Saturday, December 30, 2006

குழந்தைகள் பிணக்குவியல்

டெல்லி: 30 குழந்தைகளை கொன்ற கொடூரன்

டிசம்பர் 30, 2006

டெல்லி: டெல்லி அருகே மர்ம பங்களாவுக்குள் 30 சிறுமிகளின் எலும்புக் கூடுகள் குவியல் குவியலாக தோண்டி எடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி புறநகர்ப் பகுதியான நோய்டா அருகே உள்ள நிதாரி என்ற கிராமத்தில் மொஹீந்தர் சிங் என்பவருக்குச் சொந்தமான ஆடம்பர பங்களா உள்ளது. இவர் கிரேன் டீலராக இருக்கிறார். இவரது வீட்டில் சதீஷ் என்ற சுரேந்திரா என்பவர் வேலைக்காரராக இருந்து வந்தார். சதீஷ் உத்தராஞ்சல் மாநிலம் அல்மோரா நகரைச் சேர்ந்தவர்.

நோய்டா 19வது செக்டார் பகுதியில் வசித்து வந்த பாயல் என்ற 20 வயதுப் பெண்ணை கடந்த மே மாதம் முதல் காணவில்லை. இதுகுறித்து கௌதம் புத்தா நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். பாயல் வைத்திருந்த செல்போனை தற்போது யார் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் சுரேந்திரா வேலை பார்த்து வந்த வீட்டின் சாக்கடைக் கால்வாயிலிருந்து பெரும் துர்நாற்றம் நேற்று வீசியுள்ளது. இதையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.

போலீஸார் விரைந்து வந்து சாக்கடையை தோண்ட உத்தரவிட்டனர். அப்படித் தோண்டியபோது எலும்புக் கூடுகள் சில சிக்கின. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீஸார் சுரேந்திராவை தீவிரமாக விசாரித்தனர்.

அந்த விசாரணையில் நெஞ்சை உறைய வைக்கும் தகவல்களை வெளியிட்டான் சுரேந்திரா. 30 வயதாகும் சுரேந்திரா, அந்தப் பகுதியைச் சேர்ந்த சிறுமிகளை சாக்லேட் கொடுத்தும், விளையாட்டுப் பொருட்களை கொடுத்தும் வரவழைப்பானாம்.

மொஹீந்தர் சிங்கின் வீட்டுக்குள் அழைத்துச் சென்று அவர்களை பாலியல் பலாத்காரம் செய்து கொன்று விடுவானாம். பிறகு அவர்ளின் உடல்களை சாக்குப் பையில் வைத்துக் கட்டி வீட்டுக்குள் புதைத்து விடுவானாம்.

சமீபத்தில் அவன் பாலியல் பலாத்காரம் செய்த 6 சிறுமிகளின் உடல்களை சாக்குப் பையில் கட்டி சாக்கடைக்குள் போட்டு விட்டான். அந்த உடல்களிலிருந்து வந்த துர்நாற்றம்தான் இப்போது சுரேந்திராவைக் காட்டிக் கொடுத்து விட்டது.

காணாமல் போன பாயலையும் இவன்தான் கடத்தி வந்து கற்பழித்துக் கொலை செய்துள்ளான். பாயலின் செல்போனையும் இவனே பயன்படுத்தி வந்துள்ளான்.

சுரேந்திரா கொடுத்த வாக்குமூலத்தைத் தொடர்ந்து போலீஸார் மொஹீந்தர் சிங்கின் வீடு முழுவதும் தோண்டி சோதனை போட்டனர். அப்போது குவியல் குவியலாக எலும்புக் கூடுகள் வரவே போலீஸாருக்கு அதிர்ச்சி அதிகரித்தது. வீட்டு வளாகம் முழுவதும் பிணக் குவியல்களாக உள்ளன.

இதுவரை 30 பேரின் எலும்புக் கூடுகள் சிக்கியுள்ளதாக தெரிகிறது. அனைவருமே 18 வயதுக்குட்பட்டவர்கள் என்பதுதான் கொடூரம். அத்தனை பேரும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இறந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

இந்த பயங்கர சம்பவத்தைத் தொடர்ந்து சுரேந்திரா மற்றும் மொஹீந்தர் சிங் ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர். கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட கத்தி உள்ளிட்ட சில ஆயுதங்களையும் வீட்டிலிருந்து போலீஸார் மீட்டுள்ளனர்.

சில உடல்கள் முற்றிலும் உருக்குலையாமல் பாதி அழுகிய நிலையில் கிடைத்துள்ளன. இதுவரை கிடைத்துள்ள எலும்புக் கூடுகள், அழுகிய உடல்களை வைத்துப் பார்க்கும்போது 30 பேரின் உடல்களாக அவை இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் மரபணு சோதனைக்குப் பிறகே எத்தனை பேரின் உடல்கள் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும் என நோய்டா எஸ்.பி. ரத்தோர் கூறியுள்ளார்.

நிதாரி கிராமத்திலிருந்து கடந்த 2 ஆண்டுகளில் 21 சிறுவர், சிறுமியர் காணாமல் போயுள்ளனர். இவர்களில் சிறுமிகள்தான் அதிகம். ஆனால் போலீஸார் பதிவு செய்யாமல் விட்ட புகார்களையும் சேர்த்து 31 பேர் காணாமல் போயுள்ளதாக கிராமத்தினர் கூறுகின்றனர்.

இவர்கள் அனைவரையும் சுரேந்திராதான் பாலியல் பலாத்காரம் செய்து கொன்றிருக்க வேண்டும் என கருதப்படுகிறது. எலும்புக் கூடு குவியல் கண்டுபிடிக்கப்பட்ட தகவல் பரவியதும் நிதாரி கிராமத்தினர் கூட்டம் கூட்டமாக மொஹீந்தர் சிங் வீட்டு முன்பு கூடி கலாட்டாவில் இறங்கினர்.

வீட்டின் மீது கல்வீசியும், கட்டைகளால் அடித்தும் தாக்குதல் நடத்தினர். வீட்டு வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு கார் தாக்குதலில் சேதமடைந்தது.

எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்திலிருந்து சிறுவர், சிறுமியர் அணியும் செருப்புகள் அதிக அளவில் கிடைத்தன. அதேபோல சீருடைகள், டிபன் பாக்ஸ், பள்ளிக்கூட பைகள் உள்ளிட்டவையும் குவியல் குவியலாக கிடைத்துள்ளன.

நோய்டாவில் சிறார்களின் எலும்புக் கூடுகள் குவியல் குவியலாக சிக்கியுள்ளது டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தி : தட்ஸ்தமிழ்

Friday, December 29, 2006

மதிமுகவிலிருந்து வைகோ நீக்கம்

வைகோவை நீக்கியது போட்டி பொதுக் குழு:
செஞ்சி ராமச்சந்திரன் புதிய பொ.செ!


டிசம்பர் 29, 2006

சேலம்: மதிமுக பொதுச் செயலாளர் பதவியிலிருந்து வைகோவை நீக்கி சேலத்தில் நடந்து வரும் போட்டி மதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. புதிய பொதுச் செயலாளராக செஞ்சி ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

சேலத்தில் எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோர் கூட்டிய மதிமுக போட்டி பொதுக்குழு இன்று காலை கூடியது. சுமங்கலி கல்யாண மண்டபத்தில் இன்று காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்குவதாக இருந்தது. ஆனால், ஆட்கள் வர தாமதமானதால் 12.30 மணிக்குத் தான் தொடங்கியது. இதுவரை எல்.ஜியும் செஞ்சியும் காத்திருந்தனர்.

இக் கூட்டத்திற்கு விழுப்புரம், சென்னை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே அதிகம் வந்திருந்தனர். அவர்களில் எத்தனை பேர் பொதுக்குழு உறுப்பினர்கள் என்பது தெரியவில்லை. திரளாக வந்தவர்களை போலீஸார் சோதனை நடத்திய பின்னர் உள்ளே அனுமதித்தனர்.

இக்கூட்டத்தில் வைகோவை பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்தத் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்படுவதாக எல்.கணேசன் அறிவித்தார்.

மேலும், புதிய பொதுச் செயலாளராக செஞ்சி ராமச்சந்திரனை நியமித்தும் ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இனிமேல் எக்காரணம் கொண்டும் அதிமுகவுடன் கூட்டணி வைப்பதில்லை என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பொதுக்குழுக் கூட்டத்தையொட்டி கல்யாண மண்டபம் உள்ள பகுதியில் அசம்பாவிதம் ஏதும் நடப்பதைத் தடுக்க சீருடையிலும், மாறு வேடத்திலும் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டள்ளனர்.

கூட்டத்துக்கு எல்.கணேசன் தலைமை தாங்குகிறார். செஞ்சி ராமச்சந்திரன் முன்னிலை வகிக்கிறார்.

கூட்டம் நடக்கும் கல்யாண மண்டபப் பகுதியிலும் ஐந்து ரோடு, நாலு ரோடு உள்ளிட்ட பல இடங்களிலும் மதிமுக கொடிகள், கட் அவுட்கள்,தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன.

பொதுக் குழுக் கூட்டத்தைத் தொடர்ந்து இன்று மாலை அம்மாப்பேட்டை காந்தி மைதானத்தில் பொதுக் கூட்டமும் நடைபெறுகிறது.

இதற்கிடையே, சேலம் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் பலத்த பாதுகாப்புடன் சேலத்தை விட்டு வெளியேறி (வெளியேற்றப்பட்டு?) விட்டனர். இதனால் அவர்களில் ஒருவர் கூட எல்.ஜி கூட்டியுள்ள கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டார்கள் என கூறப்படுகிறது.

முன்னதாக சேலம் வந்த எல்.கணேசனும், செஞ்சி ராமச்சந்திரனும் செய்தியாளர்களிடம் பேசுகையில், பொதுக்குழுக் கூட்டத்தில், 500 முதல் 600, 700 உறுப்பினர்கள் வரை கலந்து கொள்வார்கள். பொதுக்குழுக் கூட்டத்தில், 13 ஆண்டு கால மதிமுக தேர்தல் கூட்டணி, அரசியல் பணிகள், திராவிடர் கொள்கையிலிருந்து வைகோ வழி தவறியது குறித்துப் பேசவுள்ளோம் என்றனர்.

கூட்டத்தில் வைகோவை கட்சியிலிருந்து நீக்குவது தொடர்பான தீர்மானமும் கொண்டு வரப்படும் எனத் தெரிகிறது.

எல்ஜி நடத்தும் கூட்டத்தில் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் வழக்குப் போடுவோம், சிறையில் தள்ளுவோம் என காவல்துறை மூலம் மதிமுக பொதுக் குழு உறுப்பினர்களை திமுக மிரட்டி வருவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து சேலம் மாவட்ட மதிமுக செயலாளர் தாமரைக்கண்ணன் கூறுகையில், சேலம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 8 பொதுக்குழு உறுப்பினர்களும் வைகோ பக்கமே உள்ளனர். இதில் ஒருவர் கூட போட்டி எல்.ஜி. கூட்டிய பொதுக்குழுவில் கலந்து கொள்ளவில்லை. ஆனால், அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் தனது ஆட்களை மதிமுகவினர் என்று கூறி போட்டி பொதுக் குழுவிற்கு ஆட்களை அனுப்பியுள்ளார். இது பொதுகுழுக் கூட்டமும் அல்ல, அதில் எடுக்கும் எந்த முடிவும் வைகோவை கட்டுப்படுத்தப் போவதும் இல்லை என்றார்.

செய்தி: தட்ஸ்தமிழ்

Friday, December 22, 2006

மேத்தாவுக்கு சாகித்ய அகாடமி

கவிஞர் மு.மேத்தாவுக்கு சாகித்ய அகாடமி விருது: பிப்ரவரி 20-ந் தேதி வழங்கப்படுகிறது

புதுடெல்லி, டிச.22-

சிறந்த இலக்கிய படைப்புகளை வழங்கியவர்களுக்கு, உயரிய இலக்கிய விருதான சாகித்ய அகாடமி விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுக்கு உரியவர்களை தேர்ந்தெடுக்க, 23 இந்திய மொழிகளை சேர்ந்த வல்லுனர்கள் அடங்கிய தேர்வுக்குழு அமைக்கப்பட்டது.

தமிழ் மொழி சார்பில் ஈ.சுந்தரமூர்த்தி, ஆர்.எம்.பெரிய கருப்பன் (தமிழண்ணன்), புவியரசு ஆகியோர் இக்குழுவில் இடம் பெற்றனர். இக்குழு, பல்வேறு இலக்கிய படைப்புகளை ஆய்வு செய்து விருதுக்கு உரியவர்களை சிபாரிசு செய்தது.

7 கவிதைகள், 4 நாவல்கள், 4 சிறுகதை தொகுப்புகள், 3 நாடகங்கள், 3 கட்டுரைகள், ஒரு பயணக்கட்டுரை, ஒரு சுயசரிதை ஆகியவை விருதுக்கு சிபாரிசு செய்யப்பட்டன. இந்த தேர்வுக்கு சாகித்ய அகாடமி போர்டு ஒப்புதல் அளித்தது. இதையடுத்து நேற்று விருதுக்கு உரியவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டனர்.

தமிழுக்கான சாகித்ய அகாடமி விருதுக்கு பிரபல கவிஞர் மு.மேத்தா தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். `ஆகாயத்துக்கு அடுத்த வீடு' என்ற கவிதை நூலுக்காக இவருக்கு விருது வழங்கப்படுகிறது. மு.மேத்தா ஏராளமான கவிதைகள் மற்றும் நாவல்களை எழுதி உள்ளார். நிறைய சினிமா பாடல்களையும் எழுதி உள்ளார்.

இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மற்ற இலக்கியவாதிகள் வருமாறு:-

கவிஞர்கள் தர்ஷன் தர்ஷி (டோக்ரி மொழி), ஞானேந்திரபதி (இந்தி), ஷபி ஷாக் (காஷ்மீரி), பன்ஷிதர் சாரங்கி (ஒரியா), ஹர்ஷ்தேவ் மாதவ் (சமஸ்கிருதம்),

நாவலாசிரியர் அமர் மித்ரா (வங்காளம்), ஆஷா போகே (மராத்தி), நாடக ஆசிரியர்கள் அஜ்மீர் சிங் அலக் (பஞ்சாபி), கிரத் பப்தி (சிந்தி),

சிறுகதை ஆசிரியர்கள் அதல்நந்தா கோஸ்வாமி (அசாமி), விபுதி ஆனந்த் (மைதிலி), எம்.சுகுமாரன் (மலையாளம்), பயண கட்டுரைக்காக சரத்சந்த் தியாம், சுயசரிதைக்காக ஸ்ரீராம் சந்திர மர்மு.

ஆங்கில படைப்புக்கான சாகித்ய அகாடமி விருது, பின்னர் அறிவிக்கப்படும்.

சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்கும் பிப்ரவரி 20-ந் தேதி நடைபெறும் விழாவில் விருது வழங்கப்படும். இவ்விருது தாமிர பட்டயமும், ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையும் அடங்கியது ஆகும்.

செய்தி: மாலைமலர்

Sunday, December 17, 2006

பதக்கம் பறிப்பு?


பாலின பிரச்னையில் சாந்தி!* ஆசிய விளையாட்டு பதக்கம் பறிப்பு?

புதுடில்லி: சர்வதேச விளையாட்டு அரங்கில் இந்தியாவுக்கு இன்னொரு அதிர்ச்சி. ஆசிய விளையாட்டில் வெள்ளி வென்ற தமிழக வீராங்கனை சாந்தி பாலினம் தொடர்பான பிரச்னையில் சிக்கிக் கொண்டுள்ளார். இவரிடம் பாலின ரீதியாக பெண்ணுக்கான குணாதிசயங்கள் இல்லை என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. இதனால் இவர் வென்ற வெள்ளிப் பதக்கம் பறிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் கத்தார் தலைநகர் தோகாவில் 15வது ஆசிய விளையாட்டு போட்டி நடந்தது. இதில் பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டத்தில் மின்னல் வேகத்தில் ஓடிய இந்தியாவின் சாந்தி 2 நிமிடம் 3.16 வினாடிகளில் கடந்து வெள்ளி வன்றார். பதக்கம் வென்ற பிறகு இவர் பெண் தானா...? என்ற சந்தேகத்தை ஒரு வீராங்கனை கிளப்பியுள்ளார். இதையடுத்து பாலின வேறுபாட்டை கண்டறியும் சோதனை நடத்தப் பட்டுள்ளது. ஊக்க மருந்து சோதனை போல் அல்லாமல் யாராவது எதிர்ப்பு தெரிவித்தால் மட்டுமே பாலினத்தை கண்டறியும் சோதனை நடத்தப்படும். இதில் பெண்களுக்கான குணயியல்புகள் இல்லை என்ற விபரம் தெரிய வந்துள்ளது. இதையடுத்து சாந்தி வென்ற வெள்ளி பதக்கம் பறிக்கப்பட வாய்ப்பு உள்ளது. ரூ.15 லட்சம்: மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்தவர் சாந்தி. இலங்கையை பூர்வீகமாக கொண்ட இவரது பெற்றோர்கள் செங்கல் சூளையில் வேலை பார்க்கிறார்கள். இப் படி வறுமையை வென்று சாதித்ததால் பாராட்டு மழையில் நனைந்தார் சாந்தி. ஆசிய விளையாட்டில் வெள்ளி வென்றதும் தமிழக அரசு கூட ரூ. 15 லட்சத்தை பரிசுத் தொகையாக அளித்தது. இந்திய தடகளத்துக்கு இன்னொரு நட்சத்திரம் கிடைத்து விட்டார் என்ற மகிழ்ச்சியில் இருந்தவர்களுக்கு சாந்தி சோதனையில் சிக்கியது பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

ஊக்க மருந்து: இம்முறை ஆசிய விளையாட்டு போட்டியின் துவக்கத்தில் வட்டு எறிதல் வீராங்கனை சீமாஅன்டில் ஊக்க மருந்து சோதனையில் சிக்கினார். பின்னர் இந்திய விளையாட்டு ஆணையம் விசாரணை நடத்தியதில் இவர் ஊக்க மருந்து உட்கொள்ளவில்லை என தெரிவித்தது. இதையடுத்து பெரும் சிக்கலில் இருந்து தப்பினார். ஆனாலும் மனதளவில் பாதிக்கப்பட்டதாக கூறி போட்டியில் இருந்து விலகுவதாக சீமா அறிவித்தார். இந்த பிரச்னை ஓய்வதற்குள் சாந்தி சர்ச்சை மிகப் பெரும் புயலை இந்திய விளையாட்டு அரங்கில் கிளப்பியுள்ளது. சர்வதேச போட்டிகளுக்கு வீராங்கனைகளை அனுப்பும் போது இனி அனைத்து வகையான சோதனைகளையும் செய்ய வேண்டும். அப்போது தான் பிரச்னைகளுக்கு விமோசனம் பிறக்கும்.

சாந்தி சர்ச்சையின் பின்னணி!: ஆசிய விளையாட்டில் வெள்ளி வென்ற தமிழக வீராங்கனை சாந்தியின் நிலைமை பரிதாபமாக இருக்கிறது. புகழின் உச்சியில் இருந்த இவர், பாலின சோதனையில் சிக்கிக் கொள்ள பதக்கம் பறிக்கப்படும் நிலைக்கு தள்ளப் பட்டுள்ளார். சமீபத்தில் கத்தார் தலைநகர் தோகாவில் 15வது ஆசிய விளையாட்டு போட்டி நடந்தது. இதில் பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டத்தில் தமிழகத்தின் சாந்தி வெள்ளி வென்றார். அப்போது இவர் பெண் தானா என்ற சந்தேகம் மற்ற வீராங்கனைகள் உள்ளிட்ட போட்டி அதிகாரிகளின் மனதில் எழுந்துள்ளது. இதையடுத்து பாலின வேறுபாட்டை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. இதில் பெண்களுக்கான குணவியல்புகள் இல்லை என்ற விபரம் தெரிய வந்துள்ளது. இந்த விபரம் ஏற்கனவே இந்திய விளையாட்டு அதிகாரிகளுக்கும் தெரியும் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து முன்னாள் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினர் அஷ்வின் குமார் கூறுகையில்,""எங்களது காலத்தில் இது போன்ற சோதனைகள் எல்லாம் இல்லை. தற்போது பரிசுத் தொகை அதிகம் என்பதால் தடகள வீரர், வீராங்கனைகள் குறுக்கு வழியில் பதக்கம் வெல்ல முயல்கின்றனர். இதற்காக சிலர் ஊக்க சக்தியை அதிகப்படுத்த பல்வேறு மருந்து பொருட்களை பயன்படுத்துகின்றனர். இது ஹார்மோனில் மாற்றத்தை ஏற்படுத்தி விடுகிறது. தற்போது பாலினத்தை வேறுபடுத்தி காட்டும் சோதனைகள் மிகப் பெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது,'' என்றார். எந்த அடிப்படை: பாலினம் தொடர்பான சோதனையில் பிறப்பில் பிரச்னை, குரோமோசோம் மாற்றம், ஹார்மோன்களில் குழப்பம் போன்ற வகைகளில் ஆய்வு செய்யப்படும். இதில் சந்தேகத்தின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட வீராங்கனை சில நேரங்களில் தப்பலாம்.

