Friday, November 03, 2006

ஸ்ரீவித்யா பற்றி கணேஷ்

நடிகை ஸ்ரீவித்யாவின் கடைசி நிமிடங்கள்
டி.வி. நடிகர் கணேஷ்குமார் பேட்டி


சென்னை, நவ.3-

மறைந்த நடிகை ஸ்ரீவித்யாவின் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? என்பது பற்றி, அவருக்கு உறுதுணையாக இருந்த டி.வி.நடிகர் கணேஷ்குமார் பேட்டி அளித்தார்.

பேட்டி

கணேஷ்குமார், கேரளாவில் போக்குவரத்து துறை மந்திரியாக இருந்தவர். இப்போது டெலிவிஷன் படங்களில் நடித்து வருகிறார். ஸ்ரீவித்யா கடைசியாக நடித்த `அம்மா தம்புராட்டி' தொடரில், அவருடன் கணேஷ்குமாரும் நடித்து இருக்கிறார்.

இவர்தான் ஸ்ரீவித்யாவின் இறுதி காலத்தில், அவருக்கு ஆதரவாக இருந்தவர். ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்தவரும் இவர்தான். ஸ்ரீவித்யாவின் கடைசி நிமிடங்கள் பற்றி, கணேஷ்குமார் பேட்டி அளித்து இருக்கிறார்.

அதில் கூறியிருப்பதாவது:-

``ஸ்ரீவித்யா தனது கடைசி காலத்தில், யாரையும் சந்திக்க அனுமதிக்கவில்லை. தனது இறுதி கால தோற்றம் வெளியுலகுக்கு தெரியக்கூடாது என்று விரும்பினார். கமலஹாசன் வருவதாக தகவல் வந்ததும், அவரை மட்டும் சந்திக்க அனுமதி கொடுத்தார். ஆனால் பத்திரிகை நிருபர்கள், புகைப்படக்காரர்களை உள்ளே விடக்கூடாது என்று கூறினார்.

10 நிமிடங்கள்

நான் பத்திரிகை நிருபர்கள், புகைப்படக்காரர்களை தடுத்து நிறுத்தியதற்காக, அவர்களின் கோபத்துக்கு ஆளானேன். ``ஸ்ரீவித்யாவின் எல்லா சொத்துக்களையும் நீங்கள் எழுதி வாங்கிக்கொண்டதாக பேசப்படுகிறதே...'' என்று ஒரு நிருபர் கேட்டார். அதற்கு நான் எந்த பதிலும் சொல்லவில்லை.

கமலஹாசன் உள்ளே வந்ததும், 10 நிமிடங்கள் எதுவும் பேசவில்லை. இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டிருந்தார்கள். வெளியே வந்தபின் கமலஹாசன், ``பிரச்சினை எதுவும் இல்லை. ஸ்ரீவித்யாவுக்கு ஒன்றும் ஆகாது'' என்று என்னிடம் கூறினார்.

தங்க சங்கிலி

ஸ்ரீவித்யா இறப்பதற்கு சில மாதங்கள் முன்பு, சோகம் கலந்த புன்னகையுடன் ஒரு விஷயத்தை என்னிடம் கூறினார். ``இளம் வயதில் எங்கள் குடும்பமும், லலிதா-பத்மினி-ராகினி குடும்பமும் அருகருகே வசித்து வந்தோம். ராகினி ஒரு தங்க சங்கிலி அணிந்து இருந்தார். அதை வாங்கி நானும் அணிந்திருந்தேன். ராகினி புற்று நோயினால் இறந்து போனார். அதைப்போலவே எனக்கும் புற்றுநோய் வந்துவிட்டது'' என்று ஸ்ரீவித்யா சொன்னார்.

ஸ்ரீவித்யாவின் கணவர் ஜார்ஜ் தாமஸ், ஒரு பட அதிபர். அவருக்கும், ஸ்ரீவித்யாவுக்கும் ஏற்பட்ட சொத்து தகராறில், ஸ்ரீவித்யாவுக்கு சாதகமாக சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வந்ததும், ஸ்ரீவித்யா சம்பந்தப்பட்ட வீடியோ கேசட்டுகளை, ஜார்ஜ் தாமஸ் அந்த வீட்டு ஹாலில் போட்டு எரித்து விட்டார்.

ஸ்ரீவித்யாவை விட்டு பிரிந்த ஜார்ஜ் தாமஸ், மீனா மேனன் என்ற நடிகையை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். அவர் மூலம் மீனா மேனனுக்கு ஒரு குழந்தை இருக்கிறது.''

இவ்வாறு கணேஷ்குமார் கூறினார்.

செய்தி: தினத்தந்தி

No comments: