடலாடியில் காளிமுத்துவுக்காக பிரச்சாரம் செய்த கருணாநிதி, ''தம்பி நீ கடலாடி வா.. துறைமுகத்தில் காத்திருக்கிறேன்'' என்று பேசினார். ஆனால், காளிமுத்து தோற்றார்.

திமுகவில் சில காலம் இருந்த காளிமுத்து பின்னர் மீண்டும் அதிமுகவுக்கு மாறினார்.

இம்முறை காளிமுத்துவுக்கு அதிமுகவில் முக்கியத்துவம் கொடுத்து சபாநாயகர் பொறுப்பில் அமர வைத்தார் ஜெயலலிதா. 2001ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் திருமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.

2001ம் ஆண்டு முதல் 2006 வரை அவர் சபாநாயகர் பொறுப்பை வகித்தார். சட்டசபை ஆயுட்காலம் மு¬டிவடையும் தருவாயில் அப்பொறுப்பிலிருந்து காளிமுத்துவை விலக்கி அதிமுகவின் அவைத் தலைவராக நியமித்து அழகு பார்த்தார் ஜெயலலிதா.

அதிமுக ஆட்சியை இழந்த பின்னர் காளிமுத்து மீது இரண்டு வழக்குகளை ஊழல் தடுப்புப் போலீஸார் பதிவு செய்தனர். எம்.எல்.ஏ. விடுதி வளாகத்தில் உள்ள இரண்டு கேண்டீன்களுக்கு முறைகேடாக அனுமதி வழங்கியது தொடர்பான வழக்குகள் அவை.

அரசியலுக்கு அப்பாற்பட்டு நல்ல இலக்கியவாதியாகவும் தமிழ் ஆர்வலராகவும் திகழ்ந்தவர் காளிமுத்து. மிகச் சிறந்த பேச்சாளர். அவரது பேச்சுக்கு பெரும் ரசிகர் கூட்டமே இருந்தது. மேலும், உதாரணங்களைச் சொல்லிப் பேசுவதிலும் வல்லவர்.

''கருவாடு மீனாகாது, கறந்த பால் மடி புகாது'', ''கூரையேறி கோழி பிடிக்கத் தெரியாதவன் வானம் ஏறி வைகுண்டம் பிடிப்பானா'' என்பது உள்ளிட்ட அவர் சொல்லிய பல உதாரணங்கள் தமிழர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவை என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தகப் பிரியரான காளிமுத்து நூல்களைப் படிப்பதையே முக்கியப் பொழுதுபோக்காக கொண்டவர். அவரது வீட்டிலும் மிகப் பெரிய நூலகம் உள்ளது. 100க்கும் மேற்பட்ட கட்டுரைகள், ஏராளமான நூல்களை எழுதியுள்ளார்.

செய்தி: தட்ஸ்தமிழ்

தலைப்புகள்-11/8

தினமணி

* கடைகளை மூடும் நடவடிக்கையை தடுக்கக் கோரி பிரதமரை சந்திக்க தில்லி கவுன்சிலர்கள் முடிவு
* பிப்.22 வரை "எய்ம்ஸ்' இயக்குநராக வேணுகோபால் நீடிக்க தடையில்லை
* ஜெஸிகா லால் கொலை வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றமுடியாது: தில்லி உயர்நீதிமன்றம்
* ரயில் நிலையங்களில் "காய்கறி சாலட்': லாலுவின் புதிய அறிமுகம்
* ஐசிசி தரப் பட்டியலில் தோனிக்கு 6-வது இடம்
* ஜப்பானில் சூறாவளி: 9 பேர் சாவு
* புதுச்சேரி: அதிகரித்து வரும் ஏற்றுமதி பொருள்கள்
* பெங்களூர்: தீவிரவாதிகள் உடுருவல்: சிவராஜ் பாட்டீலுடன் குமாரசாமி ஆலோசனை
* இலங்கை: பெரும் தாக்குதல் நடத்த புலிகள் ஆயத்தம்: ராணுவம் புகார்
* சதாமைத் தூக்கிலிட்டால் தூதரகங்களை தாக்குவோம்: பாத் கட்சி மிரட்டல்
* தென் மாவட்டங்களில் பலத்த மழை- ஆறுகளில் வெள்ள அபாய எச்சரிக்கை
* டிசம்பர் 4-ல் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம்
* மீனவர்கள் நலனில் திமுக அரசு அக்கறை காட்டவில்லை: ஜெ. குற்றச்சாட்டு
* இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியா உதவ வேண்டும்: விஜயகாந்த்
* சரத்குமார் தனிக்கட்சி தொடங்க ரசிகர்கள் கோரிக்கை

Tuesday, November 07, 2006

சரத்குமார் விலகல்

அ.தி.மு.க.வில் இருந்து சரத்குமார் ராஜினாமா
கட்சித் தலைமைக்கு கடிதம் அனுப்பினார்

சென்னை, நவ.7-

அ.தி.மு.க.வில் இருந்து ராஜினாமா செய்துவிட்டதாக நடிகர் சரத்குமார் அறிவித்துள்ளார்.

தி.மு.க.வில் விலகல்

சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலின்போது ஏற்பட்ட பிரச்சினை காரணமாக தி.மு.க.வில் இருந்து விலகி, அ.தி.மு.க.வில் சேர்ந்தார் நடிகர் சரத்குமார். பாராளுமன்ற மேல்சபையில் தி.மு.க. சார்பில் வகித்து வந்த எம்.பì. பதவியையும் அவர் ராஜினாமா செய்தார்.

இதைத் தொடர்ந்து, சட்டமன்ற தேர்தலின்போது அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக தமிழ்நாடு முழுவதும் சூறாவளி பிரசாரத்தை சரத்குமார் மேற்கொண்டார். அ.தி.மு.க.வில் அவர் சேர்ந்தபோது அவருடன் அவரது மனைவி ராதிகாவும் உடன் சென்றிருந்தார். அப்போது, அவருக்கும் அ.தி.மு.க. உறுப்பினர் அட்டையை அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா அளித்தார்.

ராதிகா நீக்கம்

இந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு அ.தி.மு.க.வில் இருந்து ராதிகா நீக்கப்பட்டதாக ஜெயலலிதா அறிவித்தார். அதன்பிறகு, சரத்குமார் மட்டும் கட்சியில் நீடித்து வந்தார்.

இந்த நிலையில், அ.தி.மு.க.வில் இருந்து விலகியுள்ளதாகவும், அது தொடர்பான ராஜினாமா கடிதத்தை கட்சித் தலைமையிடத்துக்கு அனுப்பியிருப்பதாகவும் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

விரும்பத்தகாத நிகழ்வுகள்

சில விரும்பத்தகாத நிகழ்வுகள் காரணமாக எனது அரசியல் வாழ்க்கையில் கடினமான, மனவேதனை அளிக்கக்கூடிய முடிவுகளை நான் எடுக்க நேர்ந்துள்ளது. எனக்குத் தொடர்ந்து ஆதரவளித்து வரும் ரசிகப் பெருமக்களும், தமிழக மக்களுமே சினிமாவில் நான் இப்போது அடைந்திருக்கும் நிலையை எட்டுவதற்கு காரணமாவார்கள். எனது சினிமா தொழìலை தொடரும் அதே வேளையில், சமுதாய நலன் மற்றும் மேம்பாட்டுக்காக பங்களிக்க விரும்பினேன்.

வறுமை மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றின் பிடியில் இருந்து தமிழகத்தைக் காக்கவும், மாநிலத்தில் சமூக ஒருமைப்பாட்டை நிலைநாட்டவும் நான் எனது ரசிகர்களிடம் எப்போதும் வலியுறுத்தி வந்திருக்கிறேன்.

வேலைப்பளு

அரசியல் மற்றும் சினிமா ஆகிய துறைகளில் நான் மேற்கொண்ட முடிவுகள் எப்போதும் சுயமாக சிந்தித்து எடுக்கப்பட்டவையே ஆகும். கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. மறëறும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தீவிர பிரசாரதëதில் ஈடுபட்டேன். கட்சியில் எனக்களிக்கப்பட்ட பணிகளை விருப்பத்துடன் ஏற்று திருப்தìகரமாக செய்து முடித்திருக்கிறேன்.

தற்போது, நான் சார்ந்திருக்கும் சினிமா தொழிலில் வேலைப்பளு அதிகரித்துள்ளது. அத்துடன், நான் தலைவராக பொறுப்பு வகிக்கும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பணிகளையும் கவனிக்க வேண்டியுள்ளது.

ராஜினாமா

இது போன்றதொரு சூழ்நிலையில் அ.தி.மு.க. தலைமையிடத்துக்கு எனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளேன். எனது தொழிலில் கூடுதல் கவனம் செலுத்தி மேலும் பல உயர்வுகளைப் பெற்று, சினிமா தொழில் மட்டுமின்றி தமிழ்நாட்டு மக்களுக்காகவும், சமுதாயத்துக்காகவும் தொடர்ந்து பாடுபடுவேன்.

இவ்வாறு சரத்குமார் அறிக்கையில் கூறியிருக்கிறார்.

செய்தி: தினத்தந்தி

விஜயகாந்த் மண்டபம்

விஜயகாந்த் திருமண மண்டபம் இடியும்! : "வேறு வழியே இல்லை' என்கிறார் மந்திரி பாலு

சென்னை : சென்னை கோயம்பேட்டில் மேம்பாலம் அமைப்பதற்காக விஜயகாந்தின் திருமண மண்டபத்தை இடிக்காமல் தவிர்ப்பதற்காக அளிக்கப்பட்ட மாற்றுத் திட்டத்தை மத்திய அரசு நிராகரித்துள்ளது. விஜயகாந்துக்குச் சொந்தமான ஆண்டாள் அழகர் திருமண மண்டபத்தை இடிப்பதை தவிர்க்க முடியாது என்று மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் கோயம்பேடு பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த பெரிய மேம்பாலம் கட்ட மத்திய தரைவழிப் போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டது. இதற்காக தயாரிக்கப்பட்ட வரைபடத்தின்படி, நடிகர் விஜயகாந்துக்குச் சொந்தமான ஆண்டாள் அழகர் திருமண மண்டபம் உட்பட நுõற்றுக்கும் மேற்பட்ட கட்டடங்களை கையகப்படுத்தி அவற்றை இடிக்க முடிவு செய்யப்பட்டது.இடத்தை கையகப்படுத்துவது குறித்து மத்திய அமைச்சகம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் விஜயகாந்துக்கு தெரியப்படுத்தியது. அப்போது விஜயகாந்த் அரசியல் கட்சியை துவக்கவில்லை. இடத்தை கையகப்படுத்துவதற்கான நோட்டீசை டி.ஆர்.ஓ., வழங்கிய நேரத்தில், அரசியல் கட்சி துவங்கியிருந்தார் விஜயகாந்த். கல்யாண மண்டபத்தில் கட்சி அலுவலகத்தையும் அமைத்து இருந்தார். திருமண மண்டபம் இடிக்கப்படாமல் தடுப்பதற்காக தி.மு.க., தலைவர் கருணாநிதியை சந்தித்து விஜயகாந்த் பேசினார். அப்போது, தனது கட்டடம் இடிபடாமல் மேம்பாலத்தை அமைப்பதற்கு வசதியாக மாற்று திட்டம் ஒன்றையும் கருணாநிதியிடம் விஜயகாந்த் வழங்கினார். இந்த சந்திப்பு பற்றிய விவரத்தை தி.மு.க., வெளியிட்டதால் அக்கட்சி மீது விஜயகாந்த் அதிருப்தியடைந்தார்.

எனினும் விஜயகாந்த் அளித்த மாற்று திட்டம் மத்திய அரசின் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதனால் கட்டடம் இடிக்கப்படுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் தமிழக சட்டசபைத் தேர்தல் வந்தது, அதில் தி.மு.க.,வை கடுமையாக விமர்சித்து விஜயகாந்த் பிரசாரம் செய்தார். இதன் பின் தி.மு.க., ஆட்சி தமிழகத்தில் அமைந்ததும், ஆளுங்கட்சி மீதான விஜயகாந்தின் விமர்சனம் கடுமையானது. தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடந்தபோதும், தி.மு.க.,வை கடுமையாகத் தாக்கிப் பிரசாரம் செய்தார் விஜயகாந்த்.இதனால் தி.மு.க.,வுக்கும், தே.மு.தி.க.,வுக்கும் இடையேயான மோதலும் அதிகரித்தது. இந்நிலையில், விஜயகாந்தின் மாற்று திட்டத்தை "இந்திய ரோடு காங்கிரஸ்' என்ற மத்திய அரசு நிறுவனம் நிராகரித்துள்ளது. இந்த தகவலை மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு நேற்று தெரிவித்தார்.

சென்னை துறைமுகத்தில் 125வது ஆண்டு வணிக செயல்முறை பற்றிய விழாவில் கலந்து கொண்ட மத்திய கப்பல் மற்றும் தரைவழிப் போக்குவரத்து அமைச்சர் டி.ஆர்.பாலு நிருபர்களிடம் கூறியதாவது: கோயம்பேட்டில் மேம்பாலம் அமைக்கும் பணிக்காக நிலம் கையகப்படுத்துவது தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டது. இப்பணிக்கென 168 பேருடைய நிலங்களை கையகப்படுத்த வேண்டி இருந்தது. இந்த அறிக்கை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டது. இந்த நிலம் கையகப்படுத்தும் அரசின் நடவடிக்கையை எதிர்த்து 164 பேர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் விண்ணப்பங்களை கொடுத்தனர். ஆனால், நிலம் கையகப்படுத்துவற்கு நடிகர் விஜயகாந்த் அப்போது எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இது போல கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதன்படி நிலத்திற்குச் சொந்தமானவர்கள் தங்கள் ஆவணங்களை கொண்டு வர வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.

நடிகர் விஜயகாந்த் தரப்பில் வக்கீல் ஒருவர் மாற்றுத் திட்டம் ஒன்றை கொடுத்தார். அதற்கான வரைபடத்தையும் சமர்ப்பித்தார். அதில் பாரிமுனையில் இருந்து பாடி செல்வதற்கு பாதை இல்லை. அவர் கொடுத்துள்ள மாற்றுத் திட்டத்தை சில தொழில்நுட்ப காரணங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், மண்டபத்தைச் சுற்றி, 40 மீட்டர் சுற்றளவுக்கு நிலம், மேம்பாலம் கட்ட தேவைப்படுவதால் இந்த மாற்றுத் திட்டத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் முடிவு செய்யப்பட்டது. இதனால், மாற்றுத் திட்டம் நிராகரிக்கப்பட்டுள்ளது. இன்னும் மூன்று வாரங்களில் பாலம் அமைக்கும் பணி துவங்கும். இந்த மேம்பாலம் அமைக்கும் பணியால் 168 பேர் பாதிக்கப்படுவர்; அவர்களில் விஜயகாந்தும் ஒருவர். சென்னை துறைமுக பொறுப்புக் கழக அறங்காவலராக இருக்கும் சண்முகம் என்பவரும் பாதிப்படுகிறார். இந்திய சாலை குழு விதிகள் படி விஜயகாந்த் கொடுத்துள்ள மாற்றுத் திட்டம் பொருந்தாது. போக்குவரத்து நெரிசலை தடுக்க இந்த நடவடிக்கையை எடுப்பதை தவிர வேறு வழியில்லை. திருமண மண்டபம் விஜயகாந்தின் மனைவி பெயரில் உள்ளது.இவ்வாறு டி.ஆர்.பாலு கூறினார்.

மத்திய அமைச்சரின் அறிவிப்புப்படி இன்னும் சில நாட்களில் விஜயகாந்தின் திருமண மண்டபம் இடிக்கப்பட உள்ளது. மூன்று வாரங்களில் பாலம் அமைக்கும் பணியை துவக்க உள்ளதால், இடிப்பு பணி உடனடியாக துவக்கப்படும் எனத் தெரிகிறது. இதை எதிர்த்து தே.மு.தி.க.,வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவார்களா அல்லது கோர்ட்டுக்கு செல்வார்களா என்பது விரைவில் தெரியவரும். ஆனால், இந்த இடிப்பு சம்பவம் தி.மு.க.,வுக்கும், தே.மு.தி.க.,வுக்கும் இடையேயான மோதலை இன்னும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செய்தி: தினமலர்

தலைப்புகள்-11/7

தினத்தந்தி

* டெல்லியில் 44 ஆயிரம் கடைகளுக்கு `சீல்'
# டெல்லியில் குடியிருப்புபகுதிகளில் உள்ள 44 ஆயிரம் கடைகள்`சீல்' வைக்கப்படும்- சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு.

* பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்தியஅரசு ஆய்வு
# பெட்ரோல், டீசல் விலை குறைப்பது பற்றி மத்திய அரசு ஆய்வு செய்து வருவதாக பெட்ரோலிய துறை மந்திரி கூறினார்.

* தண்டனையை எதிர்த்து சதாம் உசேன் அப்பீல்
# சதாம் உசேனுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை எதிர்த்து, அப்பீல் செய்யப்போவதாக அவருடைய வக்கீல்கள் அறிவிப்பு.

* அ.தி.மு.க.வில் இருந்து சரத்குமார் ராஜினாமா
அ.தி.மு.க.வில்இருந்து ராஜினாமா செய்துவிட்டதாக அறிவித்து கட்சி தலைமைக்கு நடிகர் சரத்குமார் கடிதம் அனுப்பியுள்ளார்.

* தீவிரவாதிகளுக்கு உதவிய தொழில் அதிபர் பிடிபட்டார்
பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு உதவிய சென்னைதொழில் அதிபரை மைசூர் போலீசார் கைது செய்தனர்.

* நள்ளிரவில் ஆட்டம் போட்ட காதல் ஜோடிகள் கைது
சென்னையில் நட்சத்திர ஓட்டல்களில் நடந்த சோதனையில் மது மயக்கத்தில்ஆட்டம்போட்ட காதல் ஜோடிகள் கைது.

தினமணி

* தில்லியில் கடைகளுக்கு சீல்வைப்பதை தொடர உச்ச நீதிமன்றம் ஆணை
* தில்லியில் இன்று வர்த்தகர்கள் பந்த்
* கச்சா எண்ணெய் விலை சரிவு: பெட்ரோல், டீசல் விலையை குறைக்க பரிசீலனை
* சினிமாவில் புகைபிடிக்கும் காட்சி: தடை மீறலை கண்காணிக்க குழு
* இந்தியாவுடன் விண்வெளி உடன்பாட்டில் ரஷிய அதிபர் புதின் கையெழுத்து
* உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: இலங்கை அணிக்கு ஜயவர்த்தனே கேப்டன்
* பெங்களூர்: மத்திய அமைச்சர் அம்பரீஷ் வருகையால் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய பெங்களூர்
* இலங்கை: இந்தியாவுக்கு விமான சேவையை வாரத்துக்கு 100 ஆக உயர்த்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் திட்டம்
* சிறப்பு பக்கம்: சதாமுக்கு மரண தண்டனை: அப்பீல் நடவடிக்கை தொடங்கியது
தமிழகம்
* அதிமுகவிலிருந்து சரத்குமார் திடீர் ராஜிநாமா
* சென்னையில் திமுக எம்.எல்.ஏ. கைது- கண்துடைப்பு நடவடிக்கை: இல. கணேசன்
* கம்பன் கழகத் தலைவராக மீண்டும் ஆர்.எம்.வீரப்பன் தேர்வு
* துணைநகரம் அமைக்க விளை நிலங்களை கையகப்படுத்துவதை கண்டித்து போராட்டம்
* சென்னையில் ஹோட்டல்களில் ஆபாச நடனம்: 5 பெண்கள் சிக்கினர்

தினமலர்

* விஜயகாந்த் திருமண மண்டபம் இடியும்! : "வேறு வழியே இல்லை' என்கிறார் மந்திரி பாலு
# சென்னை : சென்னை கோயம்பேட்டில் மேம்பாலம் அமைப்பதற்காக விஜயகாந்தின் திருமண மண்டபத்தை இடிக்காமல் தவிர்ப்பதற்காக அளிக்கப்பட்ட மாற்றுத் திட்டத்தை மத்திய அரசு நிராகரித்துள்ளது. விஜயகாந்துக்குச் சொந்தமான ஆண்டாள் அழகர் திருமண மண்டபத்தை இடிப்பதை தவிர்க்க முடியாது என்று மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* அ.தி.மு.க.,வுக்கு சரத்குமார் முழுக்கு
# சென்னை : நடிகர் சரத்குமார் அ.தி.மு.க.,வில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார். வரும் 12ம் தேதிக்குப் பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்கிறார்.

* பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுமா? மத்திய அமைச்சர் முரளி தியோரா பதில்
# புதுடில்லி:சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதால், உள்நாட்டில் பெட்ரோல் விலையை குறைப்பது பற்றி அரசு ஆலோசனை செய்து வருவதாக பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோரா தெரிவித்தார்.

* தமிழகத்தில் மேலும் இரண்டு நாட்களுக்கு மழை
# சென்னை : வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் காரணத்தால் தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்கள் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

* வர்த்தகர்களுக்கு நிவாரணம் இல்லை; உத்தரவில் சுப்ரீம் கோர்ட் உறுதி : சட்ட விரோத கடைகளுக்கு "சீல்' வைப்பதை தொடர மத்திய அரசு முடிவு
# புதுடில்லி :டில்லியில் சட்ட விரோத வர்த்தக நிறுவனங்களுக்கு "சீல்' வைக்கும் பணியை மீண்டும் தொடரும்படி அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நேற்று அதிரடி உத்தரவிட்டுள்ளது. கோர்ட் உத்தரவுப்படி "சீலிங்' நடவடிக்கை அமல்படுத்தப் படும் என மத்திய அரசும் அறிவித்துள்ளது.

* அமெரிக்காவில் இன்று பார்லிமென்ட் தேர்தல் கருத்து கணிப்புகளால் எதிர்க்கட்சிகள் உற்சாகம்
# வாஷிங்டன் : அமெரிக்கா பார்லிமென்ட்டின் காங்கிரஸ் சபையை சேர்ந்த 435 எம்.பி.,க்கள், செனட் சபை எம்.பி.,க்கள் 33 பேர் மற்றும் 36 மாகாணங்களுக்கு கவர்னர்களை தேர்ந்தெடுக்க இன்று தேர்தல் நடக்கிறது. எதிர்க்கட்சியாக உள்ள ஜனநாயக கட்சிக்கு இந்த தேர்தலில் சாதகமான சூழ்நிலை நிலவுவதாக கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளன.

* துலீப் டிராபி: சவுரவ் கங்குலி கலக்கல் சதம்
# கவுகாத்தி : வடக்கு மண்டல அணிக்கு எதிரான துலீப் டிராபி டெஸ்ட் கிரிக்கெட் தொடரில், கிழக்கு மண்டல அணி கேப்டன் சவுரவ் கங்குலி சதம் அடித்து அசத்தினார்.

தினகரன்

* சதாமுக்கு ஆதரவாக பல நாடுகளில் ஆர்ப்பாட்டம் ஈராக் கலவரத்தில் 72 பேர் பலி
* இந்தியாவின் இதயம் தமிழகம் காஷ்மீர் இளைஞர்கள் பேட்டி
* புதுச்சேரியில் கும்பல் வெறி இளைஞர் காங்கிரஸ் செயலாளர் கொலை
* பன்னாட்டு புகையிலை கம்பெனிகளை உறுதியுடன் எதிர்ப்போம்: அன்புமணி
* தென் ஆப்ரிக்காவில் இருந்து வெற்றியோடு திரும்புவோம் டெண்டுல்கர் நம்பிக்கை

Monday, November 06, 2006

விசாரணை விபரம்

சதாம் வழக்கு: விசாரணை-தீர்ப்பு வரை...

பாக்தாத், நவ.6: இராக் முன்னாள் அதிபர் சதாம் ஹுசைனுக்கு தூக்கு தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை தீர்ப்பளித்தது. இந்த வழக்கு விசாரணை தொடங்கி தீர்ப்பு வரையிலான முக்கிய நிகழ்வுகள் விவரம்:

2005, அக்.19: இராக்கின் துஜைல் கிராமத்தைச் சேர்ந்த 148 ஷியா முஸ்லிம்கள் 1982-ல் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக இராக் முன்னாள் அதிபர் சதாம் ஹுசைன் மீது பாக்தாதில் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது. அப்பாவி என்றும் குற்றமற்றவர் என்றும் தன்னை சதாம் வர்ணித்துக் கொண்டார்.

அக்.20: சதாமுடன் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் தலைமை நீதிபதி அவாத் அகமது அல் பாந்தரின் வழக்கறிஞர் சதுன் ஜனாபாய் பாக்தாதில் படுகொலை செய்யப்பட்டார்.

நவ.8: இராக் முன்னாள் துணை அதிபரும் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவருமான தஹா யாசினின் வழக்கறிஞர் ஏ.எம்.அபாஸ் பாக்தாதில் கொலை செய்யப்பட்டார்.

நவ.9: விசாரணை நீதிமன்றம் சட்டரீதியில் செல்லத்தக்கதா என்று சதாம் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் தரப்பு வழக்கறிஞர்கள் கேள்வி எழுப்பினர்.

நவ.28: அரசு தரப்பு முதலாவது சாட்சியின் வாக்குமூலத்தை நீதிமன்றம் பதிவு செய்தது.

டிச.5: துஜைல் கிராமத்தில் நடைபெற்ற ஒட்டுமொத்த கைது, சித்திரவதை, கொலை குறித்து இரண்டு சாட்சிகள் வாக்குமூலம் அளித்தனர்.

2006, ஜன.23: குர்து இனத்தவரான ரபீப் ரஷீத் அப்துல் ரஹ்மான் என்பவரை இடைக்கால தலைமை நீதிபதியாக நீதிமன்றம் நியமித்தது. உறுதி குறைவானவர் என்ற கடும் விமர்சனம் காரணமாக ரிஸ்கர் அகமது அமீன் ராஜிநாமா செய்ததையடுத்து இந்த நியமனம் செய்யப்பட்டது.

பிப்.28: ஷியா முஸ்லிம்களை சித்திரவதை செய்து கொலை செய்ய சதாம் ஹுசைன் உத்தரவிட்டது தொடர்பான அவரது கையொப்பத்துடன் கூடிய ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

மார்ச் 1: தன்னை படுகொலை செய்ய முயன்றதாக சந்தேகப்படும் துஜாயில் கிராமத்தைச் சேர்ந்த ஷியா முஸ்லிம்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதாக சதாம் ஹுசைன் ஒப்புக் கொண்டார்.

ஏப்.17: நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களில் உள்ள சதாமின் கையெழுத்தின் நம்பகத்தன்மையை நிபுணர்கள் உறுதி செய்தனர்.

மே 15-17: சதாம் மற்றும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தாங்கள் குற்றமற்றவர்கள் என்று மீண்டும் மீண்டும் குறிப்பிட்டனர்.

ஜூன் 19: வழக்கில் சதாம் ஹுசைன் உள்ளிட்ட மூவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று அரசு தரப்பு தலைமை வழக்கறிஞர் கோரினார்.

ஜூன் 21: சதாம் தரப்பு வழக்கறிஞர் கமீஸ் அல் ஒபீதி கொலை செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டார் சதாம் ஹுசைன்.

ஜூலை 26: இரண்டாவது முறையாக உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்ட சதாம், 18 நாள்களுக்கு பிறகு போராட்டத்தை முடித்துக் கொண்டார். தூக்கிலிடப்பட்டு சாவதை விடவும் சுடப்பட்டு இறப்பதையே விரும்புவதாக குறிப்பட்டார் சதாம்.

ஜூலை 27: வழக்கு விசாரணை அக்.16-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அக்.29: சதாம் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டால் அதன் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று அவரது தரப்பு வழக்கறிஞர் கலீல் அல் துலாமி அமெரிக்க அதிபர் புஷ்ஷுக்கு கடிதம் எழுதினார்.

நவ.5: சதாம் ஹுசைன் உள்ளிட்ட மூவருக்கு வழக்கு விசாரணை நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. ஒருவருக்கு ஆயுள் தண்டனையும், மூவருக்கு 15 வருட சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டது. மற்றொருவர் விடுவிக்கப்பட்டார்.

செய்தி: தினமணி

ஆதரவு x எதிர்ப்பு

சதாமுக்கு மரண தண்டனை: அரபு மக்களின் வரவேற்பும், எதிர்ப்பும்

பேரூத், நவ.6: இராக் முன்னாள் அதிபர் சதாம் உசேனுக்கு நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியுள்ளதை அரபு மக்களில் சிலர் வரவேற்றுள்ளனர். வேறு சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்றுக் குவித்த சதாம் உசேனுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை சரியானதுதான் என்று சிலர் கூறினர். ஆனால் வேறு சிலரோ, இந்த தீர்ப்பு நியாயமற்றது. அமெரிக்கா திட்டமிட்டு சதாம் உசேனை பழிவாங்கிவிட்டது என்று கூறியுள்ளனர்.

சதாம் உசேனுக்கு அமெரிக்க ஆதரவிலான நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியுள்ளது. இதன் பின்னணி என்னவெனில் அமெரிக்க படைகள் இன்னும் சில காலம் இராக்கில் தங்கியிருக்கும் என்பதுதான் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

சதாமுக்கு தண்டனை ஏதும் வழங்காமலோ அல்லது தண்டனையைக் குறைத்தாலோ, அமெரிக்கா கலகப்படையினருக்கு பயந்துவிட்டது என்ற பேச்சு எழுந்திருக்கும். இப்போது அதற்கு வழியில்லை என்று தாவூத் அல் ஷிரியன் என்ற சவூதி பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார்.

ஒரு நாட்டின் தலைவர் என்ற முறையில் சதாம் உசேனுக்கு சுதந்திரமாக ஆட்சி செய்ய உரிமை உள்ளது என்று சிலர் கருத்து கூறியுள்ளனர். சதாம் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட பின்னர் இராக்கில் வன்முறை அதிகரித்ததை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மரண தண்டனை பெறும் அளவுக்கு சதாம் குற்றவாளி என்றால், அமெரிக்க அதிபர் புஷ்ஷும் ஒருவகையில் குற்றவாளிதான். லெபனான் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல் பிரதமர் எஹுத் உல்மர்ட்டும் குற்றவாளிதான். அவர்கள் இருவருக்கும் மரண தண்டனை அளிக்க வேண்டும் என்று அம்மானில் நகைக் கடை வைத்திருக்கும் இப்ராகிம் ஹரிஷ் தெரிவித்தார்.

சதாமுக்கு மரண தண்டனை கிடைக்கும் என்பது ஏற்கெனவே எதிர்பார்த்ததுதான் என்று சதாம் ஆட்சியில் பாதுகாப்புத்துறை அதிகாரியாக இருந்த ஜியாத் அல் காஸôவெனி தெரிவித்தார்.

சதாமுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது சரியான நடவடிக்கைதான் என்று ஸன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த இராக்கியரும், ஜோர்டானில் தொழில்நடத்தி வருபவருமான சலா ஹஸ்ஸன்.

ஆனால் ஷியா பிரிவைச் சேர்ந்த 29 வயது இளைஞர் ஜாஸிம் அலி, இதில் எந்த நியாயமும் இல்லை என்கிறார். இவரும் ஜோர்டானில்தான் இருக்கிறார்.

சதாமுக்கு மரண தண்டனை வழங்கியது மிகக் கொடுமையானது. இராக்கில் இப்போது ஆட்சியிலிருக்கும் தலைவர்கள் மீது விசாரணை நடத்தி அவர்களை தூக்கில் போடுவதுதான் நியாயமானது. ஏனெனில் அவர்கள்தான் அமெரிக்காவின் கைக்கூலியாக இருப்பவர்கள் என்று ஆவேசத்துடன் குறிப்பிட்டார் ஜாஸிம் அலி.