சாந்தி மீது எந்த விதமான சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது என்ற விபரம் தெளிவாக தெரியவில்லை. திருச்சியில் இருந்து: சாந்தியின் கிராமம் திருச்சியிலிருந்து 70 கி.மீ., தொலைவில் உள்ளது. வறுமையை கடந்து சாதித்த இவர், புதுக்கோட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் வணிக நிர்வாகத்தில் பட்டப் படிப்பை முடித்தார். தொடர்ந்து சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் எம்.சி.ஏ., முதுகலைப் படிப்பைத் தொடர்ந்தார். கல்லூரியில் படித்த காலத்திலும் தடகளம், ஹாக்கி, ஈட்டி எறிதல் முதலான விளையாட்டுகளில் ஜொலித்தார். 200506ல் நடந்த தமிழக அளவிலான தடகளப் போட்டியில் தங்கம் வென்றார். ஆசிய விளையாட்டில் வெள்ளி வென்று நம்பிக்கை அளித்த இவர், இப்போது மிகப் பெரும் சோதனையில் சிக்கியுள்ளார். இதில் இருந்து மீள்வாரா சாந்தி...?

பயிற்சியாளர் நழுவல் :

சாந்தியின் பயிற்சியாளர் நாகராஜ் பிரச்னையில் இருந்து நழுவ பார்த்தார். பிரபல "டிவி'க்கு பேட்டி அளித்த இவர்,""கடந்த இரண்டு வருடங்களாக தான் சாந்தியின் பயிற்சியாளராக இருக்கிறேன். இவர் பல்வேறு சர்வதேச போட்டிகளில் பங்கேற்று பல பதக்கங்கள் வென்றுள்ளார். அப்போது எல்லாம் இது போன்ற பிரச்னை எழவில்லை. பாலின சோதனையில் மாட்டிக் கொண்ட விபரம் எதுவும் தெரியாது,''என்றார்.

செய்தி: தினமலர்

Friday, December 15, 2006

பாலசிங்கம் மரணம்

புலிகளின் அரசியல் ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கம் மரணம்

லண்டன்: விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரும், பிரபாகரனின் நம்பிக்கைக்கு உரியவருமான ஆண்டன் பாலசிங்கம்(68) லண்டனில் நேற்று மரணமடைந்தார்.

சர்வதேச அளவில் விடுதலைப் புலிகளின் அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் யுத்திகளை வகுப்பதிலும், முக்கிய முடிவுகள் மேற்கொள்வதிலும் பிரதான பங்களிப்பு அளித்து வந்தவர் ஆண்டன் பாலசிங்கம். இவர் விடுதலைப் புலிகளின் சட்டத் தூணாக கருதப்பட்டவர். ராஜிவ் காந்தி கொலை சம்பவத்துக்கு பின்னர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் முதல்முறையாக நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது உடனிருந்த பாலசிங்கம் சர்வதேச நிருபர்களிடம் அனைத்து கேள்விகளுக்கும் சளைக்காமல் பதில் அளித்து சமாளித்தார்.

கடந்த 1985ம் ஆண்டு திம்புவில் நடந்த பேச்சுவார்த்தையில் துவங்கி, 30 ஆண்டுகளுக்கும் மேலாக விடுதலைப் புலிகளுடன் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்த பாலசிங்கம், சில ஆண்டுகளாக உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு லண்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பாலசிங்கத்துக்கு 35 ஆண்டுகளாக நீரிழிவு நோய் உள்ளது. கடந்த 90ம் ஆண்டுகளின் பிற்பகுதியில் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டார். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையும் செய்து கொண்டார். சமீப காலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டார்.

கடந்த நவம்பர் மாதம் உடல் நிலை கடுமையாக மோசமடைந்தது. இவரின் பித்த நாளத்தில் புற்றுநோய் அதிகரித்து கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், நுரையீரல், கல்லீரல், அடிவயிறு மற்றும் எலும்புகளில் புற்றுநோய் வேகமாக பரவியதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து அவருக்கு லண்டன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், நேற்றிரவு ஆண்டன் பாலசிங்கம் லண்டனில் மரணமடைந்தார். லண்டனில் உள்ள அவரின் வீட்டில் பாலசிங்கம் மரணமடைந்ததாக அவரது நெருங்கிய உறவினர் தெரிவித்தார். பாலசிங்கத்தின் இறுதிச் சடங்கு லண்டனிலேயே நடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலசிங்கத்தின் மனைவி ஆடெல். ஆஸ்திரேலியாவில் பிறந்தவர். இருவரும் புலிகளின் விடுதலை இயக்கம் தொடர்பாக பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளனர்.

உடல் நிலை மோசம் அடைந்ததால் கடந்த அக்டோபர் மாதம் ஜெனிவாவில் நடந்த புலிகள் இலங்கை அரசுக்கு இடையேயான பேச்சுவார்த்தையில் அவர் பங்கேற்கவில்லை.

ஆரம்ப காலத்தில் இலங்கையில் தமிழ் பத்திரிகையில் பணியாற்றினார். பின்னர் பிரிட்டிஷ் துõதரகத்தில் மொழி பெயர்ப்பாளராக இருந்தார். இலங்கையை விட்டு வெளியேறிய பின்னர் லண்டனில் வசித்து வந்தார். பல ஆண்டுகளாக இலங்கைக்கு வராமல் இருந்த பாலசிங்கம் 2002ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தான் இலங்கை வந்தார். அப்போது தான் இலங்கையில் புலிகளுக்கும், அரசுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. இருப்பினும், தொடர்ந்து இலங்கையில் தங்கியிருக்கவில்லை. மீண்டும் லண்டன் திரும்பினார். பின்னர் ஜப்பான், தாய்லாந்து, நார்வே, ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற புலிகள் மற்றும் இலங்கை அரசுக்கு இடையேயான பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டார்.

கடந்த 1985ம் ஆண்டு திம்புவில் நடந்த பேச்சுவார்த்தை முதல் கடந்த பிப்ரவரி மாதம் ஜெனிவாவில் நடந்த பேச்சுவார்த்தை வரை புலிகள் தரப்பின் குழுவிற்கு பாலசிங்கமே தலைமை வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி: தினமலர்

Wednesday, December 13, 2006

பாராளுமன்ற தாக்குதல் நினைவு!

அப்சல் தூக்கு தண்டனையை தாமதப்படுத்துவதா? பாராளுமன்ற தாக்குதலில் உயிர் இழந்த குடும்பத்தினர் ஜனாதிபதியிடம் பதக்கத்தை திருப்பி கொடுத்தனர்

புதுடெல்லி, டிச. 13-

டெல்லி பாராளுமன்றத்துக் குள் கடந்த 2001-ம் ஆண்டு டிசம்பர் 13-ந் தேதி தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினார்கள். அப்போது நடந்த துப்பாக்கி சண்டையில் ஒரு பெண் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 9 பாதுகாப்பு படையினர் பலியானார்கள். பாராளுமன்றத்துக்குள் நுழைந்த தீவிரவாதிகளும் சுட்டு வீழ்த்தப்பட்டனர். இந்த சம்பவத்தில் புகைப்பட கலைஞர் ஒருவரும் பலியானார்கள்.