இந்நிலையில் குவைத் மக்கள் சிலர், சதாமுக்கு அளிக்கப்பட்ட தண்டனை சரியானதுதான். இன்னும் சொல்லப்போனால் அவருக்கு எப்போதோ மரண தண்டனை அளித்திருக்க வேண்டும்; காலதாமதமாக அறிவிக்கப்பட்டபோதிலும் இது வரவேற்கத்தக்கதுதான் என்று தெரிவித்துள்ளனர். (1990-ல் சதாம் குவைத் மீது படையெடுத்தது நினைவிருக்கும்.)

சதாமுக்கு வழங்கப்பட்ட தண்டனை மற்ற அரபு தலைவர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும். அரபு நாட்டு வரலாற்றில் முதல் முறையாக முன்னாள் அதிபர் மீது வழக்கு நடத்தி தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்றார் குவைத்தைச் சேர்ந்த பேராசிரியர் அப்துல் ரிதா அஸ்ஸீரி.

சதாமுக்கு மரணதண்டனை வழங்காமல் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்திருக்க வேண்டும். ஏராளமான உயிர்களை பலிவாங்கிய அவர், சிறையில் அவரை குற்ற உணர்ச்சியால் அணுஅணுவாக சாகடித்திருக்க வேண்டும் என்கிறார் குவைத்தைச் சேர்ந்த கோலோத் அல்-பீலி என்ற பெண்மணி.

செய்தி: தினமணி

தலைப்புகள்-11/6

தினத்தந்தி

* சதாம் உசேனுக்கு தூக்கு தண்டனை
# 148 பேரை கொன்று குவித்த ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேனுக்கு தூக்கு தண்டனை விதித்து தனிக்கோர்ட்டு தீர்ப்பு.

* கவுகாத்தியில் 2 இடத்தில் குண்டு வெடித்து 10பேர் சாவு
# கவுகாத்தி நகரில் 2 இடங்களில் குண்டுகள் வெடித்தன. இதில் 10 பேர் இறந்தனர். 52 பேர் காயம்.

* கறுப்பு கொடி ஆர்ப்பாட்டம் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு
# 17-ந் தேதி டெல்லி வரும் இலங்கை அதிபருக்கு சென்னையில் கறுப்புகொடி ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்று ராமதாஸ்கூறினார்.

* சென்னை மீனவர்கள் 5 பேரின் கதி என்ன?
# சென்னை காசிமேடு மீனவர்கள் சென்ற படகு பூம்பூகாரில் கரை ஒதுங்கியது. அதில் இருந்த 5மீனவர்களின் நிலை என்ன?.

* சென்னை :ஓட்டல்களில் மதுவிருந்துடன் கொண்டாட்டம்
# சென்னையில் நள்ளிரவில் குடி போதையில் நட்சத்திர ஓட்டல்களில் ஆட்டம்போட்டதாக 26 பேரை போலீசார் கைதுசெய்தனர்.

தினமணி

* சதாம் ஹுசைனுக்கு மரண தண்டனை
* "சர்வதேச சமூகம் ஏற்பதாக இருக்க வேண்டும்': இந்தியா
* சிறப்புப் பக்கம்: அரபு மக்களின் வரவேற்பும் எதிர்ப்பும்
* இந்தியா வரும் இலங்கை அதிபருக்கு கண்டனம்:
* 'வீடுகளில் கருப்பு கொடி ஏற்றுங்கள்' - ராமதாஸ்
* அடுத்த சில ஆண்டுகளில் பொருளாதாரத்தில் உலகில்
* 3-வது பெரிய நாடாக இந்தியா மாறும்: சிதம்பரம்
* தமிழகத்தில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை: வைகோ
* தகவல் அறியும் உரிமைச் சட்ட அமலில் மெத்தனம்: தமிழக தலைமைச் செயலருக்கு நோட்டீஸ்
* பிராக்கென், மெக்ராத் அபாரம்: கோப்பை வென்றது ஆஸி

தினமலர்

* சதாமுக்கு தூக்கு!* 148 பேரை கொலை செய்த வழக்கில் ஈராக் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு * உடந்தையாக இருந்த மேலும் இரண்டு பேருக்கும் மரண தண்டனை
# பாக்தாத்: ஈராக் துஜெய்ல் நகரில் 148 ஷியா முஸ்லிம்களை கொன்ற வழக்கில் சதாம் உசேனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

* சிறப்பு பொருளாதார மண்டலங்கள் சட்டத்தில் திருத்தம்*பார்லி., தொடரில் வலியுறுத்த இடதுசாரிகள் திட்டம்
# புதுடில்லி: மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ள சிறப்பு பொருளாதார மண்டல சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும்படி வரும் பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடரின்போது இடது சாரிகள் வலியுறுத்த உள்ளன.

* பொதுச் செயலராகிறார் ராகுல் காந்தி * காங்கிரசில் விரைவில் அதிரடி மாற்றம்
# புதுடில்லி: அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அதிவிரைவில் மாற்றியமைக்கப்பட உள்ளது. அடுத்த ஆண்டு உ.பி.,யில் நடக்க இருக்கும் சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு ராகுல் காந்தி காங்கிரஸ் பொதுச் செயலராக நியமிக்கப்படலாம் என நம்பப்படுகிறது.

* நவ.7 தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
# சென்னை: ""புற்றுநோய் என்பது குணப்படுத்த முடியாத நோய் என்ற தவறான கருத்து, மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. இந்நோய்க்கு ஆரம்ப கட்டத்திலேயே சிகிச்சை அளிக்கப்படுமானால் 95 சதவீதம் பேரை காப்பாற்ற முடியும்,'' என்று அடையாறு புற்றுநோய் மைய அறிவியல் இயக்குனர் ராஜ்குமார் தெரிவித்தார்

* சென்செக்ஸ் 13 ஆயிரம் புள்ளிகளை தாண்டியதால் மியூச்சுவல் பண்ட்களில் முதலீடுகள் அதிகரிப்பு
# மும்பை: மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 13 ஆயிரம் புள்ளிகளை எட்டியுள்ளதால், சாதாரணமாக வங்கிகளுக்கு வரவேண்டிய பணமெல் லாம் தற்போது பங்குச் சந்தைக்கு, அதாவது மியூச்சுவல் பண்ட்களுக்கு சென்று கொண்டிருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

* இந்திய சீன எல்லை பிரச்னையில் முன்னேற்றம் * சீன அரசு அறிக்கையில் தகவல்
# பீஜிங்: இந்தியாசீனா இடையிலான எல்லைப் பிரச்னைக்கு தீர்வு காணும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக சீன வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

* முதல் முறையாக ஆஸி., "மினி' சாம்பியன்!* வாய்ப்பை கோட்டை விட்டது வெ.இண்டீஸ்
# மும்பை: சபாஷ் பாண்டிங்! மினி உலக கோப்பை வரலாற்றில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது ஆஸ்திரேலியா. நேற்று நடந்த இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி, டக்வொர்த் லீவிஸ் விதிமுறைப்படி வெஸ்ட் இண்டீசை 8 விக்கெட் வித்தியாசத்தில் மிக எளிதாக வீழ்த்தியது.

தினகரன்

* 148 பேரை படுகொலை செய்ததாக குற்றச்சாட்டு சதாம் உசேனுக்கு தூக்கு ஈராக் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு
* குழந்தைகள் இறப்புக்கான காரணத்தை ஆராய வேண்டும் மருத்துவர்கள் வலியுறுத்தல்
* விடுதலைப்புலிகள் சுட்டு வீழ்த்தியதா? மீனவர் வலையில் சிக்கிய இலங்கை விமான டயர்கள்
* தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களுக்கு சலுகைகள் தொடரும்: தயாநிதி மாறன்

Sunday, November 05, 2006

சதாம் உசேன்

சதாம் எழுச்சியும் வீழ்ச்சியும்
நவம்பர் 05, 2006

பாக்தாத்: அமெரிக்காவின் கண்களில் விரலை விட்டு ஆட்டியவர் சதாம் உசேன். இப்போதைய அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் தந்தை சீனியர் ஜார்ஜ் புஷ் அமெரிக்க அதிபராக இருந்தபோதுதான் குவைத்தை ஆக்கிரமித்தார் சதாம்.