இந்த தாக்குதல் தொடர்பாக காஷ்மீர் தீவிரவாதி முகமது அப்சலுக்கு டெல்லி கோர்ட்டு தூக்கு தண்டனை விதித்தது. தூக்கில் போடுவதற்கு கோர்ட்டு நாள்குறித்த நிலை யில் அப்சல் மற்றும் அவனது குடும்பத்தினர் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பியதால் தண்டனை நிறைவேற்றப்பட வில்லை. கருணை மனு மீது இன்னும் மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு எடுக்காமல் உள்ளது.

பாராளுமன்ற தாக்குதல் சம்பவம் நடந்து இன்றுடன் 5 ஆண்டுகள் ஆகிறது. அப் சலுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்துவதற்கு பாராளுமன்ற தாக்குதலில் பலியானவர்களின் மனைவி மார்கள் மற்றும் குடும்பத்தினர் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

இன்று அவர்கள் டெல்லி யில் ஜனாதிபதி மாளிகை நோக்கி பேரணி சென்றனர். உயிர்நீத்த போலீஸ்காரர்களின் குடும்பத்தினருக்கு வழங்கிய "அமர்ஜோதி ஜவான்'' விருதையும், பதக்கத்தையும் ஜனாதிபதி மாளிகையில் திரும்ப ஒப்படைத்தனர்.

தீவிரவாதிகளை எதிர்த்து போராடி உயிர்நீத்த டெல்லி போலீஸ் உதவி சப்-இன்ஸ் பெக்டர் நானக் சந்த்தின் மனைவி கங்கா தேவி. விதவையான இவர் ஆவேசத்துடன் கூறியதாவது:-

எனது கணவர் இந்த நாட் டுக்காக தீவிரவாதிகளை எதிர்த்து போராடி உயிர் நீத் தார். அவரது தியாகத்தை மத்திய அரசு நினைத்துப் பார்க்க வேண்டும். எனது கணவரின் தியாகத்துக்காக `அமர் ஜவான் ஜோதி' விருதும் மெடலும் வழங்கப்பட்டுள்ளது. மெடல் வழங்கினால் மட்டும் போதாது. உயிர் நீத்தவர்களின் தியாகத்தை மதிக்க வேண்டும். தீவிரவாதி அப்சலை உடனே தூக்கில் போட வேண்டும் என்றார்.

கணவரை இழந்த மேலும் ஒரு பெண் கூறும்போது, என் கணவரது தியாகத்துக்கு மதிப்பு அளிக்க வேண்டும், அப்சலின் தூக்கு தண்ட னையை நிறைவேற்றுவது தொடர்பாக முடிவு எடுப்பதில் மத்திய அரசு காலம் தாழ்த்தக் கூடாது. சம்பவம் நடந்து 5 ஆண்டுகள் ஆகி விட்டன. இதில் முடிவு எடுக்க தாமதிப்பதால் எங்களுக்கு வழங்கப்பட்ட மெடல்களை அரசிடம் திரும்ப ஒப்படைக்கிறோம் என்றார்.

பலியான போலீஸ்காரர்களின் குடும்பத்தினருக்கு ஆதரவாக தீவிரவாத தடுப்பு முன்னணி தலைவரான மனீந்தர் சிங் பிட்டா, முன்னாள் உளவுத்துறை இயக்குனர் அஜீத் கே.டோவல் மற்றும் பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

பிட்டா கூறுகையில், அப்ச லுக்கு ஆதரவாக பல்வேறு அமைப்புகள் குரல் கொடுக்கின்றன. அவர்கள் அப்சலை தூக்கு தண்டனையில் இருந்து காப்பாற்ற முயற்சி செய்கிறார்கள். அதற்கு ஒரு போதும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்றார்.

அப்சலை தூக்கில் போடுவது தொடர்பாக மத்திய அரசு முடிவு எடுப்பதில் தேவையில்லாமல் காலம் கடத்து வதாக பலியான போலீஸ்காரர்களின் குடும்பத்தினர் பலர் குறை கூறினார்கள்.

இதற்கிடையே அப்சல் தூக்கு தண்டனை விவாகரம் குறித்து டெல்லி மேல்- சபையில் பாரதீய ஜனதா உறுப்பினர்கள் பிரச்சினையை எழுப்பினார்கள். இதனால் சபையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து பிற்பகல் வரை சபை ஒத்திவைக்கப்பட்டது.

முன்னதாக டெல்லி மேல்-சபையிலும், பாராளுமன்றத்திலும் பாராளுமன்ற தாக்குதல் நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது.

செய்தி: மாலைமலர்

என்கவுண்டரில் 'பங்க்'குமார்.

பிரபல ரவுடி "பங்க்' குமார் "என்கவுன்டரில்' சுட்டுக்கொலை

சென்னை: கொலை, ஆளை கடத்தி பணம் பறிப்பு, கொலை முயற்சி, கட்டப் பஞ்சாயத்து உட்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி "பங்க்' குமார் நேற்றிரவு சென்னையில் என்கவுண்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டான். இவன் மீது நாற்பது வழக்குகள் உள்ளன. சென்னை சைதாப்பேட்டை கொத்தவால்சாவடி தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் குமார் என்ற "பங்க்' குமார் என்ற கொத்தவால் சாவடி குமார்(36). சென்னை நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ., பட்டதாரியான பங்க் குமார், கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போதே நண்பர்களுடன் சேர்ந்து ரவுடி கும்பலை உருவாக்கினான்.