அப்போது அமெரிக்கா தலைமையிலான படைகள் ஈராக்கை குண்டு மழை பொழிந்து துவம்சம் செய்தபோது, படு வீரமாக பதிலடி கொடுத்து அமெரிக்காவை கலங்கடித்தவர் சதாம்.

அப்படிப்பட்ட சதாம், ஜூனியர் புஷ்ஷின் அமெரிக்க படையினரிடம் சிக்கி தாடியும், பரிதாபமான முகமுமாக பிடிபட்டபோது உலகமே சதாமுக்காக பரிதாபப்பட்டது. சதாமின் வாழ்க்கையே ஒரு போர்க்களம்தான்.

1937, ஏப்ரல் 28: ஈராக் தலைநர் பாக்தாத்திலிருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திக்ரித் நகருக்கு அருகே உள்ள அல் ஆவ்ஜா என்ற கிராமத்தில் சதாம் பிறந்தார்.

1959, அக்டோரப்ச பிரதமர் அப்தல் கரிம் கசீமை கொல்ல நடந்த முயற்சியில் சதாம் பங்கேற்றார். தோல்வி அடைந்ததால் வெளிநாட்டுக்குத் தப்பி ஓடினார்.

1963, பிப்ரவரி: பாத் கட்சி ராணுவப் புரட்சியின் மூலம் ஆட்சியைப் பிடித்தது. சதாம் ஈராக் திரும்பினார். ஆனால் 9 மாதங்களிலேயே பாத் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. சதாம் கைது செய்யப்பட்டார். சிறையில் இருந்தபோது கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1968, ஜூலை: ராணுவத்தில் புரட்சி செய்து பாத் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்தது.

1975, மார்ச்: புரட்சிகர கவுன்சிலிந் துணைத் தலைவராக இருந்த சதாம், ஈரான் மன்னர் ஷாவுடன் எல்லை தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

1979, ஜூலை 16: ஈராக் அதிபராக முதல் முறையாக பதவியேற்றார்.

1980, செப்டம்பர் 22: ஈரானுடன் யுத்தத்தைத் தொடங்கினார். எட்டு ஆண்டுகளுக்கு இது நீடித்தது.

1990, ஆகஸ்ட். 2: குவைத் மீது ஈராக் படையெடுத்து கைப்பற்றியது. ஐ.நா. பாதுகாப்பு சபை ஈராக் மீது பொருளாதாரத் தடை விதித்தது.

1991, ஜனவரி 17: அமெரிக்கா தலைமையிலான படை, ஈராக் மீது போர் தொடுத்தது.

1995, அக்டோபர் 15: ஈராக்கில் நடந்த கருத்துக் கணிப்பு மூலம் மீண்டும் அதிபர் ஆனார் சதாம்.

2002, அக்டோபர் 15: மீண்டும் அதிபராக சதாம் கருத்துக் கணிப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு ஆதரவாக 100 சதவீதம் பேர் கருத்து தெரிவித்ததாக தகவல்கள் தெரிவித்தன.

2003, மார்ச் 17: ஈராக்கை விட்டு 48 மணி நேரத்திற்குள் சதாம் வெளியேற வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் கெடு விதித்தார்.

மார்ச் 20: ஈராக் மீது அமெரிக்கா தலைமையிலான படைகள் தாக்குதலைத் தொடங்கின. சதாம் தலைமறைவானார்.

ஏப்ரல் 4: பாக்தாத் நகர வீதிகளில் சதாம் நடமாடுவது போன்ற வீடியோ காட்சி வெளியானது.

ஜூலை 22: சதாமின் இரு மகன்களான குவாசி, உதய் ஆகியோர் மொசூல் நகரில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

ஜூலை 31: சதாமின் இரு மகள்கள் ராக்தாத், ரானா, அவர்களின் 9 குழந்தைகளுக்கு ஜோர்டான் மன்னர் அப்துல்லா அடைக்கலம் கொடுத்தார்.

டிசம்பர் 13: திக்ரித் நகரிலிருந்து 10 மைல் தொலைவில் உள்ள அட்வார் என்ற இடத்தில் பதுங்கு குழியில் தலைமறைவாக இருந்த சதாம் உசேன் பிடிபட்டார்.

அதன் பின்னர் சதாம் உசேன் மற்றும் அவரது ஆட்சியில் அதிகாரிகளாக இருந்தவர்கள், ராணுவத்திற்குத் தலைமை தாங்கியவர்கள் என அனைவர் மீதும் தனியாக நியமிக்கப்பட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இன்று ஒரு வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ளது.

சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்தவரான சதாம் உசேன், உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் மட்டும் அல்லாது, அனைவரையும் தனது வீர தீர பேச்சு மற்றும் செயல்களால் கவர்ந்த சதாமின் அத்தியாயம் கடைசி கட்டத்திற்கு வந்துள்ளது.

செய்தி : தட்ஸ்தமிழ்

3 பேருக்கு தூக்கு

சதாம் உசேன் உள்பட 3 பேருக்கு தூக்கு!
ஒருவருக்கு ஆயுள் 3 பேருக்கு 15 ஆண்டு சிறை
நவம்பர் 05, 2006

பாக்தாத்: 182 ஷியா முஸ்லீம்களைக் கொன்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேன் உள்பட 3பேருக்கு தூக்குத் தண்டனையும், முன்னாள் துணை அதிபர் ரமதானுக்கு ஆயுள் தண்டனையும், பாத் கட்சியைச் சேர்ந்த 3 பேருக்கு தலா 15 ஆண்டு சிறைத் தண்டனையும் விதித்து தனி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 1982ம் ஆண்டு துஜைல் என்ற ஊரில், தனக்கு எதிராக ஷியா முஸ்லீம்களில் சிலர் கொலை சதித் திட்டத்தை தீட்டியதால் ஆத்திரமடைந்த சதாம் அதற்குக் காரணமானவர்களை கொன்று குவிக்க உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து 182 ஷியா முஸ்லீம்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

அமெரிக்க படையினரின் ஊடுறுவலுக்குப் பின்னர் சதாம் கைது செய்யப்பட்டார். அவர் மீது பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டன. அவற்றை தனி நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இதில், 182 பேர் கொலை செய்யயப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.

முதல் குற்றவாளியான சதாம் உசேனுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி அறிவித்தார். அவரை சாகும் வரை தூக்கிலிட வேண்டும் என நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்தார். மனித குலத்திற்கு எதிரான குற்றத்தில் அவர் ஈடுபட்டதாக நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

இன்னொரு குற்றவாளியான அவாத் ஹமாத் அல்பாந்தர் என்பவருக்கும் தூக்குத் தண்டனையும், சதாம் உசேனின் தம்பியான பர்ஸான் இப்ராகிம் அல் திக்ரிதிக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.

முன்னாள் துணை அதிபர் தாஹா யாசின் ரமதானுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

பாத் கட்சியைச் சேர்ந்த 3 நிர்வாகிகளுக்கு தலா 15 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி அறிவித்தார். இந்த 3 பேர் மீதான கொலை மற்றும் சித்திரவதை புகார்கள் நீரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி தனது உத்தரவில் தெகிவித்தார்.

முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான முகம்மது அஸாவி அலி மீதான புகார்களுக்கு ஆதாரம் இல்லை என்று கூறிய நீதிபதி அவரை விடுவிப்பதாக அறிவித்தார்.

முன்னதாக குற்றவாளிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கிளார்க், தீர்ப்பு வழங்கப்படுவதை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரினார். ஆனால் அதை ஏற்க முடியாது என்று தெரிவித்த நீதிபதி, கிளார்க்கை உடனடியாக நீதிமன்ற அறையிலிருந்து வெளியேற்றுமாறு உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து கிளார்க வெளியேற்றப்பட்டார்.

தூக்குத் தண்டனை குறித்த தீர்ப்பை அறிவிப்பதற்கு முன்பு சதாம் உசேனை எழுந்து நிற்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் நான் உட்கார்ந்துதான் இருப்பேன் என்று சதாம் உறுதியாக கூறினார். இதையடுத்து காவலர்கள் அவரை கட்டாயப்படுத்தி எழுந்ந்து நிற்க வைத்தனர்.