கட்டப் பஞ்சாயத்து உட்பட பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்தான். கடந்த 1992ம் ஆண்டில் பரமசிவம் என்பவரை மாம்பலம் பகுதியில் கொலை செய்தான். இவ்வழக்கில் அவன் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டான். இதையடுத்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டான். பிரபல ரவுடியாக வளர்ந்து வந்த "பங்க்'குமார் தென் சென்னை பகுதியில் சைதாப்பேட்டை, தாம்பரம், குமரன் நகர், வேளச்சேரி உட்பட்ட பகுதியில் தனது ஆதிக்கத்தை வளர்த்தான். கடந்த 1993ம் ஆண்டில் சைதாப்பேட்டை கோர்ட்டுக்கு வெளியே இரண்டு கைதிகளை வெட்டிக் கொலை செய்தான். இந்த இரட்டை கொலை தான் "பங்க்' குமாருக்கு தென் சென்னை தாதா என்ற பெயரை பெற்று தந்தது. கடந்த பத்து ஆண்டுகளாக ரவுடி ஆதிக்கத்தை தென் சென்னை பகுதியில் நடத்தி வந்தான். அ.தி.மு.க., ஆட்சியில் "பங்க்' குமாரை என்கவுன்டரில் தீர்த்துக் கட்ட போலீசார் நேரம் பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால், அப்போது மத்திய அமைச்சரின் காரிலேயே சுற்றித் திரிந்து கொண்டிருந்ததால், தப்பித்துக் கொண்டான். தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் "பங்க்' குமாரின் செயல்கள் மீண்டும் தலையெடுத்தன. மயிலாப்பூரில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள "ஷாப்பிங்' கட்டடத்தை அடிமாட்டு விலைக்கு ஏலத்தில் வாங்கிய நபருக்கு ஆதரவாக களம் இறங்கினான். இந்த ஏலத்தில் வேறு யாரும் கலந்து கொள்ளாதபடி "பங்க்' குமார் இருபது கார்களில் 60 அடியாட்களுடன் வந்து மயிலாப்பூரை கலக்கினான். இதுவே தி.மு.க., ஆட்சிக்கு பெரும் கெட்ட பெயரை தேடிக் கொடுத்தது. போலீஸ் அதிகாரிகளுக்கும் அவன் பயப்படாமல் தனது வேலைகளை நடத்திக் கொண்டிருந்தான். ரியல் எஸ்டேட் அதிபர்களை மிரட்டி பணம் வசூல் செய்து வந்தான். கடந்த 9ம் தேதி மேற்கு மாம்பலத்தில் ரியல் எஸ்÷ட் தொழில் செய்து வரும் பஷீர் என்பவரை மிரட்டி 10 லட்சம் ரூபாய் பணம் கேட்டான். இது தொடர்பாக அவர் கமிஷன் லத்திகா சரண், கூடுதல் கமிஷனர் ஜாங்கிட் ஆகியோரிடம் புகார் கொடுத்தார். புகாரை வாங்கிய மத்திய குற்றப்பிரிவு போலீசார் "பங்க்' குமார் மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்தனர். அவனது நடவடிக்கைகளை போலீசார் கண்காணித்து வந்தனர். திருநீர்மலைக்கு உட்பட்ட சீனிவாசன் நகர் பைபாஸ் சாலையில் நேற்று மாலை 7 மணிக்கு "பங்க்' குமார் மற்றும் அவனது கூட்டாளிகள் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் தில்லை நடராஜன், சப்இன்ஸ்பெக்டர்கள் பூமாறன், ரவிக்குமார் ஆகியோர் தலைமையில் சென்ற போலீஸ் படையினர் "பங்க்' குமாரை மடக்கி பிடிக்க முற்பட்டனர். அப்போது தப்பி ஓடிய "பங்க்' குமார் நான்கு வெடிகுண்டுகளை போலீசார் மீது வீசினான். அதில் இரண்டு குண்டுகள் வெடித்தது. மற்ற இரண்டு குண்டுகளையும் அதே இடத்தில் போட்டு விட்டு டாடா சுமோ காரில் "பங்க்' குமார் தப்பினான். பின் தொடர்ந்த போலீஸ் படையினர் மீது தாக்குதல் நடத்தினான். அப்போது இன்ஸ்பெக்டர் நடராஜன் தனது துப்பாக்கியால் "பங்க்' குமார் மீது சுட்டார். மயங்கி விழுந்த "பங்க்' குமாரை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். அங்கு "பங்க்' குமாரை பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து செங்கல்பட்டு ஆர்.டி.ஓ.,வுக்கு போலீசார் தகவல் அறிக்கையை அனுப்பியுள்ளனர். காயம் அடைந்த சப்இன்ஸ்பெக்டர்கள் இருவரும் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பா.ம.க.,வில் எம்.எல்.ஏ., "சீட்' கேட்ட "பங்க்' குமார் சென்னையைச் சேர்ந்த பங்க் குமார் ஆள் கடத்தல், கட்டப் பஞ்சாயத்து, கொலை, கொள்ளை போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்தான். வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த பங்க் குமார் பா.ம.க., கட்சியில் சில ஆண்டுகளுக்கு முன்னர் இணைந்தான். பா.ம.க.,வில் உள்ள முக்கிய தலைவர்களுடன் நெருக்கமானான். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் சைதாப்பேட்டை தொகுதி பா.ம.க.,வுக்கு ஒதுக்கப்பட்டது. ரவுடியாக இருந்த பங்க் குமார் அரசியலில் பெரிய ஆளாக வர வேண்டும் விரும்பி "சீட்' கேட்டான். ஆனால், பா.ம.க., தலைமை பங்க் குமாருக்கு "சீட்' கொடுக்கவில்லை. கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் பங்க் குமாரின் ரவுடிக் கும்பலைச் சேர்ந்தவர்கள் தி.நகர், சைதாப்பேட்டை போன்ற பல சட்டசபை தொகுதிகளில் கள்ள ஓட்டுகள் போட்டு பிரச்னை செய்தனர். "பங்க்' குமாரின் கொடூர கொலைகள்... நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் படித்தவன் "பங்க்' குமார். இவனது நண்பன் உமர். கடந்த 1991ம் ஆண்டு சம்பத் மற்றும் புருஷோத்தமன் ஆகியோர் உமரை வெட்டிக் கொலை செய்தனர். உயிர் நண்பனை வெட்டிக் கொன்றதும் ஆத்திரமடைந்தான் "பங்க்' குமார். உமர் சமாதிக்கு சென்றவன் "உன்னை வெட்டிக் கொன்றவர்களை பழிக்குப்பழி வாங்குவேன்' என்று ரத்த சபதம் செய்தான். அந்த சபதத்தை நிறைவேற்ற 1992ம் ஆண்டு உமரை வெட்டிக் கொன்ற கொலை கும்பலில் இடம் பெற்ற பரமசிவம் என்ற ரவுடியை "பங்க்' குமார் கொலை செய்தான். இது தான் அவனது முதல் கொலை. தாம்பரத்தில் மனைவியுடன் இருந்தான் பரமசிவம். அந்த வீட்டிற்குள் ஓட்டை பிரிந்து "பங்க்' குமாரும் அவனது நண்பர்களும் குதித்தனர். வீட்டில் இருந்த மனைவி மற்றும் குழந்தைகள் கண் முன்னே பரமசிவத்தை வெட்டிக் கொலை செய்தான் "பங்க்' குமார். அந்த ரத்தத்தை எடுத்து, பரமசிவன் மனைவி வாயில் ஊற்றினான். உமர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பத்தையும் புருஷோத்தமனையும் சைதாப்பேட்டை கோர்ட்டுக்கு வெளியே 1994ம் ஆண்டு "பங்க்' குமார் வெட்டி சாய்த்தான். போலீஸ் பாதுகாப்போடு வந்த இரண்டு பேரையும் கொலை செய்த வழக்கில், கைது செய்யப்பட்ட "பங்க்' குமாருக்கு எதிராக யாரும் சாட்சி சொல்லாத காரணத்தால், கொலை செய்த வழக்கில், கைது செய்யப்பட்ட "பங்க்' குமாருக்கு எதிராக யாரும் சாட்சி சொல்லாத காரணத்தால், விடுதலை செய்யப்பட்டான். அடுத்து 95ம் ஆண்டு, முருகன் என்ற பரட்டை முருகனை "பங்க்' குமாரும் அவனது நண்பர்களும் தீர்த்துக் கட்டினர். இதன் பின்னர் கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபட்டான். பின்னர் தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிக்கத் தொடங்கினான். அடுத்து தி.மு.க., ஆட்சி வந்ததும் தி.மு.க.,வினரை கடுமையாக எதிர்த்தான். தி.மு.க., ஆட்சியில் கான்ட்ராக்டர் தெய்வசிகாமணி என்பவரை கடத்தி பணம் பறிக்க முற்பட்ட வழக்கிலும் போலீசார் அவனை தேடினர். மீண்டும் 2001ம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் தனது செயல்களை குறைத்துக் கொண்டான். அ.தி.மு.க., ஆட்சியில் "பங்க்' குமாருக்கு இரண்டு முறை போலீசார் குறி வைத்தனர். சைதாப்பேட்டை கோர்ட் அருகே அவனை மடக்கிப்பிடிக்க போலீசார் காத்திருந்த போது, ஜட்டியுடன் ஆற்றில் குதித்து ஓடிவிட்டான். "பங்க்' குமார் ஏழு முறை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறை சென்றவன். அவன் மீது மொத்தம் 40 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