பின்னர் நீதிபதி தனது தீர்ப்பை வாசித்தார். அப்போது கோபத்துடன் ஆவேசமாக பேசினார் சதாம். அல்லாஹு அக்பர், ஈராக் வாழ்க. ஈராக் மக்கள் வாழ்க, நீங்கள் இந்த்த தீர்பபை சொல்லும் தகுதி படைத்தவர் அல்ல. ஆக்கிரமிப்பாளர்களின் முகமுடி நீங்கள், உங்களுக்கு என்னைத் தண்டிக்கும் உரிமை இல்லை.

இது எங்களது பூமி. இங்கே ஆக்கிரமித்து உள்ளே புகுந்தவர்களால் நியமிக்கப்பட்ட நீங்கள் எங்களைத் தண்டிக்க முடியாது என்று கோபமாக கூறியபடி இருந்தார். சதாம் உசேன் மீதான தீர்ப்பை சொல்லி முடித்தவுடன் சதாமை அங்கிருந்து வெளியே கொண்டு செல்லுமாறு நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து காவலர்கள் சதாமை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

சதாம் உள்ளிட்ட 3 பேருக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையை 30 நாட்களுக்குள் நிறைவேற்ற நீதிபதி உத்தரவிட்டார். இருப்பினும் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் மேல் முறையீடு செய்து கொள்ள ஈராக் சட்டப்படி உரிமை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த மேல் முறையீட்டிலும் அவர்களது தண்டனை உறுதி செய்யப்பட்டால் தண்டனை நிறைவேற்றப்படும்.

தீர்ப்பையொட்டி ஈராக் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தலைநகர் பாக்தாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. ஈராக்கில் உள்ள அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் தீர்ப்பு செய்தி நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

ராணுவ வீரர்களுக்கு அளிக்கப்பட்டிருந்த விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. நாட்டின் முக்கியப் பகுதிகளில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட பிற நாட்டுப் படையினரும் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

சதாம் ஆதரவாளர்கள் சில இடங்களில் தாக்குதலைத் தொடங்கி விட்டனர். சதாம் சார்ந்த சன்னி முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் அகமதியா மாவட்டத்தில் நடந்த கலவரத்தில் 7 பேர் கொல்லப்பட்டனர். 20 பேர் காயமடைந்தனர்.

தலைநகர் பாக்தாத்தில் நேற்று இரவு முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. துஜைல், சதாமின் சொந்த மாகாணம் ஆகியவற்றிலும் பலத்த பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து பாக்தாத் விமான நிலையம் உடனடியாக மூடப்பட்டது. பாக்தாத் மற்றும் அருகாமையில் உள்ள இரண்டு மாவட்டங்களில் காலவரையற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

சதாமுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட தகவலை அறிந்ததும் அவரது எதிர்ப்பாளர்கள் துப்பாக்கிகளால் வானை நோக்கி சுட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சதாமின் சொந்த ஊரான திக்ரிதியில், பெருத்த சோகம் காணப்படுகிறது.

ஈராக்கின் பல்வேறு பகுதிகளிலும் சதாமின் எதிர்ப்பாளர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். வன்முறை மற்றும் கலவரம் வெடிக்காமல் தடுக்கும் பொருட்டு ஈராக் ராணுவம், போலீஸ் மற்றும் பன்னாட்டுப் படையினர் ஈராக் முழுவதும் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மரணத்தைக் கண்டு அஞ்சவில்லை: சதாம்

முன்னதாக, தனக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டால் அதை தைரியமாக எதிர்கொள்வேன் என்று சதாம் உசேன் கூறியுள்ளார். தீர்ப்பையொட்டி அவரது வழக்கறிஞர் துலாமி சதாமை சிறையில் சென்று சந்தித்தார்.

அப்போது சதாம் கூறியது குறித்து துலாமி கூறுகையில், மரண தண்டனைக்குத் தான் பயப்படவில்லை என்று சதாம் கூறினார். அவர் ஆவேசமாக உள்ளார். அதேசமயம், தைரியமாகவும் உள்ளார்.

என்னைத் தூக்கில் போடாதீர்கள். நான் ராணுவ வீரன். என்னைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விடுங்கள் என்று அவர் கூறினார் என்றார் துலாமி. அவர் மேலும் கூறுகையில், சதா¬க்கு மரண தண்டனை விதித்தால் நாட்டில் அமைதி போய் விடும். ரத்த ஆறு ஓடும். நரகத்தின் கதவைத் திறக்கப் போகிறார்கள்.

இந்தத் தண்டனையால் அமெரிக்காவுக்கும், அரபு, முஸ்லீம் நாடுகளுக்கும் நிரந்தரப் பகை ஏற்படுவதை யாராலும் தடுக்க முடியாது என்றார் துலாமி.

தற்போது சதாமுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் அவரது ஆதரவாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

செய்தி: தட்ஸ்தமிழ்

சதாமுக்கு தூக்கு

துஜெய்ல் படுகொலை வழக்கு : ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேனுக்கு தூக்கு தண்டனை

பாக்தாத்: கடந்த 1982ம் ஆண்டு துஜெய்ல் நகரில் 148 பேர் படுகொலை செய்தது தொடர்பாக ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேனை சாகும் வரை தூக்கிலிட நீதிபதி ரவுப் ரசித் அப்துல் ரகுமான் உத்தரவிட்டார்.

மேலும் 30 நாட்களுக்குள் சதாமுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றவும் அவர் உத்தரவிட்டார். விவரம் வருமாறு ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேன் மற்றும் ஏழு பேருக்கு எதிராக கடந்த 1982ம் ஆண்டு துஜெய்ல் நகரில் 148 பேர் படுகொலை செய்தது தொடர்பாக பாக்தாத் சிறப்பு கோர்ட்டில் வழக்கு நடந்து வந்ததுது. வழக்கு விசாரணை முடிந்து விட்ட நிலையில் தீர்ப்பை நீதிபதி வெளியிட்டார் . இதில் ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேனை சாகும் வரை தூக்கிலிட நீதிபதி உத்தரவிட்டார்.

சதாம் உசேனுடன் சேர்த்து பார்ச்ன் இப்ராஹிம் மற்றும் ஹமித் அல் பய்தருக்கும் தூக்கு தண்டனை வழங்கப்பட்டது . ஈராக் முன்னாள் துணை அதிபர் தகா யாசின் ரமதானுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேலும் இவ்வழக்கு தொடர்பாக பாத் கட்சியை சேர்ந்த 3 பேருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது.. தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய 10 நாள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்ததீர்ப்பையடுத்து ஈராக்கில் பதட்டம் நிலவுகிறது. மக்கள் சாலைகளில் சதாமுக்கு ஆதரவாகவும், அமெரிக்கா மற்றும் ஈராக் அரசிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கூச்சல் எழுப்பினர். ஈராக்கில் பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் பல இடங்களில் இந்த தீர்ப்பை கேட்டு மக்கள் மகிழ்ச்சியில் ஆட்டம் போட்டனர்.

செய்தி: தினமலர்

சதாம் வழக்கில் தீர்ப்பு

சதாம் உசேனுக்கு மரண தண்டனை- தீர்ப்பை கேட்டு சதாம் உசேன் ஆவேசம்

பாக்தாத், நவ. 5-

பேரழிவு ஆயுதங்களை தயாரித்ததாக கூறி ஈராக் மீது அமெரிக்கா கடந்த சில ஆண்டுகளுக்கு முன் போர் தொடுத்தது. கடும் தாக்குதலுக்குப் பிறகு சதாம் உசேன் ஆட்சியை அமெரிக்க கூட்டணி படை அகற்றியது. ஆனால் சதாம் உசேன் அமெரிக்க படையிடம் சிக்காமல் பதுங்கி இருந்தார்.

பல மாதங்களாக நடந்த தேடுதல் வேட்டைக்கு பிறகு பாதாள அறையில் பதுங்கி இருந்த சதாம் உசேனை அமெரிக்க படை 3 ஆண்டுகளுக்கு முன் கைது செய்தது.சதாம் ஆட்சி அகற்றப்பட்டதை தொடர்ந்து அங்கு அமீது கர்சாய் தலைமையில் புதிய ஆட்சி ஏற்பட்டது.

சிறையில் அடைக்கப்பட்ட சதாம் உசேன் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

தனது ஆட்சி காலத்தில் சதாம் உசேன் தனது அரசியல் எதிரிகளை கொன்றதாகவும், 1980-ம் ஆண்டு துஜைல் நகரில் 148 ஷியா முஸ்லிம் மக்களை கொன்று குவித்ததாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பாக்தாத்தில் இந்த வழக்கை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டது. நீதிபதி ரவூப் அப்துல் ரகுமான் தலைமையில் 5 நீதிபதிகள் இந்த வழக்கை விசாரித்தனர்.

இந்த வழக்கு விசாரணையின்போது சதாம் உசேனின் வக்கீல்கள் பலர் கடத்தப்பட்டனர். விசாரணை கூண்டில் உட்கார்ந்தபடியே சதாம் உசேன் நீதிபதியுடன் காரசார விவாதத்தில் ஈடுபட்டார். பல தடவை விசாரணைக்கு ஒத்துழைக்காமல் வெளிநடப்பு செய்தார். வழக்கு விசாரணையில் அமெரிக்கா தலையீடு இருப்பதாகவும், நீதிபதி அமெரிக்காவின் கைப்பாவை என்றும் சதாம் உசேன் ஆவேசமாக குற்றம் சாட்டினார்.

உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் கடந்த அக்டோபர் மாதம் 16-ந்தேதி தீர்ப்பு வழங்கப்படுவதாக இருந்தது. ஆனால் தீர்ப்பு 2 வாரத்துக்கு மேல் தாமதம் ஆனது. இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில் சதாம் உசேனுடன் அவரது சகோதரர், உதவியாளர் உள்பட மேலும் 7 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் சதாம் உசேனால் கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் கண்ணீர் மல்க அவருக்கு எதிராக சாட்சியம் அளித்தனர்.

அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டு உள்ளதால் அவருக்கு அந்த நாட்டு சட்டப்படி தூக்கு தண்டனை வழங்கப்படுவது உறுதி என்றே அனைத்து வட்டாரங்களும் தெரிவித்துள்ளன. ஒருவேளை அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படவும் வாய்ப்பு உள்ளது.

சதாம் உசேனுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்படுவதை யொட்டி ஈராக் முழுவதும் பதட்டம் உருவாகி உள்ளது. ஏற்கனவே சதாம் உசேன் ஆதரவு தீவிரவாதிகள், சன்னி பிரிவினர் ஈராக் அரசுக்கு எதிராகவும், அமெரிக்க படைகளுக்கு எதிராகவும் தற்கொலை படை தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

சதாம் உசேன் வழக்கில் தீர்ப்பு வருவதால் தீவிரவாதிகள் அதிரடி தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் நாடு முழுவதும் ராணுவம் உஷார் படுத்தப்பட்டுள்ளது.

ராணுவத்தினருக்கு விடுமுறை ரத்து செய்யப்பட்டு உடனடியாக வேலையில் சேர உத்தரவிடப்பட்டு உள்ளது. அமெரிக்காவை துணிச்சலுடன் எதிர்த்த சதாம் உசேனை சில அரபு நாடுகளும், இதர முஸ்லிம் நாடுகளும் ஆதரிக்கின்றன. அந்த நாடுகளிலும் பதட்டம் நிலவுகிறது. சதாம் உசேனுக்கு ஆதரவாகவும் அமெரிக்காவை கண்டித்தும் ஜோர்டான் உள்பட பல நாடுகளில் ஆர்ப்பாட்டம், பேரணி நடந்து வருகிறது.

அமெரிக்கா மற்றும் அதன் ஆதரவு நாடுகளிலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

ஈராக் தலைநகர் பாக்தாத் மற்றும் அதை ஒட்டிய 2 முக்கிய நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. சதாம் உசேனின் சொந்த ஊரான திக்ரித் நகரம் அமைந்துள்ள சலாகுதீன் மாகாணத்திலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஈராக்கில் ரத்த ஆறு ஓடும் அபாயம் அதிகரித்துள்ளது.

வாகன போக்குவரத்தும் சில நகரங்களில் தடை செய்யப்பட்டுள்ளது. பாக்தாத் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் ஷியா மற்றும் குர்து இன மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் சதாம் உசேன் ஆட்சியில் கொடுமைப்படுத்தப்பட்டவர்கள் இன்று தீர்ப்பு வருவதால் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்தில் திளைக்கிறார்கள்.

சதாம் வழக்கில் தீர்ப்பு கூறும் நீதிபதி அப்துல் ரகுமான் குர்து இனத்தை சேர்ந்தவர். சதாம் உசேனால் இவரது இனத்தவர்கள் பலர் கொல்லப்பட்டனர்.

இன்று அந்த நீதிபதி வாசிக்கும் தீர்ப்பு 100-க்கும் மேற்பட்ட பக்கங்களை கொண்டது. அதை முழுமையாக படித்து முடிக்க பல மணி நேரம் ஆகும். தீர்ப்பு மற்றும் தண்டனையை முழுமையாக ஒரே நாளில் அறிவிக்க முடியாததால் கட்டம் கட்டமாக அறிவிக்கவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

தூக்குத்தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டால் அதை எதிர்த்து சதாம் உசேன் அப்பீல் செய்ய முடியும். எனவே தண்டனை நிறைவேற்றப்படுவதிலும் தாமதம் ஆகும்.

சதாம் உசேன் வாழ்க்கை குறிப்பு

1937 ஏப்ரல் 28-பாக்தாத் அருகே திக்ரிக் பகுதியில் உள்ள அவுஜா கிராமத்தில் ஏழை விவசாயியின் மகனாக பிறந்தார்.

1956 ஈராக்கின் பாத் சோசலிஸ்ட் கட்சி உறுப்பினராக சேர்ந்தார்.

1958-அப்போதைய ஈராக் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியதாக 6 மாதம் சிறையில் அடைக்கப்பட்டார்.

1959- பிரதமர் அப்துல் கரீமுக்கு எதிராக நடந்த புரட்சியில் ஈடுபட்டார். அப்போது மந்திரியின் காவலாளி சுட்டதில் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. அதே ஆண்டில் சிரியா மற்றும் எகிப்துக்கு தப்பி ஓடினார்.

1960 பிப்ரவரி 25-புரட்சி நடத்தியதாக மரண தண்டனை விதிக்கப்பட்டது.

1962- எகிப்தில் மேல்நிலை பள்ளி படிப்பை முடித்தார்.

1963 பிப்.8- ரமகான் புரட்சியை தொடர்ந்து ஈராக் திரும்பினார்.

1966- பாத் கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆனார்.

1967- ஜெயிலில் இருந்து தப்பி ஓட்டம்.

1968- உள்நாட்டு பாதுகாப்புத்துறை தலைமை பொறுப்பு ஏற்றார். சட்டத்துறை பட்டம் கிடைத்தது.

1979 ஜுன்- ஈராக் அதிபர் பொறுப்பை ஏற்றார்.

1980 செப்டம்பர் 22- ஈரானுடன் போர் தொடங்கியது.

1988- அமெரிக்க கடற்படையின் உதவியுடன் ஈரான் பிடித்த பகுதிகளை மீட்டார்.

1990 ஆகஸ்டு 2- குவைத்துக்கு எதிராக போர் தொடுத்து குவைத்தை கைப்பற்றினார்.

2003 ஏப்ரல்- அமெரிக்கா தாக்குதல் நடத்தியதில் சதாம் ஆட்சி அகற்றப்பட்டது.
ஜுன் 22- சதாமின் 2 மகன்களும் (உதய்-குவாசாய்) குண்டு வீச்சில் கொல்லப்பட்டனர்.

டிசம்பர்-11 பாதாள சுரங்கத்தில் பதுங்கி இருந்தபோது அமெரிக்க படையினரால் கைது செய்யப்பட்டார்.

2004 ஜுலை 1- அவர் மீதான வழக்கில் முதல் தடவையாக பாக்தாத் கோர்ட்டில் ஆஜரானார்.

செய்தி: மாலைமலர்