ரவுடிகள் மீதான நடவடிக்கை தொடரும் * கமிஷனர் லத்திகா சரண் பேட்டி பிரபல ரவுடி "பங்க்' குமார் சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து அவனது உடல் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு வரப்பட்டது. நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த மருத்துவமனைக்கு வந்த போலீஸ் கமிஷனர் லத்திகா சரண், கூடுதல் கமிஷனர் ஜாங்கிட் ஆகியோர் கூறுகையில், ""பிரபல ரவுடி பங்க் குமார் மீது 30க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இவன் ஏழு முறை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறை சென்று வந்துள்ளான். மேற்கு மாம்பலத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரான பஷீர் என்பவரிடம் 10 லட்சம் ரூபாய் பணம் கேட்டுள்ளான். பணத்தை கொடுக்க தாமதமாகவே மேலும் ஐந்து லட்சம் ரூபாய் தர வேண்டும் என்று மிரட்டல் விடுத்துள்ளான். இதையடுத்து, பஷீர் போலீசில் புகார் செய்தார். இப்புகாரின் அடிப்படையில் "பங்க்' குமாரை கைது செய்ய மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தில்லை நடராஜன், எஸ்.ஐ., சுகுமாறன், ரவிக்குமார் மற்றும் நான்கு ஏட்டுக்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அனகாபுத்துõர் சீனிவாசபுரம் விரிவு அருகே பங்க் குமாரை கைது செய்ய முயன்ற போது இன்ஸ்பெக்டர் தில்லைநடராஜனை அரிவாளால் அவன் வெட்ட முயன்றான். இதை தொடர்ந்து அவனுடன் இருந்த கூட்டாளி மூன்று பேரும் நாட்டு வெடிகுண்டை வீசி போலீசாரை தாக்கினர். இதில், மூன்று போலீசார் காயமடைந்தனர். இதை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் தில்லைநடராஜன் தற்காப்பிற்காக தனது துப்பாக்கியால் பங்க் குமாரை சுட்டுள்ளார். சென்னையில் மொத்தம் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ரவுடிகள் உள்ளனர். அவர்கள் மீதான நடவடிக்கை தொடரும்,'' என்றார்.

ஜாங்கிட் தனிப்படையின் தளபதி தில்லை நடராஜன் தமிழகத்தில் வடமாநில கொள்ளை கும்பல் அட்டகாசத்தில் ஈடுபட்டது. வடக்கு மண்டல ஐ.ஜி.,யான ஜாங்கிட் வடமாநில கொள்ளை கும்பலை பிடிக்க வியூகம் வகுத்தார். அப்போது விழுப்புரம் மாவட்டத்தில் எஸ்.ஐ.,யாக இருந்தவர் தில்லை நடராஜன். துப்பாக்கி சுடுவதில் கெட்டிக்காரர். இவரை தனிப்படையில் சேர்த்தார் ஜாங்கிட். வடமாநில கொள்ளைக்காரன் பவாரியா என்கவுன்டரில் முக்கிய பங்காற்றியவர் தில்லை நடராஜன். பதவி உயர்வில் இன்ஸ்பெக்டரான தில்லை நடராஜன் புறநகரில் வேலை பார்த்து வந்தார். ஒரு மாதத்திற்கு முன்னர் சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள மாநகர ரவுடிகள் கண்காணிப்பு பிரிவு இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டார். நேற்று பங்க் குமாரை என் கவுன்டர் செய்தவரும் தில்லை நடராஜன் தான்.

பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்தவன்... "பங்க்' குமாரின் கொலைகளும், கட்டப்பஞ்சாயத்து விவகாரங்களும் வெளியே தெரிந்தன. ஆனால், அவனது பல அட்டூழியங்கள் வெளியே வரவில்லை. சைதாப்பேட்டை மற்றும் மாம்பலம் பகுதியில் வசித்தவர்களுக்கு மட்டுமே இது தெரிந்த விஷயம். அழகான பெண்களை கண்டால், தனது வேலைகளை காட்டத் தொடங்கிவிடுவான். அந்த பெண்ணின் வீட்டை கண்டுபிடித்து, ராத்திரியில் அந்த வீட்டுக்கு போய்விடுவான். இப்படி பல பெண்களை மானப்பங்கம் செய்தவன் "பங்க்' குமார். இப்படி பாதிக்கப்பட்டவர்கள் யாருமே புகார் கொடுத்தது கிடையாது. காரணம், குடும்ப மானம் போய்விடும் என்பதால். மாம்பலத்தில் ஒரு நபரின் வீட்டில் இருந்த பெண் மீது கண் வைத்த இவன், பல ராத்திரியில் அந்த வீட்டிற்கு சென்றுவிட்டான். அந்த குடும்பத்தில் இருப்பவர்களால் வெளியே சொல்லவும் முடியவில்லை. அவனை எதிர்த்து போராடவோ, புகார் கொடுக்கவோ தைரியம் இல்லாதவர்கள். அந்த குடும்பம் கடைசியில் வீட்டை காலி செய்து கொண்டு, எங்கோ சென்றுவிட்டது. இப்படி பல பெண்களின் வாழ்வை சீரழித்தவன் தான் "பங்க்' குமார். கடைசியில் மனைவியின் தங்கையான ஹேமாவையும் துப்பாக்கி முனையில் பெங்களூருக்கு கடத்திச் சென்று கற்பழித்தான். இது தொடர்பாக மட்டுமே விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்று பதிவானது. மற்றபடி அவனால், பாதிக்கப்பட்ட எந்த பெண்ணும் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்தது இல்லை.

செய்தி: தினமலர்

Wednesday, December 06, 2006

சிபுசோரனுக்கு ஆயுள்சிறை!

கொலை வழக்கில் கைதான முன்னாள் மத்திய மந்திரி
சிபுசோரனுக்கு ஆயுள் தண்டனை
ரூ. 5 லட்சம் அபராதமும் விதித்து டெல்லி கோர்ட்டு தீர்ப்பு


கொலை வழக்கில் கைதான முன்னாள் மத்திய மந்திரி சிபுசோரனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி டெல்லி கோர்ட்டு தீர்ப்பு கூறியது. மேலும் ரூ.5 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறப்பட்டது.

புதுடெல்லி, டிச.6-

முன்னாள் மத்திய மந்திரியும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவருமான சிபுசோரனிடம் உதவியாளராக இருந்தவர் சசிநாத் ஜா.

இவர் கடந்த 1994-ம் ஆண்டு டெல்லியில் உள்ள அவரது வீட்டில் இருந்து கடத்திச் செல்லப்பட்டு மர்மமான முறையில் கொல்லப்பட்டார். இக்கொலை குறித்து சி.பி.ஐ. புலன் விசாரணை நடத்தியது.

5 பேர் மீது வழக்கு

கொலையில் சிபுசோரனுக்கு முக்கிய பங்கு இருப்பதை சி.பி.ஐ. கண்டுபிடித்தது. அவர் தீட்டிய சதித்திட்டப்படி, நந்தகிஷோர் மேத்தா, சைலேந்திர பட்டாச்சார்யா, பசுபதிநாத் மேத்தா, அஜய்குமார் மேத்தா ஆகியோர் இந்த கொலையை செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 1998-ம் ஆண்டு சிபுசோரன் உள்பட 5 பேர் மீதும் சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு விசாரணை டெல்லியில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டில் நடந்து வந்தது.

குற்றவாளி

இதற்கிடையே, மன்மோகன்சிங் அரசில் சிபுசோரன் மத்திய மந்திரியாக பதவி ஏற்றார். இருப்பினும் விசாரணை தொடர்ந்து நடந்தது. கடந்த 28-ந் தேதி இவ்வழக்கில் நீதிபதி பி.ஆர்.கேதியா தீர்ப்பு அளித்தார். சிபுசோரன் உள்பட 5 பேரும் குற்றவாளிகள் என்று அவர் தீர்ப்பு அளித்தார். தீர்ப்பை கேட்பதற்காக கோர்ட்டுக்கு வந்திருந்த சிபுசோரனை கோர்ட்டு வளாகத்திலேயே போலீசார் கைது செய்தனர். அவர் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். அதை பிரதமர் மன்மோகன்சிங் ஏற்றுக் கொண்டார்.

கைது செய்யப்பட்ட சிபுசோரன், நெஞ்சுவலி காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதனால் அவருக்கு தண்டனை விவரம் அறிவிப்பதில் சில நாட்கள் தாமதம் ஏற்பட்டது. சிகிச்சை முடிவடைந்து சிபுசோரன், டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

பரபரப்பு விவாதம்

அதையடுத்து, நேற்று சி.பி.ஐ. கோர்ட்டில் சிபுசோரன் உள்ளிட்ட 5 பேருக்கு தண்டனை வழங்குவது குறித்து பரபரப்பு விவாதம் நடைபெற்றது. சிபுசோரன், கோர்ட்டில் ஆஜர்படுëத்தப்பட்டார். சிபுசோரன் தரப்பு வக்கீல் ஆனந்த், சிபுசோரனுக்கு குறைந்த தண்டனை அளிக்குமாறு வாதாடினார். அவர் வாதிடுகையில் கூறியதாவது:-

சிபுசோரன், ஜார்க்கண்ட் மாநிலம் உருவாக பாடுபட்டவர். அம்மாநிலத்தின் பழங்குடி மக்கள் மேம்பாட்டுக்காக பாடுபட்டவர். எனவே தண்டனையை நிர்ணயிக்கும்போது அவரது தகுதியையும், பின்னணியையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அவர் சமூகத்துக்கு அச்சுறுத்தலாக இருக்க மாட்டார். எனவே அவரை நிபந்தனைகளுடன் விடுதலை செய்யலாம்.

இவ்வாறு ஆனந்த் வாதாடினார்.

சி.பி.ஐ. வக்கீல் கோரிக்கை

ஆனால் சி.பி.ஐ. வக்கீல் ஏ.கே.சிங் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். அவர் கூறியதாவது:-

சிபுசோரன் உத்தரவின் பேரில் நந்தகிஷோர் மேத்தா இந்த படுகொலையை செய்தார். சிபுசோரனிடமிருந்து அரசியல் ஆதாயம் பெறும் நோக்கத்தில் கொலை செய்ய நந்தகிஷோர் மேத்தா சம்மதித்தார். அவர் சசிநாத் ஜாவை தனது வீட்டுக்கு விருந்துக்கு வருமாறு அழைத்தார். அங்கு வந்த சசிநாத் ஜாவை ரகசியமாக கொலை செய்தார். இதற்காக அவருக்கு சட்டசபை தேர்தலில் போட்டியிட சிபுசோரன் டிக்கெட் கொடுத்தார்.

மேலும், நரசிம்மராவ் அரசு மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு எதிராக ஓட்டு போட ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர்கள் லஞ்சம் வாங்கியது, சசிநாத் ஜாவுக்கு தெரிந்து விட்டதால்தான் அவர் கொல்லப்பட்டு உள்ளார். எனவே, இது சாதாரண குற்றம் அல்ல. அசாதாரண சூழ்நிலையில் சசிநாத் ஜா கொலை செய்யப்பட்டு இருப்பதால், சிபுசோரனை விடுவிக்க கோருவது ஏற்புடையது அல்ல.

மரண தண்டனை அளிக்க வேண்டும்

தன் மீது சசிநாத் ஜா வைத்திருந்த நம்பிக்கையை சிபுசோரன் சீர்குலைத்து விட்டார். எனவே இந்த வழக்கு அரிதினும், அரிதான வழக்காக இருப்பதால், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும். கொலைக்கு சதித்திட்டம் தீட்டியதில் சிபுசோரன் முக்கியப்பங்கு வகித்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கு, பாராளுமன்றம் தாக்கப்பட்ட வழக்கு ஆகியவற்றில் நேரடியாக காரியத்தில் ஈடுபட்டவர்களுக்கு அளித்த அதே தண்டனை, சதித்திட்டம் தீட்டியவர்களுக்கும் அளிக்கப்பட்டு உள்ளது. எனவே, இந்த வழக்கில் சதித்திட்டம் தீட்டிய சிபுசோரனுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் வாதாடினார்.

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி பி.ஆர்.கேதியா, மாலை 4.30 மணிக்கு தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என்றார். அதன்படி தண்டனை விவரத்தை அறிய மாலை 4.30 மணிக்கு பத்திரிகையாளர்கள் கோர்ட்டு முன்பு திரண்டனர். ஆனால் மாலை 5.30 மணிக்கு தள்ளி வைப்பதாக நீதிபதி அறிவித்தார்.

ஆயுள் தண்டனை

அதன்படி, மாலை 5.30 மணிக்கு நீதிபதி பி.ஆர்.கேதியா தண்டனை விவரத்தை அறிவித்தார். சிபுசோரன் உள்பட 5 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிப்பதாக அவர் அறிவித்தார். மேலும், சிபுசோரனுக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்தார். இந்த தொகையில் ரூ.1 லட்சத்தை சசிநாத் ஜாவின் தாயாருக்கும், தலா ரூ.2 லட்சத்தை சசிநாத் ஜாவின் 2 மகள்களுக்கும் பிரித்து அளிக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.

குற்றவாளிகளான மற்ற 4 பேரும் தலா ரூ.15 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். தீர்ப்பை கேட்டவுடன் சிபுசோரன் அதிர்ச்சி அடைந்தார்.

அப்பீல்

இந்த உத்தரவை எதிர்த்து அப்பீல் செய்ய சிபுசோரன் உள்ளிட்ட 5 பேருக்கும் 3 மாத கால அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது. சிபுசோரன் தற்போது எம்.பி. ஆக உள்ளார். இருப்பினும் தண்டனையை எதிர்த்து அப்பீல் செய்தால், அவரது எம்.பி. பதவிக்கு ஆபத்து இல்லை.

தண்டனையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்போவதாக சிபுசோரனின் வக்கீல் நிருபர்களிடம் கூறினார்.

செய்தி: தினத்தந்தி.